(தலைவன் பிரிந்திருந்த காலத்தில் வருந்திய தலைவியை நோக்கி,“உன்னுடைய துன்பம் நீங்கும்; தலைவர் இன்று வந்து விடுவார்” என்று தோழி உறுதி கூறியது.)
 215.   
படரும் பைபயப் பெயருஞ் சுடரும் 
    
என்றூழ் மாமலை மறையு மின்றவர் 
    
வருவர்கொல் வாழிதோழி நீரில் 
    
வறுங்கயந் துழைஇய விலங்குமருப் பியானை 
5
குறும்பொறை மருங்கி னமர்துணை தழீஇக் 
    
கொடுவரி யிரும்புலி காக்கும் 
    
நெடுவரை மருங்கிற் சுரனிறந் தோரே. 

என்பது பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது.

மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் (பி-ம். மதுரையளக்கர் ஞாழர் மள்ளர், மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார்.)

    (பி-ம்.) 1. ‘பயப்பயப்’, ‘பைப்பைய’, ‘பையப்பயப்’; 6. ‘கொடுவரை’.

    (ப-ரை.) தோழி-, படரும் பைபய பெயரும் - துன்பமும்மெல்ல மெல்ல நீங்கும்; சுடரும் என்றூழ் - ஒளி விடுகின்றசூரியன், மா மலை மறையும் - பெரிய அத்தகிரியின் கண்மறையா நின்றது; ஆதலின், நீர் இல் வறு கயம் துழைஇய -நீர் இல்லாத வறிய குளத்தைத் துழாவிய, இலங்கு மருப்புயானை - விளங்கிய கொம்புகளை உடைய ஆண் யானைகள்,குறு பொறை மருங்கின் - குறிய குண்டுக் கற்களுக்கு அருகில்,அமர் துணை தழீஇ - தாம் விரும்புகின்ற பிடிகளைத் தழுவி,கொடு வரி இருபுலி - வளைந்த கோடுகளை உடைய பெரியபுலி தாக்குதலினின்றும், காக்கும் - பாதுகாக்கின்ற, நெடுவரைமருங்கின் - உயர்ந்த மலைப் பக்கத்தில் உள்ள, சுரன்இறந்தோர் - பாலை நிலத்தைக் கடந்து சென்றோராகிய,அவர் - அத் தலைவர், இன்று வருவர்--; வாழி - நீ வாழ்வாயாக!

     (முடிபு) தோழி, படரும் பெயரும்; என்றூழ் மறையும்; சுரனிறந்தோராகிய அவர் இன்று வருவர்; வாழி!

    (கருத்து)தலைவர் இன்று வருவர்.

    (வி-ரை.)படர் - தலைவனை நினைந்து வருந்தும் துயர். வருவர்கொல்; கொல், அசை நிலை. இலங்கு மருப்பியானை யென்றாள்,புலியொடு பொரும் கருவி உடையன என்பதைப் புலப்படுத்த. குறும்பொறை மருங்கில் மறைந்து ஆண் யானை பெண் யானைகளைத் தழுவிநின்றன. குறிஞ்சி திரிந்த பாலை யாதலின் நெடுவரை மருங்கிற் சுரனென்றாள்.

    ஒப்புமைப் பகுதி 1. பைபய: நற். 41:3, 199:10, 378:3; ஐங். 83:1, 113:5. 5. குறும்பொறை: குறுந். 134:3, 333:4.

    அமர்துணை தழீஇ: குறுந். 237:1.

    4-6. யானை பிடியைப் புலியினின்றும் காத்தல்: மலைபடு. 307-9.

    யானை பிடியைக் காத்தல்: அகநா. 168:9-10, 189:4-6.

    7. சுரனிறந்தோர்: குறுந். 211:7, 260:8, 314:6.

(215)