குறுந்தொகை


cxxix


செறிதுனி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க், கல்பொரு சிறுநுரை போல, மெல்ல மெல்ல வில்லா குதுமே’ என்று கூறுவதாகப் பாடினமையின் இவர் இப்பெயர் பெற்றார்.

    கல்லாடனார் (260, 269): கல்லாடம் என்னும் ஊரினராதலின் இவர் இப் பெயர் பெற்றார் போலும்; “கல்லாடத்துக் கலந்தினி தருளி” (திருவா. கீர்த்தி.) என்பதை நோக்குக. தொல்காப்பியத்திற்கு உரை செய்தவர்களுள் கல்லாடர் என்பவரும் ஒருவர்; “ஒல்காப் பெருமைத் தொல்காப்பியத்திற், குரையிடை யிட்ட விரகர்கல் லாடர்” என்னும் ஆன்றோர் வாக்கால் உணர்க. அவர் வேறு, இவர் வேறு. இவருடைய பாடல்களில் பகைவருடைய நீர்நிலையைக் கெடுத்தல், கடிமரந்தடிதல், அவர் முரசைக் கைக்கொள்ளல் முதலிய தலைவர்களின் வீரச் செயல்களும், பகைவர் இறந்த பின் அவருடைய மனைவிமார் கைம்மை நோன்பு நோற்றிருத்தலும் கூறப் பெற்றுள்ளன. இவர் கிணைப் பொருநனாகத் தம்மைக் காட்டி அவன் செயல்களை முறையே சொல்லிச் செல்லும் மறக்கள வழி, ஏர்க் களவுருவகம் என்னும் துறைகள் நயப்பாடுடையன. பகைவரைக் கொன்ற இடத்து அவருடைய பெண்டிர் தம் இளம் புதல்வரைப் பாதுகாக்கும் நிமித்தம் இறந்து படாமல் இலைகளைத் தின்று உயிர் வாழ்தலைப் புலப்படுத்தி இவர் கூறியிருக்கும் செய்யுள் யாருடைய மனத்தையும் கனியச் செய்யும். பதினோராம் திருமுறையில் உள்ள திருக் கண்ணப்பத் தேவர் மறம் என்னும் நூல் ஒன்று இவர் செய்ததாகக் கூறுவர். பன்னிரு பாட்டியலில் இவர் செய்தனவாகச் சில சூத்திரங்கள் உள்ளன. இலக்கண உரைகளில் கல்லாட மாமூலர் என்று ஒரு தொடர் மொழி இருத்தலால் மாமூலரோடு இவர் நட்புடையவர் என்றும் சொல்லலாம். எட்டுத் தொகையுள் இவர் இயற்றிய வேறு பாடல்கள் 12 (அகநா. 7; புறநா. 5). திருவள்ளுவ மாலையில் இவர் இயற்றிய செய்யுளெரன்று உள்ளது. இவரால் பாடப் பெற்றோர்: அம்பர் கிழானருவந்தை, பாண்டியன் தலையாலங் கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன், புல்லி, பொறையாற்றுக் கிழானென்பர்.

    கவைமகனார் (324): இரட்டைப் பிள்ளைகளைக் கவை மகவெனக் கூறி அவர்கள் நஞ்சுண்டதை உவமையாக எடுத்தாண்டமையின் இவர் இப்பெயர் பெற்றார்.

    கழார்க் கீரனெயிற்றியார் (35, 261, 330): கீரன் என்பவருக்கு உறவினர் போலும். இவர் பெண்பாற் புலவர். கழார் என்பது மாயூரத்திற்கு அருகில் இருக்கும் ஓர் ஊர். இப்புலவரே