‘அருளையே பெறுதற்குரிய பொருளாகக் கருதினாராயின் அவ்வருளைத்துறவாது என்பால் இரக்கம் பூண்டு ஈண்டே இருப்பர்’ என்பது தலைவியின் நினைவு. வலித்து வல்லுநரென்றது தோழியை.
‘சந்திர கிரகணம் வந்தகாலத்தில் அதைக்கண்டு பல பேசிப் பின் துயில்வாரைப் போலத் தோழி என் துயரைக் கண்டு பலகூறி வற்புறுத்திப்பின் இனிதே துயின்றாள்’ என்பது பட உவமை நின்றது.
இவணென்றது இவ்வுலகத்தைக் குறித்தது (புறநா. 50:14.)
‘தலைவர் அருள் பொருளென்னாராகித் துணிந்து என்னைப் பிரியும் வன்மை பெற்றார்; ஈண்டுள்ளாரில் என் துயரத்தைக் களையாராயினும் யான் துயிலும்படியாவது அஞ்சலென்று கூறுவாரில்லை’ என்று பொருள் கொள்ளுதலும் ஆம்.
தலைவன் உள்ளவிடத்துப் போவேமாகவென்று தலைவி கூறும்மரபு,
| “காமக் கிழவ னுள்வழிப் படினும் |
| தாவி னன்மொழி கிழவி கிளப்பினும்” (தொல். களவு. 22) |
என்னும் இலக்கணத்தாற் பெறப்படும். அங்ஙனம் போவதாயின் நாண்அழியும்;
| “பகலே பலருங் காண நாண்விட் |
| டகல்வயற் படப்பையவனூர் வினவிச் |
| சென்மோ” (நற். 365:3-5, பி-ம்.) |
நீங்கப்படினென்றது, நீங்கும் விருப்பத்தையும் அது செய்தலருமையையும் புலப்படுத்தியது.
ஏகாரங்கள், ஓ, தான்: அசை நிலைகள்.
ஒப்புமைப் பகுதி 2. அருள் பொருளென்னார்: (குறுந். 20:1-2, ஒப்பு.); “பொருள் வயிற் பிரிதல் வேண்டு மென்னும், அருளில் சொல்லு நீ சொல்லினையே” (கலித். 21:4-5.)
3. வல்லுநர்: குறுந். 180:7.
2-3. தலைவன் அன்பும் அருளும் இன்றிப் பிரிதல்: குறுந். 21:1-2, ஒப்பு.
4. அரவு நுங்குமதி: “பாம்புசேர் மதிபோல” (கலி. 15:17);“அரவுநுங்கு மதியி னையென மறையும்”, “அரவுநுங்கு மதியி னுதலொளி கரப்ப” (அகநா. 114:5, 313:7); “அங்கண் மதிய மரவின் வாய்ப்பட்டென”(தொல்.அகத். 3, ந. மேற்.); “காளமாசுணங் கதிர்மதிக் குழவியைக், கோளிழைத் திருக்குங் கொள்கை போல” (திருவாரூர். மும். 25.)
7. அளிதோதானே: குறுந். 212:4, ஒப்பு.
மு. குறுந். 149:1.
8. தலைவி தலைவன் இருக்குமிடஞ் செல்ல நினைத்தல்: குறுந். 11.
(395)