(தலைவனைத் தலைவி ஏற்றுக் கொள்ள வேண்டுமென்னுங்கருத்தினால், “பல நாள் இங்கே வந்து பணிந்த சொற்களைக் கூறிச்சென்றதலைவன் இப்பொழுது எங்கே இருக்கின்றானோ? அவனை நினைந்து என் நெஞ்சம் கலங்குகின்றது” என்று அவளுக்கு இரக்கம் உண்டாகும்படிதோழி கூறியது.)
 176.   
ஒருநாள் வாரல னிருநாள் வாரலன்  
    
பன்னாள் வந்து பணிமொழி பயிற்றியென்  
    
நன்னர் நெஞ்ச நெகிழ்த்த பின்றை 
    
வரைமுதிர் தேனிற் போகி யோனே 
5
ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ 
    
வேறுபுல னன்னாட்டுப் பெய்த 
    
ஏறுடை மழையிற் கலிழுமென் னெஞ்சே. 

என்பது தோழி, கிழத்தியைக் குறைநயப்பக் கூறியது.

    (குறை நயப்ப - தலைவனது காரியத்தை விரும்பி நிறை வேற்றுதற்கு.)

வருமுலையாரித்தி.

    (பி-ம்) 2.‘பனிமொழி’; 3.‘நெகிழ்ந்த’; 6.‘வேறுபுனல்’. ‘புலநன்னாட்டுப்’. புலநாட்டுப்; 7.கலுழும்.

    (ப-ரை.) ஒருநாள் வாரலன் - ஒருநாள் வந்தானல்லன்;இருநாள் வாரலன் - இரண்டு நாட்கள் வந்தானல்லன்; பலநாள் வந்து - பல நாட்கள் வந்து, பணிமொழி பயிற்றி - பணிவைப் புலப்படுத்தும் மொழிகளைப் பல்காற் கூறி, என்நன்னர் நெஞ்சம் நெகிழ்த்த பின்றை - எனது நன்மையையுடைய நெஞ்சத்தை இரங்கச் செய்தபிறகு, வரை முதிர்தேனின் போகியோன் - மலையினிடத்தில் முதிர்ந்து வீழ்ந்ததேனிறாலைப் போலப் போயினவனும், ஆசு ஆகு எந்தை - நமக்குப் பற்றுக் கோடாகிய எந்தையுமாகிய தலைவன்,யாண்டு உளன் கொல் - எங்கே இருக்கின்றானோ? வேறுபுலன் நல்நாட்டு பெய்த - வேற்றுப் புலங்களையுடையநல்ல நாட்டிற்பெய்த, ஏறுடை மழையின் - இடியேற்றையுடைய மழைநீர் கலங்கி வருவது போல, என் நெஞ்சு -,கலிழும் - கலங்கும்.

    (முடிபு) போகியோன், எந்தை, யாண்டுளன் கொல்? என் நெஞ்சு கலிழும்.

     (கருத்து) நின்னை ஒரு தலைவன் விரும்பி அலமருகின்றான்.

     (வி-ரை.) தலைவியினது நெஞ்சில் இரக்கம் தோன்றும்படி கூறப்புக்கவளாதலின், தலைவன் பலநாள் வந்தானென்பதை விரித்து ‘ஒருநாள்வாரலன் . பயிற்றி’ என்று தோழி கூறினாள். ஒருமை, இருமை, பன்மையென்னும் வழக்கு அவள் கூற்றிலமைந்துள்ளது. பயிற்றல் - பலமுறைகூறி வற்புறுத்தல். தலைவனைப் பற்றித் தலைவிபால் தான் கூறப்புக்கதுநன்மையையே கருதியென்பதைக் குறிப்பிப்பாள், ‘என் நன்னர் நெஞ்சம்’என்றாள்.

    வரையில் முதிர்ந்த தேனடை, தன்பாலுள்ள தேனை ஒரு வருங்கொள்ளாது வீழ்ந்து கழிதல் போல, தன் மொழியை யாருங் கொள்ளாமையின் தலைவன் போயினானென உவமையை விரித்துக் கொள்க.போகியோன் - போனானென முற்றாகக் கொள்ளலும் பொருந்தும்.ஆசு - பற்றுக் கோடு; ‘ஆசா கென்னும் பூசல் - எனக்கு நீர் பற்றாகவேண்டுமென்னும் ஆர வாரம்’ (புறநா. 266:9, உரை); ஆசாகு என்பதனைஇரங்கற் குறிப்புப்படுமொழி யென்பாரும் உளர் (மேற்படி.) எந்தையென்றாள்தலைவன்பால் தனக்குள்ள ஆதரவு தலைவிக்குப் புலப்படும் பொருட்டு.கொல்: ஐயம். வேறு புலனன்னாட்டுப் பெய்த வென்பதை வேறுநாட்டுப் புலத்துப் பெய்தவென்று கூட்டிப் பொருள் செய்க. வேற்றுநாட்டிற் பெய்த மழைநீர் அந் நாட்டில் தெளிவுடையதாக வீழினும் அந்நீர் வெள்ளம் அயல்நாட்டிற் புகும்போது கலங்கி வருமாதலின் அதனை உவமை கூறினாள்.

    (மேற்கோளாட்சி) மு. தோழி வலிதாகச் சொல்லிக் குறை நயப்பித்தது (இறை.10); பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கினும் தோழிக்குக் கூற்று நிகழும்(தொல். களவு. 24, இளம். 23, ந.)

    ஒப்புமைப் பகுதி 2. தலைவன் பலநாள் வந்து குறை யிரத்தல்: ‘‘கயமலருண்கண்ணாய் காணா யொருவன், வயமா னடித்தேர்வான் போலத்தொடைமாண்ட, கண்ணியன் வில்லன் வருமென்னை நோக்குபு,முன்னத்திற் காட்டுத லல்லது தானுற்ற, நோயுரைக் கல்லான் பெயருமற்பன்னாளும்” (கலி. 37:1-5.)

     பணிமொழி பயிற்றல்: ‘‘ரவன் மாக்களிற் பணிமொழி பயிற்றி”(அகநா. 32:4.) 2.மு.அகநா. 310:4.

    1-2. ஒருநாள், இருநாள், பன்னாள் வருதல்: “ஒருநாட் செல்லலமிருநாட் செல்லலம், பலநாள் பயின்று பலரொடு செல்லினும்”(புறநா. 101:1-2.)

    ஒருமை, இருமை, பன்மை: தொல். மொழிமரபு. 12; எச்ச. 21,இளம்.

    5. மு. குறுந். 325:4; புறநா. 235: 16, 307: 1.

    மு. அகநா. 32.

(176)