(பொருள் தேடிவரும் பொருட்டுத் தலைவியைப் பிரிந்து செல்லத் துணிந்த தன் நெஞ்சை நோக்கி, “பாலைநிலம் செல்லுதற்கு அரிதென்று கருதாமல் தலைவியைப் பிரிந்து செல்லுதல் நம் இளமைக்கு முடிவாகும்”என்று கூறித் தலைவன் வருந்தியது.)
 151.   
வங்காக் கடந்த செங்காற் பேடை 
    
எழாலுற வீழ்ந்தெனக் கணவற் காணாது 
    
குழலிசைக் குரல குறும்பல வகவும் 
    
குன்றுகெழு சிறுநெறி யரிய வென்னாது 
5
மறப்பருங் காதலி யொழிய 
    
இறப்ப லென்பதீண் டிளமைக்கு முடிவே. 

என்பது பொருள் வலிக்கப்பட்ட நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது.

தூங்கலோரி.

     (பி-ம்.) 1. ‘வங்கர்கடந்த’, ‘கடிந்த’, ‘கிடந்த’; 2. ‘விழந்தெனக்’; 3. ‘குறும்பல மிகவும்’; 4. ‘குன்றுறு’; 6. ‘டின்மைக்கு’.

     (ப-ரை.) நெஞ்சே-, வங்கா கடந்த - ஆண் வங்காப் பறவை நீங்கப் பெற்றமையால் தனித்த, செ கால் பேடை- சிவந்த காலையுடைய பெண் பறவை, எழால் உற வீழ்ந்தென - புல்லூறென்னும் பறவை தம் மேல் நெருங்க இரையாகக் கொள்ளும் பொருட்டு வீழ்ந்ததாக, கணவன் காணாது - தம்முடைய கணவனாகிய ஆண்பறவையைக் காணாமல், குழல் இசை குரல - வேய்ங் குழலினது இசையைப் போன்ற குரல்களை யுடையனவாய், குறு பல அகவும் - குறிய பல ஒலிகளால் அழைக்கும், குன்று கெழு சிறு நெறி - குன்றைப் பொருந்திய சிறிய வழிகள், அரிய என்னாது - கடத்தற்கு அரியன வென்று எண்ணாமல், மறப்பு அரு காதலி ஒழிய - மறத்தற்கரிய நம் தலைவி இங்கே தங்க, இறப்பல் என்பது - நான் செல்வேனென்று துணிவது, ஈண்டு - இங்கே, இளமைக்கு முடிவு -நம் இளமைப் பருவத்துக்கு முடிவாகும்.

     (முடிபு) நெஞ்சே, சிறுநெறி அரிய என்னாது காதலியொழிய இறப்ப லென்பது இளமைக்கு முடிவு.

     (கருத்து) இளமை பயனற்றுக் கழியுமாதலின், யான் தலைவியைப் பிரிந்து செல்லேன்.

     (வி-ரை.) நெஞ்சென்னும் முன்னிலை முன்னத்தால் வருவிக்கப்பட்டது. வங்கா - ஒருவகைப் பறவை (தொல். உயிர் மயங்கு. 23, ந. மேற்.); “வங்கா வரிப்பறை” (நற். 341:1); இது வக்காவெனவும் வழங்கும் (குற்றாலக் குறவஞ்சி.) எழால் - புல்லூறென்னும் பறவை; “மயிலு மெழாலும் பயிலத் தோன்றும்” (தொல். மரபு. 43) என்பதனாலும், “போத்தொடு வழங்கா மயிலு மெழாலும் “ என்னும் அதன் மேற்கோளாலும் விளங்கும். கணவனென்பது அஃறிணைக்கும் வரும்; “கயந்தலை மடப்பிடி, வலிக்குவரம் பாகிய கணவ னோம்பலின்” (மலைபடு. 307-8), “பைங்கட் செந்நாய், மாயா வேட்டம் போகிய கணவன், பொய்யா மரபிற் பிணவு நினைந் திரங்கும்” (நற். 103: 6-8), “நிறைச்சூல் யாமை... முட்டை, பார்ப்பிட னாகுமளவைப் பகுவாய்க் கணவ னோம்பும்” (அகநா. 160: 5-8) என்பவற்றால் இது விளங்கும். குறும்பல - தன்னுடைய குறிய பல குஞ்சுகளை யெனினும் ஆம்; “தேம்பாய் கூந்தற் குறும்பல மொசிக்கும், வண்டுகடிந் தோம்ப றேற்றாய்” (அகநா. 256: 8-7.) குறிஞ்சி திரிந்த பாலை நிலமாதலின், ‘குன்று கெழு சிறு நெறி’ என்றான். மறப்பருங் காதலி யென்றது அவள் குணங்கள், இடைச்சுரத்தே செல்லினும் நினைத்தற் குரிய வாதல் பற்றி (ஐங். 321-3, 325-7.)

     இளமைக் காலத்தே தலைவியோடிருந்து இன்புற வேண்டும்; பொருள் தேடச் சென்றால் அது முற்றும் வரையில் பிரிவு நேர்வதால் அதற்குள் இளமை கழியும்; இளமை கழியுமேல் அவ்வின்பம் கைகூடாதென்று கருதியவனாதலின், இறப்பலென்பது இளமைக்கு முடிவென்றான்.

     முடிவே: ஏகாரம் தேற்றம்; அசைநிலையுமாம்.

     ஒப்புமைப் பகுதி 2. எழால் : (பதிற். 36:10, அகநா. 103:1); “சிறுபுன் புறவொடு சிற்றெழால் சீறும், நெறியரு நீள்சுரத்து” (திணைமொழி.15.)

     3. குறும்பல: நற்.261:4; புறநா: 159:3; சிலப். 10:39, 12:3.

     4. குன்று கெழு சிறு நெறி: “வரைசேர் சிறுநெறி” (அகநா. 123:3)

     6. பொருட்பிரிவு இளமையின்பத்தைக் கெடுக்கும்: குறுந். 126:1, ஒப்பு; நற்.46; கலி.18: 7-8.

     5-6. “மறப்பருங் காத லிவளீண் டொழிய, இறப்பத் துணிந்தனிர்” (கலி. 2; 9-10.)

(151)