(பரத்தையிற் பிரிந்த தலைவன் தான் குறைவில்லா அன்புடையனென்று கூறித் தூது விடுப்ப, அதனையறிந்த தலைவி, “தலைவர் உள்ளத்தாற் பொய்யாது அன்புடையராயின் யாமும் பழைய அன்புடையே மென்பதை அவருக்குக் கூறி விடுப்போம்” என்று தோழிக்குக் கூறும் வாயிலாகத் தான் வாயில் நேர்ந்ததைப் புலப்படுத்தியது.)
 106.    
புல்வீ ழிற்றிக் கல்லிவர் வெள்வேர் 
    
வரையிழி யருவியிற் றோன்று நாடன் 
    
தீதி னெஞ்சத்துக் கிளவி நம்வயின் 
    
வந்தன்று வாழி தோழி நாமும் 
5
நெய்பெய் தீயி னெதிர்கொண்டு் 
    
தான்மணந் தனையமென விடுகந் தூதே. 

என்பது தலைமகள் தூதுகண்டு கிழத்தி தோழிக்குக் கூறியது.

கபிலர்.

     (பி-ம்.) 1. ‘வீழாற்றிக்’, ‘வீழித்திக்’; 3. ‘தீதின்னெஞ்சத்துக்’; 4. ‘நயந்தன்று’; 6. தாமளந்தனைய, தாம்வரைந்தனைய.

     (ப-ரை.) தோழி----, புல் வீழ் இற்றி - புல்லிய விழுதை யுடைய இற்றிமரத்தினது, கல் இவர் வெள் வேர் - மலையிலுள்ள கற்களிற் படர்கின்ற வெள்ளிய வேர், வரை இழி அருவியின் தோன்றும் - மலைப்பக்கத்தில் வீழ்கின்ற அருவியைப்போலத் தோன்றும், நாடன் - நாட்டையுடைய தலைவன், தீது இல் நெஞ்சத்து கிளவி - குற்றமற்ற நெஞ்சினால் நினைந்து கூறிய சொற்களை உரைக்கும் தூது, நம் வயின் வந்தன்று - நம்மிடத்து வந்தது; நாமும்--, நெய் பெய் தீயின் - நெய்யைப் பெய்த தீயைப்போல, எதிர் கொண்டு - அத்தூதை ஏற்றுக்கொண்டு, தான் மணந்தனையம்என - அவன் என்னை மணந்த காலத்தில் இருந்த அன்புடைய நிலையினேம் என்று கூறி, தூதுவிடுகம் - தூதுவிடுவேம்.

     (முடிபு) தோழி, நாடன் தீதில் நெஞ்சத்துக்கிளவி வந்தன்று; நாமும் எதிர்கொண்டு தூதுவிடுகம்.

     (கருத்து) தலைவனை நாம் ஏற்றுக் கொள்வோமாக.

     (வி-ரை.) தலைவன் பரத்தையிற் பிரிந்தானாக அவன் அன்பிலனென் றெண்ணிய தலைவியின்பால் அவன் விடுத்த தூது, “தலைவன் தலை நாளன்ன அன்பினன்; அவனை ஏற்றருள வேண்டும்’’ என்று கூறியது கேட்ட அவள், “அவன் அத்தகையனாயின் நாமும் மணநாளின்கண் வைத்திருந்த அன்பிற்குறைவின்றியுள்ளேமென்று தூது விடுவேம்” என்று தோழிக்குக் கூறியது இது.

     தீதில் நெஞ்சத்துக்கிளவியென்றது தலைவன் நெஞ்சாற் பிழைப்பிலனென்று தலைவி உணர்ந்தமையைப் புலப்படுத்தியது. நாமும்: உம்மை இறந்தது தழீஇயது. தலைவன் மணந்த காலத்தில் நிறைந்த அன்போடி ருந்தவாறே இப்பொழுதும் குறைவின்றி யிருப்பேமென்றமையின் அவனை ஏற்றுக்கோடற் குறிப்புப் பெறப்பட்டது. மணந்த காலத்தை நினைவு கூர்ந்த தலைவிக்கு அந்நினைவின் மிகுதியே நெய்பெய் தீயை உவமை கூறச் செய்தது.

     ஏகாரம் அசைநிலை.

     மேற்கோளாட்சி மு. தூதுமுனிவின்மை வந்தது (தொல். களவு. 21, இளம்.); ‘அது கற்பிற் கல்லது ஏலாது; என்னை? களவினுள் நெய்பெய் தீயின் எதிர் கொள்ளலாகாமையின்’ (தொல். மெய்ப். 23, பேர்.); தூது கண்டு தலைவி கூறியது (தொல். கற்பு. 6, ந.)

     ஒப்புமைப் பகுதி 1. புல்வீழிற்றி: “குறுங்கா லிற்றிப் புன்றலை நெடுவீழ்” (அகநா.57:6.)

     இற்றியின் வீழ்: “ஒல்குநிலை யிற்றி யொருதனி நெடுவீழ்” (அகநா. 345:19.)

     5. நெய்பெய் தீ: “நெருப்பழற் சேர்ந்தக்கா னெய்போல் வதூஉம், எரிப்பச்சுட் டெவ்வநோ யாக்கும்” (நாலடி. 124.)

(106)