குறுந்தொகை


lvi


நாய்

     தலைவன் வேட்டையாடும் பொருட்டு வருகையில் நாயோடு வருவான். அது கடமா முதலிய விலங்குகளைத் துரத்தி அலைத்து அவனுக்குத் துணை புரியும். சில சாதியினர் தம்முடைய வீடுகளில் நாயை வளர்ப்பர். அவர் வீட்டு வாயிலில் அது காவல் புரியும். அங்ஙனம் நாய் இல்லாத அந்தணர் வீட்டு வாயிலை ஒரு புலவர், “நாயில் வியன்கடை” என்று சிறப்பிக்கின்றார்.

  
நீர்நாய்

     இது நீரில் வாழ்வது; பிரம்பின் தூற்றில் தங்கி இருக்கும். இது வாளை மீனை உணவாகக் கொள்ளும். இதன் உடலிலே கோடுகள் இருக்கும் என்றும் அவை பிரப்பம்பழத்தின் மேலுள்ள கோடுகளைப் போலத் தோற்றுமென்றும் தெரிய வருகின்றது.

  
பசுவும் ஆனேறும்

     ஆனிரை முல்லை நிலத்துக்குரியது; காலையில் மேய் புலத்திற்குச் சென்று மேய்ந்து விட்டு மாலையில் வீட்டிற்குத் திரும்பி வரும். வருங்கால் பசுக்கள் கன்றை நினைந்து மடியில் பால் சுரப்ப வரும் காட்சி ஒரு செய்யுளில் சொல்லப்படுகின்றது. தன் தாய்ப்பசுவின் வரவைக் கன்று மாலைக் காலத்தில் எதிர்நோக்கி நிற்கும். பசுவிற்கும் கன்றுக்குமிடையே உள்ள அன்பு மிகச் சிறந்தது; ஆதலின் அதனைத் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையேயுள்ள அன்பிற்கு உவமை கூறுவர்.

     பசு அறுகம்புல்லை உண்பதில் விருப்பமுடையது. முதிய பசு இளம்புல்லைக் கடித்து உண்ண முடியாவிடினும் நாவினால் தடவு மட்டில் ஒருவகை இன்பத்தைப் பெறும். பசுவின் அலை தாடியை அணல் என்பர். அது நிலத்தளவும் நாலும்.

    பசுவின் நிரையோடு ஏறும் இருக்கும்; ஆதலில் அந்நிரையை, “ஏறுடையினம்” என்பர். அவ்வேற்றின் கழுத்தில் மணி கட்டுதல் வழக்கம். இராக் காலத்தில் அம்மணியின் ஒலியைக் கேட்டு தலைவி வருந்துவாள். பசுக்கள் தங்குமிடம் தொழுவம், மன்று, மன்றமெனக் கூறப்படும்.

     எருது உழவிற்குப் பயன்படும். அது வேனில் காலத்தில் உழாது சோம்பி இருக்கும்; வெப்ப மிகுதியினால் மெலிவடையும்.

  
பல்லி

     பல்லி பாலை நிலத்தில் கள்ளியில் இருப்பதாகக் கூறப்படுகின்றது. இதன் கால் செந்நிறமானது. இது தன் துணையை அழைக்கும் ஓசைக்குக் கானவர் தம் நகத்தில் அம்பைப் புரட்டும் ஓசையைப் பாலை பாடிய பெருங்கடுங்கோ உவமை கூறுவர்.