(தலைவன் வரைந்து கொள்ளாமல் நெடுநாள் ஒழுகினானாக வருந்திய தலைவி, அவன் கேட்கும் அண்மையில் இருப்பத்தோழியை நோக்கி, தலைவன் என் நலம் கொண்டான்; அந்நலம் என்னைப் பிரிந்தது. நான் இன்னும் உயிரோடு வாழ்ந்திருக்கின்றேன்” என்று கூறித் தலைவன் வரையாவிடின் உயிர் நீங்குமென்ற குறிப்பை உணர்த்தியது.)
 125.    
இலங்குவளை நெகிழச் சாஅ யானே  
    
உளெனே வாழி தோழி சாரற் 
    
றழையணி யல்குன் மகளி ருள்ளும் 
    
விழவுமேம் பட்டவென் னலனே பழவிறற்  
5
பறைவலந் தப்பிய பைத னாரை 
    
திரைதோய் வாங்குசினை யிருக்கும் 
    
தண்ணந் துறைவனொடு கண்மா றின்றே. 

என்பது வரைவு நீட்டித்த விடத்துத் தலைமகள் தோழிக்குச் சிறைப்புறமாகச் சொல்லியது.

     (சிறைப்புறமாக - தலைவன் கேட்கும் அண்மையில் மறைவாக இருக்கும்பொழுது.)

அம்மூவன்.

     (பி-ம்.) 5. ‘பறைவலி’.

     (ப-ரை.) தோழி---, சாரல் தழை அணி அல்குல் மகளிருள்ளும் - மலைச்சாரலில் விளைந்த தழையினாலாய உடையை அணியும் அல்குலையுடைய மகளிர் யாவரினும், விழவு மேம்பட்ட என் நலன் - விழாவைப் போலச் சிறப்பெய்திய எனது பெண்மை நலம், பழ விறல் பறைவலம் தப்பிய பைதல் - பழைய விறலையுடைய சிறகின் வன்மை தவறியதனால் உண்டாகிய துன்பத்தையுடைய, நாரை---, திரை தோய் - அலைகள் தோயப் பெற்ற, வாங்கு சினை இருக்கும் - வளைந்த மரக்கிளையில் தங்கியிருக்கும், தண்ணந் துறைவனொடு - குளிர்ந்த கடற்றுறையையுடைய தலைவனோடு, கண்மாறின்று - என்னை விட்டுப் பிரிந்து சென்று இடம் பெயர்ந்தது; அங்ஙனமாகவும், யானே - யான் மாத்திரம், இலங்குவளை நெகிழ சாஅய் - விளங்குகின்ற வளைகள் நெகிழும் படி மெலிந்து, உளென் - இன்னும் உயிருடன் இருக்கின்றேன்.

     (முடிபு) தோழி, என்நலன் துறைவனொடு கண்மாறின்று: யானே சாஅய் இன்னும் உளென்.

     (கருத்து) தலைவன் விரைவில் வரைந்துகொள்ளாவிடின் உயிர் தரியேன்.

     (வி-ரை.) தலைவன் வரையாது ஒழுகினமையால் ஊரார் அலருக்கு அஞ்சித் தலைவியின் உடல்மெலிய வளைகள் நெகிழ்ந்தன. யானே : ஏகாரம் பிரிநிலை. உளெனே: ஏகாரம் அசை நிலை; இரக்கக்குறிப்புமாம். வாழி: அசைநிலை. உளெனே யென்றது உயிர் விடும் நிலையினேன். என்னும் குறிப்பைப் புலப்படுத்தியது. தழை - தழையாலும் மலராலும் அமைத்து மகளிர் உடுக்கும் ஒருவகை ஆடை; இது மிகுதிபற்றி வந்தபெயர்.

     விறல் - மிடுக்கு. வலம் - வெற்றி; இங்கே அதற்குக் காரணமாகிய வலிக்கு ஆயிற்று. மரம் கரையிலிருப்பினும் அதன் கிளை அலைவந்து தோயுமாறு வளைந்தது.

     கண்மாறுதல் - இடமாறுதல். மாறின்று - மாறியது; ஏகாரம் ஈற்றசை.

     தலைவன் என் நலம்கொண்டா னாதலின் அஃது என்னிடத்தினின்றும் பிரிந்து அவனோடு போய்விட்டதென்று தலைவி கூறினாள்.

     நாரை தன் பழைய சிறைவலி கெட்டுத் திரை தானே கொணர்ந்து தரும் மீனைப்பெற்றாலன்றி வேறு இரைபெறாத நிலையில் (குறுந்.166) திரைதோயும் சினையில் இருத்தலைப் போல, யான் என் பழைய நலனை இழந்து தலைவன் தானே உளமிரங்கிச் செய்யும் தண்ணளியை எதிர்நோக்கி ஈண்டுள்ளேனென்பது குறிப்பு. அத்திரை, மீனைத் தாராதொழியின் நாரை இரையின்றி உயிர்நீத்தலைப் போலத் தலைவன் இரங்கி வரைந்து கொள்ளானேல் யானும் உயிர்விடுவேனென்னும் குறிப்புங் கொள்க.

     ஒப்புமைப் பகுதி 1. வளை நெகிழ்தல் : குறுந்.11:1, ஒப்பு.

     2. உளெனே : குறுந். 133:4, 310:5.

     3. தழையணி யல்குல் மகளிர் : குறுந். 159:1, 214:4, 294:5-7; குறிஞ்சிப்.102; ஐங்.72:1-2.

     தழையணி மகளிர் : குறுந். 295:1-2, 342:5.

     4. நலத்தின் சிறப்பு: குறுந். 245:1-2.

     மேம்பட்ட நலன்: “விறனலன்” (கலித். 3:5.)

     5. பறை: குறுந். 166:1, 172:1.

     பறை வலந் தப்பிய நாரை: (குறுந். 128:1); “பறைதபு முது குருகு” (ஐங்.180:3.)

     7. கண்மாறல்; மதுரைக்.642; கலித்.46:18; அகநா.144:6, 337:18; புறநா.143:4.

     4-7. நலன் தலைவனொடு நீங்கல்: குறுந். 54:1-5, ஒப்பு.

(125)