(து - ம்.) என்பது, தலைமகன் இரவுக்குறி வருதலானே ஏதப் பாடுண்டாமாதலின் அதனை விலக்கி மணம்புரிந்து கொள்ளுமாறு கூறக்கருதிய தோழி, தலைவனை நெருங்கி 'நாடனே, இவளுயிர் வருந்தும் வண்ணம் இரவிலே நீ இங்கு வருதல் பண்புடையதன்றுகா'ணென மறுத்துக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் . . . . . .அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதியின்கண் அமைத்துக் கொள்க.
| சுரும்புண விரிந்த கருங்கால் வேங்கைப் |
| பெருஞ்சினைத் தொடுத்த கொழுங்கண் இறாஅல் |
| புள்ளுற்றுக் கசிந்த தீந்தேன் கல்லளைக் |
| குறக்குறு மாக்கள் உண்ட மிச்சிலைப் |
| 5 | புன்தலை மந்தி வன்பறழ் நக்கும் |
| நன்மலை நாட பண்பெனப் படுமோ |
| நின்நயந் துறைவி இன்னுயிர் உள்ளாய் |
| அணங்குடை அரவின் ஆரிருள் நடுநாள் |
| மைபடு சிறுநெறி எஃகுதுணை ஆக |
| 10 | ஆரங் கமழும் மார்பினை |
| சாரல் சிறுகுடி ஈங்குநீ வரலே. |
(சொ - ள்.) சுரும்பு உண விரிந்த கருங் கால் வேங்கைப் பெருஞ்சினைத் தொடுத்த கொழுங்கண் இறாஅல் - வண்டுகள் உண்ணுமாறு மலர் விரிந்த கரிய அடிமரத்தையுடைய வேங்கையின் பெரிய கிளையிலே தொடுத்த கொழுவிய கண்களையுடைய தேனடையிலே; புள் உற்று கசிந்த கல் அளைத் தீம் தேன் - தேனீக்கள் மொய்த்தலாலே கசிந்து கல்லின் குழிகளில் வடிந்த இனிய தேன்; குறக் குறு மாக்கள் உண்ட மிச்சிலை - குறவரின் இளமகாஅர் வழித்துண்டெஞ்சியதை; புல் தலை மந்தி வல் பறழ் நக்கும் நல் மலை நாட - மெல்லிய தலையையுடைய மந்தியின் வலிய குட்டிகள் சென்று உண்ணாநிற்கும் நல்ல மலைநாடனே!; நின் நயந்து உறைவி இன் உயிர் உள்ளாய் - நின்னை விரும்பியுறையும் இவளது இனிய உயிர் படுகின்ற துன்பமின்னதென்று கருதாமல்; அணங்கு உடை அரவின் ஆர் இருள் நடு நாள் மைபடு சிறுநெறி - வருத்துந் தன்மையுடைய பாம்புகள் இயங்குகின்ற வருதற்கரிய இரவின் நடுயாமத்தில் மயக்கந்தருகின்ற சிறிய வழியின் கண்ணே; எஃகு துணை ஆக ஆரம் கமழும் மார்பினை - நின் கையிலேந்திய வேற்படையையே நினக்குரிய துணையாகக் கொண்டு சந்தனம் பூசுதலால் அதன் நறிய மணங்கமழ்கின்ற மார்பினையுடையையாய்; சாரல் சிறுகுடி ஈங்கு நீ வரல் பண்பு எனப்படுமோ - சாரலின்கணுள்ள சிறுகுடியாகிய இவ்விடத்து நீ தனியே வருதல் தகுதிப்பாடுடையதாமோ? ஆதலின் இனி இங்கு இரவில் வரற்பாலை அல்லைமன்! எ - று.
(வி - ம்.) நீ தனியே வருநெறி கருதிய தலைவி இறந்துபடுமென்பாள் உயிருள்ளாய் என்றாள். நறுநாற்றங்கண்டு அணங்குகள் அணங்கு மென்பதனைக் குறிப்பிப்பாளாய் ஆரங்கமழு மார்பினையென்றாள். அணங்குடை அரவு நெறியென வருநெறி ஏதத்துக் கஞ்சுவது கூறினாள். இவற்றால் நீ வரற்பாலையல்லை மன்னென எதிர்மறை ஏகாரங்கொடுத்து அறிவித்தாளாயிற்று. இஃது அழிவில் கூட்டத்து அவன் புணர்வு மறுத்தல்.
உள்ளுறை :-வேங்கை தலைவியாகவும், சுரும்புணவிரிந்தது ஏதிலாட்டியர் பழிச்சொற் கூறுமாறு பொருந்தியதாகவும், அதனிடத்துள்ள இறாலின்தேன் தலைவியினின்பமாகவும், புள்மொய்த்தல் தமர் சூழ்ந்திருப்பதாகவும், கசிந்து வந்த தேனைக் குறக்குறுமாக்களுண்பது மிக்க நலனைப் பசலையுண்டொழிப்பதாகவும், எஞ்சியதைப் பறழுண்ணுதல் எஞ்சிய நலனை ஒரோவொருகால் தலைவன் துய்ப்பதாகவும் கொள்க. மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - இரவுக்குறி மறுத்து வரைவுகடாதல்.
(பெரு - ரை.) சுரும்பு - வண்டு. இறாஅல் - தேனடை. புள் - வண்டு. கல்லளைக் கசிந்த தீந்தேன் என மாறுக. நின்நாடு நன்மலை நாடாகவும் நீ நல்லையல்லை என்பாள் நன்மலைநாட என்றாள். குறக்குறுமாக்கள் அத்தேனடையை எடுத்துண்ண அறியாது தானே கல்லளையிற் கசிந்த தேனை உண்ணுதல் போன்று நீதானும் தலைவியை வரைந்துகொண்டு நுகராயாய்க் களவின்கண் நுகராநின்றனை, இனி, குறமாக்கள் உண்டெஞ்சிய மிச்சிலை மந்திப்பறழ் நக்கினாற் போன்று நீ நுகர்ந்து எஞ்சிய அவளழகினைப் பசலை யுண்ணா நின்றது என்றாளும் ஆயிற்றென்க. ஆரங்கமழும் மார்பினை என்றது நின்வரவு ஏதிலரானும் அறியப்படுகின்றது என்றற்குக் குறிப்பேதுவாயிற்றென்க.
(168)