(தலைவன் வரைபொருட்குப் பிரிந்து நீட்டிப்ப அதனால் துன்பமுற்ற தலைவி தோழியை நோக்கி, “என்துன்பத்தை அறியாமல் துயிலுகின்ற மாக்களை யுடைமையால் இச்சிறுகுடி எனக்கு உறைபதி யன்று” எனக் கூறித் தன் ஆற்றாமையைப் புலப்படுத்தியது.)
     145.   
உறைபதி யன்றித் துறைகெழு சிறுகுடி 
    
கானலஞ் சேர்ப்பன் கொடுமை யெற்றி 
    
ஆனாத் துயரமொடு வருந்திப் பானாட் 
    
டுஞ்சா துறைநரொ டுசாவாத் 
5
துயிற்கண் மாக்களொடு நெட்டிரா வுடைத்தே. 

என்பது வரைவிடை ஆற்றாது தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

கொல்லனழிசி.

    (பி-ம்.) 1.’சிறுகுடிக்’;4.’துறைநரொடு சார்வாத்’.

     (ப-ரை.)இ துறைகெழு சிறுகுடி - கடற்றுறை பொருந்திய இந்தச் சிற்றூர், கானல் அம் சேர்ப்பன் - கடற்கரைச் சோலையையுடைய சேர்ப்பனது, கொடுமை எற்றி - கொடுமையை நினைந்து, ஆனா துயரமொடு - மிகுகின்ற துன்பத்தோடு, வருந்தி - துயரமுற்று, பானாள் - நடுயாமத்தில், துஞ்சாது உறைநரொடு - துயிலாமல் தங்குவாரை, உசாவா - ஏனென்று வினாவாத, துயில்கண் மாக்களொடு - துயிலுதல் பொருந்திய கண்களையுடைய அறிவற்ற மக்களோடு, நெடு இரா உடைத்து - நெடிய இரவை உடையது, ஆதலின், உறைபதி அன்று - இது நாம் தங்கியிருத்தற்குரிய ஊர் அன்று.

     (முடிபு) இச்சிறுகுடி துயிற்கண் மாக்களொடு நெட்டிராவுடைத்து; உறைபதியன்று.

     (கருத்து) தலைவர் இல்லாமையால் இவ்வூர் நமக்கு இனி உறையும்பதி அன்று.

     (வி-ரை.) “புல்வேய் குரம்பை, ஊரென வுணராச் சிறுமை” (அகநா. 200: 2-3) யுடைத்தாதலின், சிறுகுடியென்றாள். கொடுமை - பிரிவின் கண் நீட்டித்தல்; (குறள்.1169, பரிமேல்.) எற்றி - நினைந்து (தொல். உரி.39.) துஞ்சாதுறைநரென்று தலைவி தன்னையே பிறர் போலக் கூறினாள்; (குறள்,1154, பரிமேல்.) உறைநரொடு : உருபு மயக்கம். உசாவாவென்றது உசாவித் தன் துயர் நீங்குதற்கு ஆவனவற்றைச் செய்யாத என்பதாம். தோழி மறை வெளிப்படுத்துக் கொண்டு மேல் அறத்தொடு நிற்றற் பொருட்டுத் தலைவி கூறுவன கேட்டற்குப் பொய்த்துயில் கொள்வா ளாதலின் ‘துயிற்கண்மாக்கள்’ என்றாள். மாக்களென்றது இங்கே தோழியை; தன் ஆற்றாமை அறியும் வன்மையில்லாமை பற்றி இங்ஙனம் கூறினாள். கணவனைப் பிரிந்தவர்க்கு இராப்பொழுது பண்டையினெடியதாகத் தோற்றுதல் இயல்பாதலின் நெட்டிரா வென்றாள்; “ஊழியிற் பெரிதா னாழிகை யென்னும்” (திவ். பெரிய திரு. 2. 7:4.) ஏகாரம் : அசை நிலை.

     மேற்கோளாட்சி 2. எற்று என்னும் சொல் நினைவென்னும் பொருளில் வரும் (தொல். உரி. 41.சே, தெய்வச், 39, ந; இ.வி.282.)

     மு. தலைவனோடு தன்திறத்து ஒருவரும் ஒன்று உரையாத வழித் தனது ஆற்றாமையால் தன்னோடும் அவனோடும் பட்டன சில மாற்றம் தலைவி தானே கூறுதலும் உள (தொல். களவு. 20, ந.)

     ஒப்புமைப் பகுதி 2. தலைவன் கொடுமை:குறுந். 9:7, ஒப்பு; அகநா.398:7:குறள்,1169.

    3.தலைவி துஞ்சாமை: குறுந். 6:4,ஒப்பு.

     5. மாக்கள்:குறுந். 6:2, ஒப்பு.

     நெட்டிரா: “கொடியார் கொடுமையிற் றாங்கொடிய விந்நாள், நெடிய கழியு மிரா” (குறள்,1169.)

    4-5. தலைவி துஞ்சாமையும் பிறர் துயிலலும்:குறுந்.6: 1-2, ஒப்பு.

(145)