(து - ம்.) என்பது, களவொழுக்கந் தவிர்ந்து வரைந்துகொள்ள வேண்டித் தலைமகன் வரக்கண்ட தோழி சென்று தலைவியை நோக்கித் தினைவிளைகாலம் வதுவைக்கேற்ற பொழுதாயினும், வம்பமாரி இடையிலே பெய்வதுகண்டு நீ வருந்த, அப்பொழுது வருவனென்று யான் கூறியமொழி பொய்க்கும்படி அவன் வாரானாயினும், இப்பொழுது மெய்யாகவே மணஞ்செய்துகொள்ள வந்தனனென்று மகிழ்ந்து கூறா நிற்பது.
(இ - ம்.) இதனை, "ஆங்கு அதன் தன்மையின் வன்புறை யுளப்பட" (தொல்-கள- 23) என்னும் விதியின்கண் அமைத்துக்கொள்க
| கொடிச்சி காக்கும் அடுக்கற் பைந்தினை |
| முந்துவிளை பெருங்குரல் கொண்ட மந்தி |
| கல்லாக் கடுவனொடு நல்வரை யேறி |
| அங்கை நிறைய ஞெமிடிக் கொண்டுதன் |
5 | திரையணற் கொடுங்கவுள் நிறைய முக்கி |
| வான்பெயல் நனைந்த புறத்த நோன்பியர் |
| தையூ ணிருக்கையில் தோன்று நாடன் |
| வந்தனன் வாழி தோழி யுலகங் |
| கயங்கண் அற்ற பைதறு காலைப் |
10 | பீளொடு திரங்கிய நெல்லிற்கு |
| நள்ளென் யாமத்து மழைபொழிந் தாங்கே. |
(சொ - ள்.) தோழி அடுக்கல் கொடிச்சி காக்கும் பைந்தினை -தோழீ! மலைப்பக்கத்திற் கொடிச்சியாற் காக்கப்படும் பசிய தினைப்பயிரில்; முந்து விளை பெருங்குரல் கொண்ட மந்தி - முதலிலே பறிந்து முற்றிய பெருங் கதிர்களைக் கொய்துகொண்ட மந்தி; கல்லாக் கடுவனொடு நல்வரை ஏறி அங்கை நிறைய ஞெமிடிக் கொண்டு - பாயுந் தொழிலன்றி்ப் பிற கல்லாத கடுவனொடு நல்லவரை மீதேறி அகங்கை நிறையக் கயக்கித் தூய்மை செய்து; தன் திரை அணல் கொடுங் கவுள் நிறைய முக்கி - தன் திரைத்த அணலையுடைய வளைந்த கவுள் நிறைய வுண்டு; வான்பெயல் நனைந்த புறத்த நோன்பியர் தை ஊண் இருக்கையில் தோன்றும் நாடன் - வம்பமாரி பெய்தலாலே நனைந்த புறத்தனவாய் நோன்புடையார் தைத்திங்கட் பிறப்பில் நீராடி நோன்பு முற்றியிருந்து உண்ணுதல் போலத் தோன்றா நிற்கும் மலைநாடன்; உலகம் கயங்கண் அற்ற பைது அறுகாலை - உலகத்துக் குளங்கள் எல்லாம் நீர் வற்றி ஈரமற்றகாலை; பீளொடு திரங்கிய நெல்லிற்கு நள் என் யாமத்து மழை பொழிந்தாங்கு - சூலொடு வாடிய நெற்பயிருக்கு நடுயாமத்து மழைபெய்தாற்போல; வந்தனன் - வந்தான்; இனி விரைவிலே வதுவை யயர்ந்து நெடுங்காலம் வாழக்கடவதாக!; எ - று.
(வி - ம்.)முற்பட விளைகுரலென்றதனாற் பிற்பட்டு எல்லாக் கதிரும் பறிந்து முற்றுமென்றும் அக்காலமே வதுவை யயர்தற் குரித் தென்றுங் கூறியதாயிற்று. ஞெமிடுதல் - நிமிண்டுதலென இக்காலத்துத் திரிந்து வழங்கப்படுகிறது. அணல்-மோவாய். கயம்- குளம். பைது - ஈரம். பீள்-சூல். நள் - நடு, தையூணிருக்கை-தைத்திங்கட் பிறப்பில் நீராடி அன்று ஆக்கப்படு மாட்சிமைப்பட்ட உணவுண்ண விருத்தல். நோன்பியர் - ஆடி முதலாக மார்கழி யீறாகக் கிடந்த ஆறு திங்களும் தேவர்க்கு இராப்பொழுதெனப் புராணங் கூறுதலுண்மையின், இரவு பிற்றையாமங்கொண்ட சிலபொழுதுண்ணாதிருக்கும் நோன்பியர்.
உள்ளுறை :-தினைக்கதிரைக் கொண்ட மந்தி கடுவனொடு வரையேறி நிறையத் தின்று பெயலினனைந்த புறத்தவாய்த் தோன்றுமென்றது, மகிழ்ச்சிகொண்ட நீ தலைவனொடு வதுவையயர்ந்து அவனது மனையகம்புக்கு இல்லற நிகழ்த்தி இன்பந் துய்த்துத் துறவறத்தார் முதலாயினோரையும் பேணி மாட்சிமைப்பட்டுக் காட்டுதி யென்றதாம். மெய்ப்பாடு - உவகை. பயன் -தலைமகளை மகிழ்வித்தல். இதனை இத் துறைக்கே மேற்கோளாகக் கொண்டார் நச்சினார்க்கினியர; (தொல்-பொருள்-சூ- 114, உரை.)
(பெரு - ரை.) கையூண் இருக்கையில் என்றும் பாடம். இதற்கு நோன்புடையோர் தங் கையிலேயே உணவை ஏந்தி உண்ணும் இருக்கைபோல என்று பொருள் கூறுக. கண்ணறுதல் என்றது கண்ணோட்டமற என நீர் அற்று வறியவாயிருத்தலைக் குறித்து நின்றதெனினும் ஆம்.
(22)