மதுரைக் கணக்காயன் மகன் நக்கீரன். (பி-ம்.) 1. ‘யிழிபுபெரி’, ‘யன்புபெரி’; 2.’பழமலை’; 6.’தூங்குதற்’; 7.’பாஅய’.
(ப-ரை.) ஆய் இழை - தெரிந்து அணிந்த அணிகலங்களையுடையாய், பயம் மலை நாடன் -பயனையுடைய மலைநாட்டுக்குத் தலைவன், அழிபு பெரிது உடையன் - நம்மைப் போல இரங்குதலை மிக உடையன்; பழியும் அஞ்சும் - பழியையும் அஞ்சுவான்; நில்லாமையே நிலையிற்று ஆகலின் - நில்லாது அழியும் தன்மையே இவ்வுலகத்தில் நிலைபெற்றதாதலின், நல் இசை வேட்ட - நிலை பெறுதலையுடைய நல்ல புகழை விரும்பிய, நயன் உடை நெஞ்சின் - நீதியையுடைய நெஞ்சையுடைய, கடப்பாட்டாளன் உடை பொருள் போல -ஒப்புரவாளன் பெற்ற செல்வத்தைப் போல, நின் அம் கலுழ் மேனி - நினது அழகு ஒழுகும் மேனியின் கண், பாய பசப்பு - பரவிய பசலை, தங்குதற்கு உரியதன்று - தங்குவதற்கு உரிமை யுடையதன்று; ஆதலின், அழியல் - நீ வருந்தாதே.
(முடிபு) ஆயிழை, நாடன் அழிபு பெரிதுடையன்; பழியும் அஞ்சும்; நின் மேனிப் பாய பசப்பு தங்குதற்குரியதன்று.
(கருத்து) தலைவன் நம்பால் இரங்கி விரைவில் வந்து வரைந்து கொள்வான்.
(வி-ரை.) “தலைவர் யான் ஈண்டிருந்து இரங்கும்படி பிரிந்து சென்றனர்; என்பால் இரக்கமில்லார்; ஊரினர் கூறும் பழிமொழியையும் அஞ்சி னாரல்லர். அவருடைய பிரிவினால் என் மேனி யழகு கெடப் பசலை பரந்தது” என்று கூறி வருந்திய தலைவியை நோக்கித் தோழி சொல்லியது இது.
அழிபு - வருத்தம். ‘நீ தலைவரைப் பிரிந்து இரங்குதலைப் போலவே அவரும் நின்னைப் பிரிந்தமையால் இரங்குவர்’ என்பாள் அழிபு பெரிதுடையனென்றாள். ஒரு பெண்ணை வருந்தச் செய்தாரென்னும் பழியையும் அஞ்சுவாரென்பது படப் பழியுமஞ்சுமென்றாள்; “ஒழிதது பழித்த நெஞ்சமொடு வழிப்படர்ந்து’ (அகநா. 39:1) என்ற விடத்து ஒழித்ததென்பதனை ஸ்திரீ விஸநம் பண்ணலாகாதென்று முன்னோர் கழித்தது’ என்று அதன் உரையாசிரியர் உரைத்தனர். ஈண்டுப் பழியென்று கூறப்பட்டதும் அதுவே; ‘ஒரு மகள்பால் நட்புப் பூண்டு நெடுநாள் வரையாதொழுகுகின்றான்’ என்னும் பழியென்பதும் பொருந்தும்.
உலகத்திலுள்ள பொருள்கள் நிலையற்றவை; புகழ் ஒன்றே நிலையுடையதாதலின் அதனைக் கடப்பாட்டாளர் விரும்புவர்;
| “ஒன்றா வுலகத் துயர்ந்த புகழல்லாற் |
| பொன்றாது நிற்பதொன் றில்” (குறள். 233) |
என்னும் பொதுமறையைக் கருதுக.
கல்வி, ஆண்மை, ஈகை முதலியவற்றால் உண்டாகும் இசை வகைகளுள் ஈகையால் வருவது சிறந்ததாதலின் அதனை நல்லிசையென்று சிறப்பித்தாள்.
| “ஈத லிசைபட வாழ்த லதுவல்ல |
| தூதிய மில்லை யுயிர்க்கு” (குறள். 231) |
என்பதன் உரையில் பரிமேலழகர்,
‘இசைபட வாழ்வதற்குக் கல்வி ஆண்மை முதலிய பிற காரணங்களும் உளவேனும், உணவின் பிண்டமுண்டி முதற்றாகலின், ஈதல் சிறந்ததென்பதற்கு ஞாபகமாக ஈதலென்றார்’.
