திணை : மருதம்.

    துறை : (1)இது, வாயிலாகப்புக்க விறலியைத் தோழி சொல்லியது.

    (து - ம்.) என்பது, பரத்தையிற் பிரிந்து மீண்டுவந்த தலைமகன் தலைமகளது ஊடல் தீர்ப்பான் விறலியை விடுத்தலும் அவளை நோக்கிய தோழி, எங்கள் இறைவனுக்கு இன்னுமொரு பரத்தையை நாளைக் கொணர்ந்து கொடுக்க உடன்பட்டு வந்த விறலி! நின் பயனற்ற சொல்லை அப் பரத்தையரின் தாயர்பாலுங் கூறி அவரையும் முயங்க விடுப்பாய்கொலா'மென்று வெகுண்டு கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்குப், "பாணர் கூத்தர் விறலியர் என்றிவர் பேணிச்சொல்லிய குறைவினை எதிரும்" (தொல். கற். 9) எனவரும் விதிகொள்க.

    துறை : (2) விறலியை எதிர்ப்பட்ட பரத்தை சொல்லியதூஉமாம்.

    (து - ம்.) என்பது, வெளிப்படை, (உரை இரண்டற்குமொக்கும்.)

    (இ - ம்.) இதனை, "புல்லுதன் மயக்கும்" (தொல். கற். 10) என்னும் நூற்பாவின்கண் 'இவற்றொடு பிறவும்' என்பதனாற் கொள்க.

    
விளக்கின் அன்ன சுடர்விடு தாமரைக் 
    
களிற்றுச்செவி அன்ன பாசடை தயங்க 
    
உண்துறை மகளிர் இரியக் குண்டுநீர் 
    
வாளை பிறழும் ஊரற்கு நாளை  
5
மகட்கொடை யெதிர்ந்த மடங்கெழு பெண்டே 
    
தொலைந்த நாவின் உலைந்த குறுமொழி 
    
உடன்பட் டோராத் தாயரோ டொழிபுடன் 
    
சொல்லலை கொல்லோ நீயே வல்லைக் 
    
கன்றுபெறு வல்சிப் பாணன் கையதை 
10
வள்ளுயிர்த் தண்ணுமை போல  
    
உள்யாதும் இல்லதோர் போர்வையஞ் சொல்லே. 

    (சொ - ள்.) விளக்கின் அன்ன சுடர் விடு தாமரைக் களிற்றுச் செவி அன்ன பாசடை தயங்க - விளக்கைப் போன்ற ஒளி விடுகின்ற மலர் பொருந்திய தாமரையினுடைய களிற்றி யானையின் செவியைப் போன்ற பசிய இலை அலைபட; உண்துறை மகளிர் இரியக் குண்டு நீர் வாளை பிறழும் ஊரற்கு - நீர் பருகுந் துறையின்கண் இறங்கிய மாதர்கள் அஞ்சி ஓட ஆழமாகிய நீர் மிக்க பொய்கையில் வாளைமீன் வெடிபாயும் ஊரனுக்கு; நாளை மகட் கொடை எதிர்ந்த மடம் கெழு பெண்டே - இனி வருகின்ற அடுத்த நாளைக்கும் ஒரு பரத்தையைக் கொணர்ந்து கொடுத்தற்கு நேர்ந்த அறியாமையுடைய விறலியே!; தொலைந்த நாவின் உலைந்த குறுமொழி உடன்பட்டு ஓராத் தாயரோடு உடன் ஒழிபு - மெய்ம்மையே கல்லாதொழிந்த நாவினால் குலைந்த தாழ்மையுடைய நின் சொல்லுக்குடன்பட்ட அப் பரத்தையரின் தாய்மாருடன் ஒருசார் எய்தி; நீ வல்லைக் கன்று பெறு வல்சிப் பாணன் கையது வள் உயிர்த்தண்ணுமைபோல - நீ தான் விரைவாக ஆவின் கன்றை உரித்து உணவாகக் கொள்ளுகின்ற பாணன் கையிடத்ததாகிய பெரிதாக ஒலித்தலையுடைய தண்ணுமை வாச்சியம்போல; உள் யாதும் இல்லது ஓர் போர்வைச் சொல் - உள்ளே யாதுமில்லாத ஒரு மேற் போர்வையுடைய சொற்களை; சொல்லலை கொல் - சொல்லுகின்றிலையோ? அங்ஙனம் சொல்லி அவரையும் பிறர் முயங்குமாறு விடுக்கலாமன்றோ? எ-று.

    (வி - ம்.) தாமரை அதன் மலருக்கு ஆகுபெயர். யாதுமில்சொல் பயனற்ற சொல். தெளிவு பற்றி இறந்த காலத்தாற் கூறினாள்.

    பரத்தை நயக்குமாறு வேண்டும் பொய்ம்மைகூறிப் புணர்ப்பித்தலின் தொலைந்த நாவினென்றாள். பிறர் அறியாதவாறு மந்தணமாகக் செய்தமைத்தலிற் குறுமொழியென்றாள். இழிதகவு கருதாது முதியோரையும் புணர்க்கும் இயற்கையையென்பாள், தாயரொடு சொல்லலை கொலென்றாள். நின் பயனற்ற சொல் பரத்தையர்க்கும் அவரன்னை யர்க்கும் ஏற்பதன்றி இங்குப் பயன்படாதென்பதாம்.

    இறைச்சி :- வாளைமீன் தாமரைவருந்த மகளிர் இரிந்தோடக் குண்டு நீரில் வெடி பாய்ந்து பிறழுமென்றது, தலைமகன் யாம் வருந்தக் காமக் கிழத்தியர் இரிந்தகல விருந்தாக நீ புணர்த்திய புதிய பரத்தையிடத்தே சென்று தங்காநிற்கு மென்றதாம். மெய்ப்பாடு - வெகுளி. பயன் - வாயின்மறுத்தல்.

    (பெரு - ரை.) 'களிறு பெறு வல்சிப் பாணன்' என்றும் பாடம். இதுவே சிறந்ததுமாம். இச் செய்யுள் தலைவனுக்குப் பரத்தையரை அமைத்துக் கொடுக்கின்ற விறலியே! தலைவியின் ஊடல் தீர்க்க வாயிலாக வந்துழி அவளை நோக்கி; ஊரற்கு நாளை மகட்கொடை நேர்ந்த விறலியே! நீதானும் வழக்கம்போல உன்னுடைய குறுமொழிக்கு உடன்பட்டு ஓர்தலில்லாத பரத்தையரின் தாய்மார்க்கு நாளை ஒரு மகள் வேண்டும் என்று அவர் உடன்படுமாறு உள் யாதுமில்லாத பொய்ம்மொழியைச் சொல்லவில்லையோ? சொல்லியிருப்பின் இங்கு வந்திராய்; என்றாளாகக் கோடல் நன்று. இவ்வாறன்றி "அங்ஙனம் சொல்லி அவரையும் பிறர் முயங்குமாறு விடுக்கலாமன்றோ" எனல் நாகரிகமன்மையும் தெளிக.

(310)