திணை : மருதம்.

     துறை : இது, பரத்தையின் மறுத்தந்த தலைமகனைத் தலைமகள் நொந்து சொல்லியது.

     (து - ம்,) என்பது, பரத்தையிற் பிரிந்து வந்து ஆற்றாமை வாயிலாகப் புகுந்து பள்ளியிடத்தானாகிய தலைமகனை முயங்கல் விருப்பொடு புகுந்த தலைமகள் நெருங்கி உள்ளுறையாலே அவனியல்பு கூறி 'மகிழ்நனே, என்னைக் கைவிட்ட நின்னை முயங்கேன் கண்டாய்; அதனாலேபுலந்தேனும் இல்லேன்' என நொந்து கூறி அவர் மீதூர்தலின் முயங்கா நிற்பது.

     (இ - ம்.) இதற்கு, ஆற்றாமையும் வாயிலே யாகலின் "வாயிலின் வரும் வகை" (தொல். கற். 6) என்னும் விதிகொள்க.

    
புல்லேன் மகிழ்ந புலத்தலும் இல்லேன் 
    
கல்லா யானைக் கடுந்தேர்ச் செழியன் 
    
படைமாண் பெருங்குளம் மடைநீர் விட்டெனக் 
    
காலணைந்து எதிரிய கணைக்கோட்டு வாளை 
5
அள்ளலங் கழனி உள்வாய் ஓடிப் 
    
பகடுசேறு உதைத்த புள்ளிவெண் புறத்துச் 
    
செஞ்சால் உழவர் கோற்புடை மதரிப் 
    
பைங்கால் செறுவின் அணைமுதற் புரளும் 
    
வாணன் சிறுகுடி அன்னஎன் 
10
கோல்நேர் எல்வளை நெகிழ்த்த நும்மே. 

     (சொ - ள்.) மகிழ்ந கல்லா யானைக் கடுந் தேர்ச் செழியன் படை மாண் பெருங்குளம் மடை நீர் விட்டு என - மகிழ்நனே! பாகன் கூறு மொழிக் குறிப்பன்றிப் பிறவற்றைக் கற்றறியாத யானையையும் விரைந்து செல்லுந் தேரினையும் உடைய செழியன் பெயராலே செய்த மாட்சிமைப்பட்ட பெரிய குளத்து நீர் மடையடைத்திருந்தது திறந்துகொண்டோடியதனாலே; கால் அணைந்து எதிரிய கணைக்கோட்டு வாளை - அக்குளத்தினின்றும் புறம்போந்து கால்வாயை யடைந்து சென்று திரும்பிய திரண்ட கோட்டினையுடைய வாளைமீன்; அள்ளல் கழனியுள்வாய் ஓடி - அக் கால்வாயினின்றும் சேற்றையுடைய வயலினுள்ளாலோடி; பகடு சேறு உதைத்த புள்ளி வெள் புறத்துச் செஞ்சால் உழவர் கோல்புடை மதரி - ஆங்கு உழுது வருகின்ற எருமைக்கடாவின் காற்சேறுபட்ட புள்ளியுடைய வெளிய மேற் புறத்தோடு செவ்விய பலபடியாக மறித்து உழுகின்ற உழவர் தங் கைக்கோல் கொண்டு புடைத்தற்கும் அஞ்சாது பெருக்குற்று; பைங்கால் செறுவின் அணைமுதல் புரளும் - நீர் பொருந்திய சேற்றின்மேல் வரம்படியிலோடி அப்பாற் போக இயலாமையால் அவ்வரம்படியிலே புரளுகின்ற; வாணன் சிறுகுடி அன்ன - வாணனது காவிரியின் வடபாலுள்ள 'சிறுகுடி' என்னும் ஊர்போன்ற; என் கோல் நேர் எல்வளை நெகிழ்த்த நும் - என்னுடைய கோற்றொழிலமைந்த அழகிய ஒளி பொருந்திய வளை நெகிழும்படி செய்த நின்னை; புல்லேன் - புல்லவுஞ்செய்யேன்; புலத்தலும் இல்லேன் - அதனால் நின்னை வெறுத்தேனுமல்லேன்; அயலாந் தன்மையேனாதலின் என்னைத் தீண்டாதேகொள்! எ - று.

    (வி - ம்.)ஏனை ஊர்களினுஞ் சிறந்த சிறுகுடி போன்ற மகளிரிற் சிறந்த எனது வளையென்க. இதனால் இத்துணைச் சிறப்பு வாய்ந்த காதலியைக் கைவிட்ட கொடுமையுடையை யெனவுங் குறிப்பித்ததாம்.

    உள்ளுறை :- குளத்தை யுடைத்துப் புறப்பட்டுக் கால்வாய் வழியே சென்ற வாளை, கழனியு ளோடிச் சேறு புறந்தீற்றப் பெற்று ஆங்கு உழவர் புடைத்தற்கும் அஞ்சாது செருக்கி வரம்படியிலே சென்று புரளுமென்றது, மனையகத்தை விட்டுப் புறப்பட்ட நீ பாணன் செலுத்தும் வழியே சென்று ஒரு பரத்தையுட் புகுந்து அதனை யறிந்த ஏனையோர் கூறும் பழிமொழியை ஏறட்டுக்கொண்டு அங்குத் தங்கிய வழி ஏனைப் பலபல பரத்தையரும் நின்னை விரும்பியீர்ப்ப அவர்மாட்டுச் செல்லாது ஒருத்தியில்லத்துக்கிடந்து துயின்று வந்தனை என்றதாம். மெய்ப்பாடு - வெகுளி பற்றிய உவகை. பயன் - ஊடல் தீர்ந்து முயங்கல்.

    (பெரு - ரை.) கால் - வாய்க்கால். கணை - திரட்சி. அள்ளல் - சேறு. பகடு - எருமைக்கடா. மதரி - செருக்கி. அணை - மடையுமாம். ஐம்புலவின்பத்திற்கும் நிலைக்களனாதலோடு அறநிகழ்த்தற்கு இடனாதலும் பற்றி பாணன் சிறுகுடியைத் தன்னோடு ஒப்பித்துக் கொண்டாள் என்க.

(340)