(தலைவன் நெடுங்காலம் வரையாமல் பிரிந்திருந்தானாக, “தலைவன் கேண்மை வரைவினால் உண்மையாகாமல் என் நினைவளவில் நின்று துன்புறுத்துகின்றது” என்று கூறித் தலைவி வருந்தியது.)
 105.    
புனவன் றுடவைப் பொன்போற் சிறுதினைக் 
    
கடியுண் கடவுட் கிட்ட செழுங்குரல் 
    
அறியா துண்ட மஞ்ஞை யாடுமகள் 
    
வெறியுறு வனப்பின் வெய்துற்று நடுங்கும் 
5
சூர்மலை நாடன் கேண்மை் 
    
நீர்மலி கண்ணொடு நினைப்பா கின்றே. 

என்பது வரைவு நீட்டித்த விடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

நக்கீரர்.

     (பி-ம்.) 1. ‘றொடவைப்’ 2. ‘கடியொண்’. ‘சில்குரல்’; 4.’வேர்த்துற்று’; 6. ‘நினைப்பாகும்மே’.

     (ப-ரை.) தோழி----, புனவன் துடவை - குறவனுக்குரிய தோட்டத்தில் விளைந்த, பொன்போல் சிறுதினை - பொன்னைப் போன்ற சிறு தினையில், கடி உண் கடவுட்கு இட்ட செழு குரல் - புதியதை உண்ணும் தெய்வத்துக்குப் பலியாக இட்ட வளவிய கதிரை, அறியாது உண்ட மஞ்ஞை - தெரியாமல் உண்ட மயில், ஆடுமகள் வெறி உறு வனப்பின் - தேவராட்டி வெறியாடுகின்ற அழகைப் போல, வெய்துற்று - வெம்மையுற்று, நடுங்கும் - நடுங்குதற்கு இடமாகிய , சூர்மலை நாடன் - தெய்வங்கள் உறையும் மலைநாட்டையுடைய தலைவனது, கேண்மை - நட்பு, நீர் மலி கண்ணொடு - நீர் மிக்க கண்களோடு, நினைப்பு ஆகின்று - நாம் நினைந்து துன்புறுதற்குக் காரணமாகியது.

     (முடிபு) மலைநாடன் கேண்மை நினைப்பாகின்றது.

     (கருத்து) தலைவன் வரையாமையின் அவனை நினைந்து துன்புறு கின்றேன்.

     (வி-ரை.) புனவன் - புனத்தையுடைய குறவன், மலைவாணர் தினையை வித்தி விளைத்து அதில் தோற்றும் முதற் கதிரைத் தெய்வத்துக்குப் பலியாக இடுதல் மரபு.

     ஆடுமகள் - வெறியாடுபவள்; இவள் கணிக்காரிகையெனவும் கூறப் படுவாள். சூர் அச்சமுமாம்.

     தெய்வத்துக்கிட்ட பலியை உண்டற்கினியதென்றெண்ணி அறியா துண்ட மஞ்ஞை பின்பு நடுங்குதலைச் செய்யும் மலைநாடனென்றது, என் தகுதிக்கு மேற்பட்டதாகிய தனது கேண்மையை இனியதென்றெண்ணி அறியாமற் பெற்றமையால், இப்பொழுது நடுங்கச் செய்தானென்னும் குறிப்பினது; திருச்சிற்.193, பேர் .

     தலைவனுடைய கேண்மை கண்ணீர் மல்கச் செய்யும் துன்பத்தைத் தந்து நினைவளவிலே நின்றதேயன்றி இன்பத்தைத் தந்து வரையுஞ் செயலளவில் முற்றவில்லையென்பது தலைவியின் உட்கோள்.

     மேற்கோளாட்சி 2. கடியென்னும் உரிச்சொல் புதுமையென்னும் பொருளில் வந்தது (தொல். உரி. 87, தெய்வச்.; நன், 456, மயிலை.457. சங்.; இ.வி. 282.)

     மு. வரைவிடை வைத்த காலத்து வருத்தமுற்றவழித் தலைவி தானே கூறியது (தொல். களவு.21, இளம்.)

     ஒப்புமைப் பகுதி 1. மு. குறுந். 133:1.

     சிறுதினை: குறுந். 375:3.

     3-4. வெறியாடுமகள்; குறிஞ்சி.175; பட்.154-5.

     மஞ்ஞை நடுங்குதல்: குறிஞ்சி.169.

     4. வெறியுறு வனப்பு: “வெறிகொள் பாவையிற் பொலிந்த” (அகநா.370:14.)

     வெறியுற்றார் நடுங்குதல்: குறுந்.52:2, ஒப்பு.

     9. ஆகின்று: குறுந்.15:4, 166:4

(105)