(து - ம்.) என்பது, தலைமகன் பரத்தையிற் பிரிந்த காலத்துத் தலைவி பொறையுயிர்த்து விடுத்த வெள்ளணிகண்டு பெயர்ந்து தலைவி பாற் செல்லக்கண்ட பரத்தை தலைவியின் பாங்காயினார் கேட்பத் தனக்கு மகன் பிறந்தானென்னு மகிழ்ச்சியால் ஊரன் கள்வனைப்போல மெல்ல நுமது இல்வயினுற்றான் போலுமென்று நகையாடிக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்குப் "பல்வேறு புதல்வர்க்கண்டு நனி யுவப்பினும்" (தொல்-கற்- 10) என்னும் விதி கொள்க.
| நெடுநா வொண்மணி கடிமனை இரட்டக் |
| குரையிலைப் போகிய விரவுமணற் பந்தர்ப் |
| பெரும்பாண் காவல் பூண்டென ஒருசார்த் |
| திருந்திழை மகளிர் விரிச்சி நிற்ப |
5 | வெறியுற விரிந்த அறுவை மெல்லணைப் |
| புனிறுநாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச |
| ஐயவி யணிந்த நெய்யாட் டீரணிப் |
| பசுநெய் கூர்ந்த மென்மை யாக்கைச் |
| சீர்கெழு மடந்தை ஈரிமை பொருந்த |
10 | நள்ளென் கங்குற் கள்வன் போல |
| அகன்துறை யூரனும் வந்தனன் |
| சிறந்தோன் பெயரன் பிறந்த மாறே. |
(சொ - ள்.) கடி மனை நெடு நா ஒள் மணி இரட்ட குரை இலைப் போகிய மணல் விரவு பந்தர் - காவலையுடைய மாளிகையிடத்து நெடிய நாவையுடைய ஒள்ளிய மணி ஒலியா நிற்ப ஒலிக்கின்ற தெங்கங் கீற்றான் மிடைந்து புனைந்த மணல் பரப்பிய பந்தரின்கண்ணே; ஒருசார் பெரும்பாண் காவல் பூண்டென திருந்து இழை மகளிர் விரிச்சி நிற்ப - முன்பு பரத்தையிற் சென்ற வழி்ப் பெரிய பாணர் தலைவனைச் சூழ்ந்து காவலை மேற்கொண்டாற் போலத் திருந்திய கலனணிந்த மகளிர் இப்பொழுது நன்னிமித்தமாக நிற்ப; வெறி உற அறுவை விரிந்த மெல் அணைச் செவிலியொடு புனிறு நாறு புதல்வன் துஞ்ச - நறுமணமிக்க விரிப்பு விரித்த மெல்லிய அணையின்மீது செவிலியுடனே ஈன்ற அணுமை விளங்கிய புதல்வன் துயிலா நிற்ப; ஐயவி அணிந்த நெய் ஆட்டு ஈர். அணிப் பசுநெய் கூர்ந்த மென்மை யாக்கைச் சீர்கெழு மடந்தை - வெண்கடுகை யப்பிய எண்ணெய் தேய்த்து ஆடும் நீராட்டினால் ஈரிய அணியையுடைய குளிர்ந்த நெய்பூசிய மிக்க மென்மையாகிய உடம்பினையுடைய அழகு விளங்கிய மனைவிதான்; ஈர் இமை பொருந்த - தன் ஈரிமையும் ஒன்றோடொன்று பொருந்த வுறங்கா நிற்ப; அகன் துறை ஊரனும் சிறந்தோன் பெயரன் பிறந்தமாறு நள் என் கங்குல் கள்வன்போல வந்தனன் - அகன்ற நீர்த்துறையையுடைய வூரனும் சிறந்த தந்தையின்பெயரனாகிய தன் மைந்தன் பிறந்ததனால் இடையாமத் திருளிலே கள்வனைப் போல வந்துற்றான்; எ - று.
(வி - ம்.) விரிச்சி - நிமித்தம். அறுவை - ஆடை. ஐயவி - வெண்கடுகு. குரை - அசையெனக்கொண்டு இலையான் வேய்ந்த பந்தரெனக் கூறினும் அமையும். ஐயவி-காவலாக அணிவது; அணங்குகள் அணங்காமைக்கு, மாறு; மூன்றனுருபின் பொருள்படுவதோரிடைச் சொல், கள்வன் போல என்றது சிறுமை பற்றிய நகையுவமம். மற்றுமிது கிழக்கிடு பொருளாக முதலொடு முதலேவந்த வினையுவமமுமாம். இனி் இப்பாட்டு முன்பு வருங்காலத்து வாராது மைந்தன் பிறந்ததனால் வந்தானெனத் தோழி கூறியதாக வுரைப்பினுமமையும்,
மணி கடிமனை யிரட்டலென்றது தலைமகனது செல்வமிகுதி கூறியதாயிற்று. பரத்தையர் காணிற் பலர்கொள் பலகைபோலப் பற்றியீர்த்தலும் ஈர்ப்பரென அவர் காணாமை நள்ளிருளிற் கள்வன்போல வந்தனனென்றதாம். மெய்ப்பாடு - பிறன்கண் தோன்றிய எள்ளல் பொருட்டாக வந்த நகை. பயன் -தலைமகனை இயற்பழித்தல்.
(பெரு - ரை.) தலைவன் தம்மில்லத்தார்க்குப் பெரிதும் அஞ்சுபவன் ஆதலால் புதல்வன் பிறந்தமை கேட்டும் மகளிர் விரிச்சி நிற்கும் செவ்வியையும், செவிலியும் தலைவியும் உறங்கும் செவ்வியும் தேர்ந்து தன் காலடியோசையும் கேளாமைக்கு மணியிரட்டும்போது கள்வன் போல வந்தனன் எனப் பரத்தை தலைவனை இகழ்ந்தபடியாம்.
இனி, இதனை ஆசிரியர் இளம்பூரணர் தோழி கூற்றாகக் கருதி, "சிறந்த புதல்வனை நேராது புலம்பினும்" (தொல்-கற்- 9) என்னும் துறைக்கு எடுத்துக்காட்டினர்.
(40)