திணை : குறிஞ்சி.

    துறை : இது, தோழி தலைமகளைச் செறிப்பறிவுறீஇ வரைவு கடாயது.

    (து - ம்.) என்பது, களவொழுக்கத்துத் தலைவன் கேட்டு வரையுமாற்றானே தோழி தலைவியை நோக்கித் "தினை முற்றின; இனி அவற்றைக் கொய்த உடன் நின்னை இல்வயிற் செறிப்பாராதலின் நாடனோடு இயைந்த கேண்மை இனி அரியவாகுமெனக் கருதா நிற்பேன்; அப்பால் யாது செய்வா"மெனக் கவன்று கூறாநிற்பது.

    (இ - ம்.) இதுவுமது.

    
யாங்குச்செய் வாங்கொல் தோழி பொன்வீ 
    
வேங்கை ஓங்கிய தேம்கமழ் சாரல் 
    
பெருங்கல் நாடனொடு இரும்புனத்து அல்கிச் 
    
செவ்வாய்ப் பைங்கிளி ஓப்பி அவ்வாய்ப் 
5
பெருவரை அடுக்கத்து அருவி ஆடிச்  
    
சாரல் ஆரம் வண்டுபட நீவிப்  
    
பெரிதமர்ந்து இயைந்த கேண்மை சிறுநனி  
    
அரிய போலக் காண்பேன் விரிதிரைக் 
    
கடல்பெயர்ந் தனைய ஆகிப் 
10
புலர்பதங் கொண்டன ஏனற் குரலே. 

    (சொ - ள்.) தோழி ஏனல் குரல் விரிதிரைக் கடல் பெயர்ந்து அனைய ஆகிப் புலர் பதம் கொண்டன - தோழீ! தினையின் கதிரெல்லாம் விரிந்த அலையையுடைய கடல்தான் வற்றினாற்போலக் காயும் பருவம் எய்தினகண்டாய்! இனி அவற்றை நமர் கொய்துகொண்டு போவதன்றி நின்னையும் இல்லின் கண்ணே செறிப்பது திண்ணம; பொன் வீ வேங்கை ஓங்கிய தேம் கமழ் சாரல் - பொன்போன்ற மலரையுடைய வேங்கைமரங்கள் உயர்ந்த மணங்கமழ்கின்ற சாரலின் கண்ணே; பெருங் கல் நாடனொடு இரும்புனத்து அல்கிச் செவ்வாய்ப் பைங் கிளி ஓப்பி - பெரிய மலைநாடனொடு கரிய தினைப்புனத்திலே தங்கிச் சிவந்த வாயையுடைய பசிய கிளியை ஓப்பி; அவ்வாய்ப் பெருவரை அடுக்கத்து அருவி ஆடி - அங்குள்ள கரிய பக்க மலையின்கணுள்ள அருவியில் நீர்விளையாட்டயர்ந்து; சாரல் ஆரம் வண்டு பட நீவி - மலைச்சாரலி லெழுந்த சந்தனமரம் நறுமணங் கமழ்தலால் வண்டு வந்து விழும்படி அச் சந்தனத்தேய்வையைப் பூசி; பெரிது அமர்ந்து இயைந்த கேண்மை சிறு நனி அரிய போலக் காண்பேன் - பெரிதும் விரும்பி இயைந்த நட்பு மிகச் சிறுகி இனி அது தானும் இல்லையாகும் போல யான் காண்பேன்!; யாங்குச் செய்வாம் - ஆதலால் நாம் என்ன செய்ய மாட்டுவேம்; எ - று.

    (வி - ம்.) நீவுதல் - கையாலே தடவுதல்; இங்குப் பூசுதலுக்காயிற்று. நாடனொடு இயைந்த கேண்மை யெனக் கூட்டுக.

    நாடனுடன் அல்கி ஓப்பி ஆடியியைந்த பெரிய நட்பாதலின் அதன்கண் இடையற வெய்தியவழிக் காதலி இறந்துபடுமென அவனுக்கு அறிவுறுத்த வேண்டி அரியபோலக் காண்பே னென்றாள். முன்போல நீங்கா துறைதல் வரைந்தன்றி இயலாதாதலின் வரைந்தெய்துக வெனக் கடாயதாயிற்று. மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.

    (பெரு - ரை.) 'இனி அவற்றை நமர் கொய்துகொண்டு போவதன்றி நின்னையும் இல்லின் கண்ணே செறிப்பர்' என்பது குறிப்பெச்சம்.

(259)