(பொருள்வயிற் சென்ற தலைவன் அப்பொருளைப் பெற்று மீண்டுவந்து தோழியை நோக்கி, “நான் பிரிந்த விடத்து வேறொன்றையும்நினையாமல் தலைவியின் கூட்டத்தையே நினைந்திருந்தேன்” என்றுகூறும் வாயிலாகத் தனது அன்பைத் தலைவிக்குப் புலப்படுத்தியது.)
 209.   
அறந்தலைப் பட்ட நெல்லியம் பசுங்காய் 
    
மறப்புலிக் குருளை கோளிடங் கறங்கும் 
    
இறப்பருங் குன்ற மிறந்த யாமே 
    
குறுநடை பலவுள் ளலமே நெறிமுதற் 
5
கடற்றிற் கலித்த முடச்சினை வெட்சித் 
    
தளையவிழ் பல்போது கமழும் 
    
மையிருங் கூந்தன் மடந்தை நட்பே. 

என்பது பொருள்முற்றி மறுத்தரும் (பி-ம். மறுதரும்) தலைமகன்தோழிக்கு உரைப்பானாய்க் கிழத்தியைத் தெருட்டியது.

    (பொருள் முற்றி - பொருளீட்டும் முயற்சி நிறைவெய்தி. மறுத்தரும்-மீளும்; கலி.15:15, 81:34.)

பாலைபாடிய பெருங்கடுங்கோ (பி-ம். பெருங்கோ.)

    (பி-ம்.) 1. ‘சுரந்தலைப்’; 4. ‘குறுநடைப்பல்லுள்ளலமே’; 5. ‘கடத்திற்’,‘களரிற்’, ‘முட்சினை’; 7. ‘நண்பே’.

    (ப-ரை.) குறுநடை- குறுக அடியிட்டு நடக்கும் நடையையுடைய தோழி, அறம் தலைப்பட்ட - வழிப்போவாரதுஉயிரைத் தாங்கற்குரிய அறத்தைச் செய்யும், நெல்லி அம்பசு காய் - நெல்லிமரத்தினது அழகிய பசிய காய்கள், மறம்புலி குருளை - வலியையுடைய புலிக்குட்டிகள், கோள்இடம் - கொள்ளற்குரிய இடத்தில், கறங்கும் - உதிர்ந்துஉருளுகின்ற, இறப்பு அரு குன்றம் - கடத்தற்கரிய மலைகளை, இறந்த யாம் - கடந்து சென்ற யாம், அங்ஙனம்சென்றவிடத்து, பல உள்ளலம் - பல பொருள்களை நினைந்தேமல்லேம்; நெறிமுதல் - வழியினிடத்தே, கடற்றில் கலித்த -காட்டினிடத்தில் தழைத்த, முடம் சினை வெட்சி - வளைந்தகிளைகளையுடைய வெட்சியினது, தளை அவிழ் - முறுக்குஅவிழ்ந்த, பல் போது கமழும் - பல பேரரும்புகள் மணக்கின்ற, மை இரு கூந்தல் - மையைப் போன்ற கரிய கூந்தலையுடைய, மடந்தை நட்பே - தலைவியினது நட்பையேநினைந்திருந்தேம்.

    (முடிபு) குறுநடை, யாம் பல உள்ளலம்; மடந்தை நட்பே உள்ளினேம்.

    (கருத்து) நான் எப்பொழுதும் தலைவியையே நினைந்திருந்தேன்.

    (வி-ரை.) இஃது, “எம்மை நினைத்தும் அறிதிரோ?” என வினவியதோழிக்கு உரைத்தபடி.

     
“குறும்பொறை மருங்கிற் கோட்சுர நீந்தி 
     
 நெடுஞ்சேண் வந்த நீர்நசை வம்பலர் 
     
 செல்லுயிர் நிறுத்த சுவைக்காய் நெல்லி”         (அகநா. 271:5-7)  

என்பவாதலின், அறந்தலைப்பட்ட நெல்லியம் பசுங்காயெனச் சிறப்பித்தான். தருமத்தின் பொருட்டு வளர்த்த நெல்லிமரத்தின் காயெனலும்ஒன்று. அம்: சாரியையுமாம்.

     கறங்கும் - கீழே உதிர்ந்து ஒலிக்குமென்பதும் ஆம். பாலை நிலத்தில் நெல்லிக்காயுதிர்தல்,

     
“பளிங்கத் தன்ன பல்காய் நெல்லி 
    
 மோட்டிரும் பாறை யீட்டுவட் டேய்ப்ப 
    
 உதிர்வன படூஉங் கதிர்தெறு கவாஅன்”              (அகநா. 5:9-11)  

என்பதனாலும் விளங்கும்.

    யாமே: ஏ அசை நிலை. பன்மை, பொருண்முற்றிய பெருமிதந்தோன்ற நின்றது.

    ‘இறப்பருங்குன்றத்தை அரிதிற் கடந்த யாம் அங்ஙனம் கடத்தற்குக்காரணமான பொருண் முயற்சிக்குரிய பலவற்றையும் உள்ளலம்’ என்றுகூறினான்.

    வெட்சி காட்டில் தழைத்து வளர்வது; “வெட்சிக் கானத்து”(புறநா. 202:1); முட்சினை யென்ற பாடத்திற்கு, இதழ் முள்ளைப் போன்றஅரும்பையுடைய வெனப் பொருள் கொள்க; “இதன்முள் ளொப்பினமுகைமுதிர் வெட்சி” (அகநா. 133:14); சினை - அரும்பு. மகளிர் வெட்சிமலரைப் புனைதல் வழக்கம்;

     
“துணையோ ராய்ந்த விணையீ ரோதிச் 
    
 செங்கால் வெட்சிச் சீறித ழிடையிடுபு”             (முருகு. 20-21.) 

    மடந்தை: இங்கே பருவங் குறியாது தலைவியென்னுந் துணையாய்நின்றது. நட்பு- கூட்டம். ஏகாரம் பிரிநிலை. மையிருங் கூந்தலென்றஅடை அக்கூந்தற்பாயலிற்றுயிலும் நிலையையே நினைந்திருத்தேனென்றகருத்தைப் புலப்படுத்தியது. நட்பே உள்ளினமென ஒரு சொல் வருவித்துமுடிக்க.

    ஒப்புமைப் பகுதி 1. நெல்லியம்பசுங்காய்: “நெல்லிப் பைங்காய்”, “புன்காய்நெல்லிக், கோடை யுதிர்த்த குவிகட் பசுங்காய்”, “புல்லிலை நெல்லிப்புகரில் பசுங்காய்”, “நெல்லிப் பைங்காய்” (அகநா. 54:15, 315: 10-11, 363:6, 399:14.)

    7. மையிருங் கூந்தல்: குறுந். 199:5, ஒப்பு.

(209)