குறுந்தொகை


xcix


சான்றோர் தம்மைப் புகழ்ந்தால் நாணம் அடைவர் என்பதும் பழியைப் பொறாரென்பதும்,

  
“சான்றோர், புகழு முன்னர் நாணுப 
  
 பழியாங் கொல்பவோ”             (252)  

என்பதாலும் வறியவருக்கு ஈந்து அன்புடையராய் இருத்தலே நன்றென்பதும் அங்ஙனம் இராமை நன்றன்று என்பதும்,

  
“நல்கின் வாழு நல்கூர்ந் தோர்வயின் 
  
 நயனில ராகுத னன்றென வுணர்ந்த 
  
 குன்ற நாடன் றன்னினு நன்று”         (327)  

என்பதாலும் ஒருவருக்கு வழங்கிய பொருளை மீட்டும் பெறுதல் இழிவென்ற நீதி,

  
“இடுக்க ணஞ்சி யிரந்தோர் வேண்டிய  
  
 கொடுத்தவை தாவென் சொல்லினும்  
  
 இன்னா தோநம் மின்னுயி ரிழப்பே”     (349)

என்பதனாலும் கடமையை உணர்ந்தவர்கள் சான்றோரைக் கண்டால் இடம் கொடுத்து வரவேற்பர் என்னும் செய்தி,

  
“தாமறி செம்மைச் சான்றோர்க் கண்ட 
  
 கடனறி மாக்கள் போல விடன்விட்டு”     (265)

என்பதாலும் வெளியாகின்றன. இவை அறம் பற்றிய நீதிகள்.

  
“இல்லோ னின்பங் காமுற் றாங்கு”         (120)
  
“இல்லோர் வாழ்க்கை யிரவினு மிளிவு”     (283)

என்பன வறுமையின் இழிவைப் புலப்படுத்துவன.

  
“உள்ளது சிதைப்போ ருளரெனப் படாஅர்”    (283) 
  
“வினையே யாடவர்க் குயிரே”     (135) 

என்பவை முயற்சியின் இன்றியமையாமையை அறிவுறுத்துகின்றன.

  
“... .. .. இனத்தி னியன்ற 
  
 இன்னா மையினு மினிதோ 
  
 இனிதெனப் படூஉம் புத்தே ணாடே”     (288) 
  
‘’மருவி னினியவு முளவோ”             (322) 

என்பவை நட்பின் பெருமையை எடுத்து உரைக்கின்றன.

  
“நில்லா மையே நிலையிற்று”         (143) 

என்பது நிலையாமையைக் கூறுகின்றது.