திணை : மருதம்.

     துறை : இது, தோழி தலைமகனை நெருங்கிச் சொல்லுவாளாய் வாயில் நேர்ந்தது.

     (து - ம்.) என்பது, பரத்தையிற் பிரிந்துவந்த தலைமகனைக் காதலி புலந்து கொள்ளலும் அதனைத் தோழியாலே தணிக்கக் கருதி அவள் பாலுற்றனனாக. அவனைநோக்கி, "ஊரானே! இப்பெற்றிப்பட்ட எனைத்தும் செல்வமெனப்படுவதன்று; அடைந்தாரைக் காத்தலே செல்வமெனப்படுவது; அச்செயல் நின்பால் இல்லை"யென்று தலைவியூடல் தீரும்வண்ணம் கடிந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, “பிழைத்துவந் திருந்த கிழவனை நெருங்கி இழைத்து ஆங்கு ஆக்கிக் கொடுத்தற் கண்ணும்” (தொல். கற். 9) என்னும் விதிகொள்க.

    
அரிகால் மாறிய அங்கண் அகல்வயல் 
    
மறுகால் உழுத ஈரச் செறுவின் 
    
வித்தொடு சென்ற வட்டி பற்பல 
    
மீனொடு பெயரும் யாணர் ஊர 
5
நெடிய மொழிதலுங் கடிய ஊர்தலும் 
    
செல்வம் அன்றுதன் செய்வினைப் பயனே 
    
சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர் 
    
புன்கண் அஞ்சும் பண்பின் 
    
மென்கண் செல்வஞ் செல்வமென் பதுவே. 

    (சொ - ள்.) அரி கால் மாறிய அம் கண் அகல்வயல் மறுகால் உழுத ஈரச் செறுவின் - நெல் அறுத்து நீங்கப்பெற்ற அழகிய இடமகன்ற வயலின்கண்ணே மறுபடி உழுத ஈரமுடைய சேற்றில்; வித்தொடு சென்ற வட்டி பல் பல மீனொடு பெயரும் - விதைக்கும் வண்ணம் விதைகொண்டு சென்ற கடகப்பெட்டியில் மிகப் பலவாகிய மீன்களைப் பிடித்துப் போகட்டு மீண்டு கொண்டு வருகின்ற; யாணர் ஊர - புதுவருவாயினையுடைய ஊரனே!; நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் செல்வம் அன்று - அரசராலே மாராயம் பெறப்படுதலும் அவர் முன்பாக விரைந்த செலவினையுடைய குதிரை தேர் யானை முதலாகியவற்றை ஏறிச்செலுத்துதலும் (ஆகிய அருஞ்செயல்) செல்வம் எனப்படுவன அல்லகண்டாய்; தன் செய்வினைப் பயனே - அவையனைத்தும் முன்பு தாம் செய்த வினைப்பயனான் எய்தப்படுவனவாகும்; சான்றோர் செல்வம் என்பது - இனிச் சான்றோராலே செல்வம் என்று உயர்த்துக் கூறப்படுவதுதான் யாதோவெனில்?; சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின் மென்கண் செல்வம் செல்வம் என்பது - தம்மை அடைக்கலமாகக் கைப்பற்றியவர்க்கு உண்டாகிய துன்பத்தை அஞ்சி அத்துன்பத்தைப் போக்கி அவரைக் கைவிடாமல் ஆளுகின்ற இயல்புடனே வன்கண்மையின்றி இனிய தன்மையனாயிருக்குஞ் செல்வமேயாம்; அடைக்கலமெனக் கைப்பற்றி யொழுகாநின்ற இவளை நீ கைவிட்டதனாலே அத்தகைய இயல்பு நின்பால் இல்லையென்று அறியக் கிடக்கின்றமையின் இனிக் கூறியாவதென்? எ - று.

     (வி - ம்.) வட்டி - கடகப்பெட்டி.

     நெடியமொழிதலும் கடியவூர்தலும் களவுக்காலத்தே தலைவன் வந்து கூறி நிகழ்த்தியவை; அவற்றை ஈண்டுக் குறிப்பித்தது நீ அத்தகையை யல்லை என்பாள், நின்னைப் புகலிடமாக அடைந்த தலைவியைக் கைவிட்டனை என்பதனாலே பின்னர்க் குறிப்பித்தாள்.

     உள்ளுறை:- தாளடியில் விதைக்குமாறு விதையொடு சென்ற வட்டி மீனொடு பெயருமென்றது, தலைவியொடு இல்லறம் நிகழ்த்துகின்ற நின்பால் வேண்டிய பரத்தையரைக் கொணர்ந்து புணர்த்திய பாணன் தான் விரும்பும் பொருளை நின்னிடத்துப் பெற்றுச் செல்லா நிற்கும்; அந்த மயக்கிலிருக்கின்ற நின்னைக் கூறியாவதென் என்றதாம். மெய்ப்பாடு - வருத்தம் பற்றிய வெகுளி. பயன் - வாயில் நேர்தல்.

     (பெரு - ரை.) செல்வம் சாதியொருமையாய் அன்றென்னும் ஒருமை முடிபேற்றது. மென்கண் செல்வம் என்றது கண்ணோட்டத்தை. சான்றோர் செல்வம் என்பது மென்கண் செல்வத்தையேயாம். ஆதலால் அதுவே சிறந்த செல்வம் என்று கருதப்படும் என்று உரை விரித்திடுக.

(210)