அமுத மயமாகிய நெல்லிக் கனி பெற்று அவனைப் புகழ்ந்தார். இது புறநானூறு, 91-ஆம் செய்யுளாலும், திருக்குறள், 100-ஆம் செய்யுளுக்குப் பரிமேலழகர் எழுதிய விசேட உரையாலும், “பூங்கமல வாவிசூழ் புல்வேளூர்ப் பூதனையும், ஆங்குவரும் பாற்பெண்ணை யாற்றினையும் - ஈங்கே, மறப்பித்தாய் வாழதிகா வன்கூற்றி னாவை, அறுப் பித்தா யாமலகந் தந்து” என்னும் வெண்பாவாலும் வெளி யாகின்றது. இவரால் பாடப்பட்டோர்: அதியமான் நெடு மானஞ்சி, தொண்டைமான், அதியமான் மகன் பொகுட் டெழினி, நாஞ்சில் வள்ளுவன், சேரமான் மாவெண்கோ, பாண்டியன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்பார். இவர் இயற்றிய பாடல்கள் புறநானூற்றிலன்றி நற்றிணையிலும், அகநானூற்றிலும், தொல்காப்பிய உரையிலும், யாப்பருங்கல விருத்தியுரை முதலியவற்றிலும் காணப்படுகின்றன. ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, அசதிக்கோவை முதலியன இவர் இயற்றிய நூல்கள் என்பர். இவர் அவ்வச் சமயத்துச் செய்தனவாக உள்ள தனிப் பாடல்கள் மிகப் பல. பகைவரை நோக்கிக் கூறுவார்போல, அதியமான் நெடுமானஞ்சியின் குணங்களை இவர் பாராட்டிக் கூறியிருக்கும் பகுதிகளும் அவனால் தூதனுப்பப் பட்டுச் சென்ற பொழுது தன் மேம்பாட்டைப் புலப்படுத்தற் பொருட்டுத் தொண்டைமான் தன் படைக்கலக் கொட்டிலைக் காட்டக் கண்டு அப்படைக்கலங்களைப் புகழ்வார்போல அதியமானது போர்த் திறத்தை வெளிப்படுத்தியிருக்கும் பகுதியும் மிக்க விம்மிதத்தை விளைவிக்கும். அதியமான் கோவலூரெறிந்ததனைப் பரணர் பாடியதையும் (புறநா. 96), மூவேந்தரும் சேனைகளுடன் பாரியை வெல்லக் கருதி அவன் நகரைச் சூழ்ந்து புகல் போக்கின்றித் தடுத்த போது பறவைகளால் நெற் கதிரைப் புறத்திருந்து வருவித்து உள் நகரத்தாரைப் பசியால் வருந்தாதபடி பாதுகாத்தளித்த கபிலர் செய்தியையும் (அகநா. 303), தம் கணவரது பிரிவாற்றாது வருந்திய வெள்ளி வீதியார் என்னும் புலமை வாய்ந்த பெண் பாலாருடைய துன்ப மிகுதியையும் (அகநா. 147) புலப்படுத்தி இருத்தல் புலவரிடத்து இவருக்குள்ள பேரன்பை விளக்குகின்றது; பழையனூர்க் காரிக்காகச் சென்று ஆடொன்று கேட்டபோது, சேரன் இவருடைய மேம்பாட்டை நினைந்து, பொன்னால் ஓர் ஆடு செய்வித்து அளிக்க, இவர் அதனைப் பெற்று மனம் மகிழ்ந்து, “சேரா! உன்னாடு