(தலைவன் கூறிச் சென்ற கார்ப் பருவம் வந்ததாகத் தலைவிஆற்றாளெனக் கவலையுற்ற தோழியை நோக்கி, “அவர் பொருள் தேடச்சென்றார். நான் அவரை நினைந்து வருந்துகின்றேன். கார்ப்பருவமும்வந்து விட்டது; இனி என் உயிர் நில்லாது போலும்!” என்று தலைவிகூறியது.)
 216.   
அவரே, கேடில் விழுப்பொரு டருமார் பாசிலை 
    
வாடா வள்ளியங் காடிறந் தோரே 
    
யானே, தோடா ரெல்வளை நெகிழ வேங்கிப 
    
பாடமை சேக்கையிற் படர்கூர்ந் திசினே 
5
அன்ன ளளிய ளென்னாது மாமழை 
    
இன்னும் பெய்ய முழங்கி 
    
மின்னுந் தோழியென் னின்னுயிர் குறித்தே. 

என்பது பருவ வரவின்கண் ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்திஉரைத்தது.

கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றன்.

    (பி-ம்.) 1. ‘அவரேஎஎ’; 4. ‘படர்சார்ந்’; 6. ‘பெய்யுமுழங்கு’.

    (ப-ரை.) தோழி--, அவர் - அத்தலைவர், கேடு இல்விழு பொருள் - கேடில்லாத உயர்ந்த செல்வத்தை, தருமார் -கொணரும் பொருட்டு, பசு இலை வாடா வள்ளி காடுஇறந்தோர் - பச்சை இலைகளை உடைய வாடாத வள்ளிக்கொடி படர்ந்த காட்டைக் கடந்து சென்றார்; யான்--, தோடுஆர் எல் வளை நெகிழ - தொகுதியார்ந்த விளக்கத்தைஉடைய வளைகள் நெகிழும்படி, ஏங்கி - கவலையுற்று,பாடு அமை சேக்கையில் - படுத்தல் அமைந்த படுக்கையின் கண் வீழ்ந்து, படர் கூர்ந்திசின் - துன்பம் மிக்கேன்; மாமழை - கரிய மேகம், அன்னள் - அத்தகைய துன்பத்தைஉடையாள், அளியள் - இரங்கத் தக்காள், என்னாது -என்று எண்ணாமல், இன்னும் பெய்ய முழங்கி - இன்னும்மழையைப் பெய்யும் பொருட்டு முழக்கம் செய்து, என்இன்னுயிர் குறித்து - எனது இனிய உயிரைக் கொள்ளுதலைக்குறித்து, மின்னும் - மின்னா நின்றது.

    (முடிபு) தோழி, அவர் காடிறந்தோர்; யான்படர் கூர்ந்திசின்; மழைஎன் உயிர் குறித்து மின்னும்.

    (கருத்து) கார்காலம் வந்தது கண்டு யான் துன்புறு வேனாயினேன்.

    (வி-ரை.) அவர்: நெஞ்சறி சுட்டு. கேடில் விழுப் பொருள் - தன்னை உடையார் கெடுதலன்றித் தான் கெடுதலறியாத சீரிய பொருள்; “வீத லறியா விழுப்பொருள்” (கலி. 86:21) என்ற இடத்து நச்சினார்க்கினியர் இங்ஙனம் பொருள் எழுதினர். “கேடில் விழுச்செல்வங் கல்வி” (குறள், 400) என்று கூறுவதே தக்கதாதலின் கேடுடைய செல்வத்தை இங்ஙனம் கூறியது குறிப்பு மொழி எனலும் பொருந்தும்; இ. கொ.8, உரை பார்க்க.

    வள்ளியங்காடு: அம், சாரியை, படர் - நினைந்து வருந்தும் துன்பம், அன்னள் - மிக்க வருத்தத்தை உடையவள், உயிர் குறித்து - உயிரைக் கொள்ளுதல் குறித்து (குறுந். 188:4, 197:5.)

    மேற்கோளாட்சி 2.சொல்லின் ஈற்றிலும் அசை நிலை ஏகாரம் வந்தது(தொல். இடை, 9, ந.); ஈற்றசை செய்யுளிடையும் வந்தது (இ. வி. 278.)

    1-2. அளவடிக்கண் ஆசிரியப்பாவில் சீர் கூனாய் வந்தது (தொல்.செய். 47, இளம்,49, பேர், ந.); நான்கு இயற்சீரும் வந்தன (தொல். செய். 13,பேர், ந.); வருக்க வெதுகை வந்தது (தொல். செய். 94, பேர்);செய்யுளிடைக்கண் வரும் ஈற்றசை ஏகாரம் இரண்டு மாத்திரை பெற்றுப்பாவென்னும் உறுப்பை விளக்கி நின்றது(தொல். இடை, 38, ந.);வினையிடத்து ரகர ஈற்றயல் ஆகாரம் ஓகாரமாயிற்று (இ. வி. 326.)

    மு. ஆசிரியத்துள் அடிமுதற்கண் கூன் வந்தது (வீர.யாப்புப். 13;யா.வி. 94; யா.கா.ஒழிபு. 8; இ.வி. 751.)

    ஒப்புமைப் பகுதி 2. வள்ளியங்காடு: முல்லைப். 101. வாடா வள்ளி - கூத்து;தொல். புறத். 5; பெரும்பாண். 370.

     1-2. பொருள் தரும் பொருட்டுத் தலைவர் சென்றார்: குறுந். 254:6,331:8, 350:8, 395:2. 3. வளை நெகிழ்தல்:குறுந். 11:1, ஒப்பு.

     4. பாடமை சேக்கை: “படையமை சேக்கை” (அகநா. 289:12.)

(216)