என்றெழுதிய பகுதியினால் இதனை உணரலாகும். நயனுடைய நெஞ்சு - ஈயும்போது அன்போடு கொடுக்கும் நெஞ்சம்.
| “முகத்தா னமர்ந்தினிது நோக்கி யகத்தானாம் |
| இன்சொ லினதே யறம்” (குறள். 93) |
என்பது காண்க; நயன் - அன்பு.
| “நல்லிசை நிலைஇய நனந்தலை யுலகத் |
| தில்லோர் புன்கண் டீர நல்கும் |
| நாடல் சான்ற நயனுடை நெஞ்சிற் |
| பாடுநர் புரவலன்” (பதிற். 86: 5-8) |
என்பதிலும் நயனுடை நெஞ்சு கூறப்பட்டிருத்தல் காண்க.
கடப்பாடு - ஒப்புரவு. (தொல். கற்பு, 10, ந.)
தாம் பெற்ற பொருளைப் பிறருக்கு ஈந்து புகழ் படைக்க விரும்புவோன் இரப்போர்க்கு முற்றும் வழங்கிவிடுதலின், அப்பொருள் அவனை நீங்குதல் போலப் பசலை நின்னைவிட்டு நீங்குமென்றாள்;
| “நிலையிலா வுலகி னின்றவண் புகழை |
| வேட்டவ னிதியமே போன்றும் |
| ...... ....... ....... ....... |
| உலைவிலார் நில்லா தொருபக லுள்ளே |
| யுருப்பவிர் வெஞ்சுரங் கடந்தார்” (சீவக. 2107) |
என்று பிறரும் இக்கருத்தை உவமையாக ஆளுதல் காண்க. ‘புகழை விரும்பினவன் கையிற் பொருள் போமாறு போலேயும்’ என்று இப்பாடலுக்கு உரையெழுதினார் நச்சினார்க்கினியர்.
‘நின் பசப்புத் தங்குதற்குரியதன்று’ என்றதனால் போவதற்குரிய தென்பது பெறப்படும்: தலைவனைப் பிரிந்த காலத்தில் தலைவிக்குப் பசலை உண்டாவதும், அவனோடு பொருந்திய காலத்தில் அது நீங்குவதும் மரபு; இதனை இந்நூல் 399-ஆம் செய்யுளால் நன்குணரலாகும். பசலை நீங்குமென்று தோழி கூறியது. இந்நீக்கத்திற்குக் காரணமாகிய தலைவர் வரவு உண்டாகுமென்னும் கருத்தை நினைந்தே.
அம் கலுழ்மேனி யென்றது பசலை பரவாது இயல்பான அழகுடன் நின்ற மேனியை; அழகுதான் தங்குதற்குரியது, அதனை மறைக்கும் பசலை தங்குதற்குரியதன்றென்பதை இவ்வடையினால் உணர வைத்தாள்.
பசப்பு - பசலை. ஏகாரம் அசை நிலை.
மேற்கோளாட்சி மு. தோழி தலைமகள் ஆற்றுவித்தது (தொல். களவு. 24, இளம்.); தோழி இயற்பட மொழிந்து தலைவியை வற்புறுத்தியது (தொல். களவு. 23. ந..)
ஒப்புமைப் பகுதி 1. பி-ம். தலைவன் அன்புடையன்: குறுந். 37:1, 213:1.
2. தலைவன் பழியஞ்சுதல்; குறுந். 252:8. பயமலை: மணி.17:50; பெருங்.2. 18:3. பயமலை நாடன்: கலி. 43:6.
3-4. உலகின் நிலையாமையும் புகழின் நிலைபேறும்: “நில்லா வுலகத்து நிலைமை” (பொருந. 176, பெரும்பாண். 466); “மன்னா வுலகத்து மன்னுதல் குறித்தோர், தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே” (புறநா.165:1-2); “மன்னா வுலகத்து மன்னிய சீர்த்தஞ்சைவாணன்” (தஞ்சை. 21.)
புகழின் நிலை பேறு: மலைபடு. 70, அடிக்.
7. அங்கலுழ் மேனி: “அங்கலி ழாகம்”, “அங்கலிழ் மேனி” (ஐங். 106:4, 174:4); “அங்கலுழ் மாமை” (அகநா. 41:15, 96:12); “அங்கலுழ் மேனியாய்” (சீவக. 1988.)
(143)