திணை : பாலை.

     துறை : இது, தோழி பருவமாறுபட்டதென்றது.

     (து - ம்.) என்பது, தலைவன் பிரிந்து சுரஞ்சென்றதறிந்த தலைமகள் கானின் கடுமையை நினைந்து வருந்துதலும். அதுகண்ட தோழி, சுரம் மழை பெய்தலினாலே பொலிவுடைய தென்று கூறுதல் கருதி அங்ஙனம் பிரிந்து சுரநெறி செல்லுகின்ற தலைவர் 'மழை பெய்த மலையின்கண்ணே மான்சென்று தீண்டலானே குமிழம் பழம் உதிர்கின்ற கானக நெறியில் நீ எம்மோடு வருதியோ என்று அழையா நின்றனர் கா'ணென்று கூறி ஆற்றுவிப்பது.

     (இ - ம்.) இதனை, "பெறற்கரும் பெரும் பொருள்" (தொல். கற். 9) என்னும் நூற்பாவின்கண் 'பிறவும் வகைபட வந்த கிளவி என்பதனால் கொள்க.

    
நெடுவான் மின்னிக் குறுந்துளி தலைஇப் 
    
படுமழை பொழிந்த பகுவாய்க் குன்றத்து 
    
உழைமான் அம்பிணை தீண்டலின் இழைமகள் 
    
பொன்செய் காசின் ஒண்பழந் தாஅங் 
5
குமிழ்தலை மயங்கிய குறும்பல் அத்தம்  
    
எம்மொடு வருதியோ பொம்மல் ஓதியெனக் 
    
கூறின்று முடையரோ மற்றே வேறுபட்டு 
    
இரும்புலி வழங்குஞ் சோலைப் 
    
பெருங்கல் வைப்பிற் சுரன்இறந் தோரே. 

     (சொ - ள்.) இரும்புலி வேறுபட்டு வழங்கும் சோலைப் பெருங்கல் வைப்பின் சுரன் இறந்தோர் - கரிய புலி சினங்கொண்டு மாறுபட்டு உலவாநிற்குஞ் சோலையையுடைய பெரிய மலையிடத்துளதாகிய சுரத்தின்கண்ணே சென்ற காதலர்; நெடுவான் மின்னிக் குறுந்துளி தலைஇப் படுமழை பொழிந்த பகுவாய்க் குன்றத்து - நெடிய மேகங்கள் மின்னிச் சிறிய துளிகளாகப் பெய்யத் தொடங்கி மிக்க மழை பெய்த பிளப்புக்களையுடைய மலைச்சாரலிலே; உழை மான் அம் பிணை தீண்டலின் - உழையாகிய அழகிய பிணைமான் உராய்ந்து கொள்ளுதலாலே; இழை மகள் பொன் செய் காசின் ஒள் பழம் தாஅம் - கலன் அணிந்த மடந்தை ஒருத்தியின் பொன்னாற் செய்த கலன்களைப் பரப்பினாற்போல ஒள்ளிய பழங்கள் உதிரப்பெற்ற; குமிழ் தலை மயங்கிய குறும் பல் அத்தம் - குமிழ் மரங்கள் நிரம்பிய குறிய பல வழியையுடைய சுரத்து நெறியிலே; பொம்மல் ஓதி எம்மொடு வருதியோ எனக் கூறின்றும் உடையர் - செறிந்த கூந்தலையுடையாய் நீ எம்முடன் வருகின்றனையோ? என்று கூறிய சொல்லையும் உடையர் காண்; ஆதலின் அந்நெறி மழைபெய்தலான் நலனுடையதா யிராநின்றது; அது காரணமாக நீ வருந்தாதே கொள். எ - று.

     (வி - ம்.) பொற்காசு - பொன்னாபரணம். உழைமான்: இருபெயரொட்டு.

     மழை பெய்திருப்பதோடு அந்நெறிகளும் சிறிய தூரங்களுடையது அன்றிக் கடத்தற்கரிய பெரியவல்லவென்பாள், குறும்பல் அத்தமென்றாள். நீர்மிக்கு இருப்பதோடு நிழலும் நன்குடையதென்பாள், சோலைவைப்பிற் சுரனென்றாள்.

     இறைச்சி :- மான்சென்று தீண்டலும் குமிழ் பழத்தை உதிர்க்கும் என்றது. தலைவர்சென்று பொருளீட்டத் தொடங்கலும் உடனே பொருள் கைவருமாதலின் விரைந்து வருவரென்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தலைவியை ஆற்றுவித்தல்.

     (பெரு - ரை.) வேறுபட்டுச் சுரன் இறந்தோர் என இயைத்துக்கோடல் நன்று. இஃது எம்பெருமான் கொடிய பாலையின்கண் செல்லுங்கால் என்படுவரோ என்று கவன்ற தலைவிக்குத் தோழி பாலை நிலத்தே மழைபெய்து நெறி நல்லவாயின என்பது அவர் கூற்றாலேயே தெளிந்தேம். ஆகலின் கவலற்க! என்று ஆற்றுவித்தபடியாம். இனி எம்மொடு வருதியோ? என்று கூறின்றும் உடையரோ? என்றதற்கு நந்தலைவர் சுரன் செல்லுங்கால் நின்னை நோக்கி நீ எம்மொடு வருதியோ? என ஒரு சொல்லேனுங் கூறினரோ கூறினாரிலரே என்று இயற்பழித்துத் தலைவியின் நினைவை வேறுவழியிற் றிருப்பினாள் எனப் பொருள் கூறதல் நன்று. இயற்பழிக்கு மாற்றால் தலைவன் கூற்றைக் கொண்டுகூறிப் பாலை நிலம் மழையாற் றண்ணி தாயிற்று என்றுணர்த்தும் திறன் நினைக.

(274)