(பி-ம்.) 1. ‘நனைமுது’, ‘நனைமரு’, ‘றினைமருள்’; 2. ‘பெய்தபோல’: 5. ‘டன்னா யென்னும்’; 7. ‘நின்னல திலளென்’; 8. ‘தன்னுடை யின்னல்’,‘விலரே’.
(ப-ரை.) நனை முதிர் ஞாழல் சினை மருள் திரள் வீ - அரும்புகள் முதிர்ந்த ஞாழலினது முட்டையைப் போன்ற திரண்ட மலர்களை, நெய்தல் மா மலர் பெய்தல் போல -நெய்தலது கரிய மலரிலே பெய்வதைப்போல, ஊதைதூற்றும் - குளிர்காற்றுத் தூவுகின்ற, உரவு நீர் சேர்ப்ப - வன்மையையுடைய கடற்கரைக்குத் தலைவ, தாய் உடன்றுஅலைக்கும் காலையும் -தாய் மாறுபட்டு வருத்திய பொழுதும், வாய்விட்டு அன்னா என்னும் குழவிபோல - வாய்திறந்துஅன்னையே என்று அழும் குழந்தையைப் போல, என்தோழி - என் தோழியாகிய தலைவி, இன்னா செயினும் -நீ இன்னாதவற்றைச்செய்தாலும், இனிது தலையளிப்பினும் -இனிதாகத் தலையளி செய்தாலும், நின் வரைப்பினள் - நின்னாற் புரக்கப்படும் எல்லைக்கு உட்பட்டவள்; தன் உறுவிழுமம் களைஞர் இலள் - நின்னையன்றித் தனது மிக்கதுன்பத்தை நீக்குவாரைப் பெற்றிலள்.
(முடிபு) சேர்ப்ப, இன்னாசெயினும் இனிது தலையளிப்பினும் என் தோழி நின்வரைப்பினள்; விழுமம் களைஞர் இலள்.
(கருத்து) நீ தலைவியினது துன்பங்கருதி விரைவில் வருவாயாக.
(வி-ரை.) ஞாழல்வீ, சினைமருள்வீ யென்று கூட்டுக. ஞாழலினது பூ ஐயவி போன்றதென்று கூறுதலாலும் (குறுந். 50:1), ஐயவிக்கு ஆரல் முட்டையை உவமை கூறுதலாலும் (புறநா. 342:9) இங்கே சினை யென்றது ஆரன்மீன் முட்டையையென்று கொள்க. தினைமருளென்னும் பாடத்திற்குத் தினையை யொத்தவென்று பொருள் கொள்க.
ஞாழலிலுள்ள பூக்களை நெய்தல் மலர் நிறையும்படி உதிர்த்தமையின் ‘பெய்தல் போல’ என்றாள். உரவு நீர் - உலாவும் நீரெனலுமாம்.
அன்னையென்பது விளியேற்று அன்னாவென நின்றது (குறுந்.161:4); “ஆவன்னா வன்னா வலந்தே னெழுந்திராய்” (பழம் பாடல்.)
‘அன்னை அலைப்பினும், அணைப்பார் பிறரின்றி அவள் மாட்டே
செல்லும் குழவிபோல, நீ அருளின்றிப் பிரியினும் நின் மாட்டே
செல்லும் காதலுடையாள் தலைவி’ என்று உவமையை விரித்துக் கொள்க.
ஓ, ஏ: அசை நிலைகள்.
இதனால், விரைவில் இவள் துன்பத்தைக் களைய வருதல் கடனென்பதைத் தோழி உணர்த்தினாள்.