(‘பகற் குறியும் இரவுக் குறியும் இப்பொழுது பொருந்தா; என்செய்வேம்!’ என்றதற்குத் தலைவன் உடன்போக்கை எண்ணிவெய்துயிர்த்தான்; அது நன்றேயென நான் கூறினேன்” எனத் தோழிதலைமகளுக்குக் கூறி உடன்போக்கை நயக்கச் செய்தது.)
  217,    
தினைகிளி கடிகெனிற் பகலு மொல்லும்  
     
இரவுநீ வருதலி னூறு மஞ்சுவல் 
     
யாங்குச்செய் வாமெம் மிடும்பை நோய்க்கென  
     
ஆங்கியான் கூறிய வனைத்திற்குப் பிறிதுசெத்  
5
தோங்குமலை நாட னுயிர்த்தோன் மன்ற  
     
ஐதே காமம் யானே 
     
கழிமுதுக் குறைமையும் பழியுமென் றிசினே. 

என்பது உடன்போக்கு நயப்பத் தோழி தலைமகட்குக் கூறியது.

தங்கால் முடக்கொல்லனார் (பி-ம். முடிக்கோலவனார், முடக்கோவலனார்.)

     (பி-ம்.) 1. ‘தினைக்கிளி கடிதெனிற்’; 2. ‘வருதலு’; 4. ‘வனைத்தற்கு’ 6. ‘ஐதேய்கம்ம’, ‘ஐதேகம்ம’, ‘ஐதெமக்கம்ம’, ‘வைதேஎ யகமயானேய’.

     (ப-ரை.) தினை கிளி கடிகெனின் - தினையின்கண் படியும்கிளிகளை ஓட்டுவீர்களாக என்று கூறி எம் தாய் எம்மைப்போதரவிடின், பகல் ஒல்லும் - பகற்காலம் நின்னோடுஅளவளாவுதற்குப் பொருந்தும், அங்ஙனம் இன்மையின்,இரவு நீ வருதலின் - இராக் காலத்து நீ வருதலினால், ஊறுஅஞ்சுவல் - வழியின்கண் நேரும் துன்பங்களுக்கு அஞ்சுவேன், எம் இடும்பை நோய்க்கு - துன்பத்தைத் தரும் எமதுகாமநோயை நீக்குதற்கு, யாங்கு செய்வாம் - எவ்வாறுபரிகாரம் செய்வேம், என ஆங்கு யான் கூறிய அனைத்திற்கு -என்று அவ்வாறு யான் சொன்ன அதற்கு, ஓங்கு மலைநாடன் - உயர்ந்த மலை நாட்டை உடைய தலைவன்,பிறிது செத்து - வேறு ஒன்றை நினைத்து, உயிர்த்தோன் -அந்நினைவினால் வெய்துயிர்த்தான்; காமம் ஐது - காமநோய் நுண்ணியது; யான் - அவனது குறிப்பை உணர்ந்தயான், கழி முதுக்குறைமையும் - நீ நினைத்தவாறு செய்தல்மிக்க அறிவுடைமையும், பழியும் - பழிக்குக் காரணமும்ஆம், என்றிசின் - என்றேன்.

     (முடிபு) என யான் கூறிய அனைத்திற்கு நாடன் உயிர்த்தோன்; காமம் ஐது; யான் முதுக்குறைமையும் பழியும் என்றிசின்.

     (கருத்து) தலைவன் நின்னை உடன் அழைத்துச் செல்ல விரும்புகின்றான்.

     (வி-ரை.) உம்மை இரண்டும் அசை நிலைகள். எம் நோய் என்றாள்காம நோயால் தலைவி துயருறவும் அது கண்டு தான் துயருறவும்காரணமாதலின். அனைத்திற்கு - அவ்வள விற்கெனலும் ஆம் (குறள். 1129, உரை), ஐது - மெல்லிதெனலும் ஆம்: “மலரினு மெல்லிது காமம்” (குறள். 1289.)

     ‘இப்பொழுது தினை காவலை ஒழிந்தேமாதலின் பகற்குறி வாயாது; இரவுக் குறியோ ஆற்றூறஞ்சும் நிலையினது; ஆதலின் அதனையும் விரும்பேம். இந்நிலையில் யாது செய்வேம்!’ எனக் கவன்றேன். அதற்குரிய பரிகாரம் ஒன்றை நினைந்த தலைவன் அதனை வாய்விட்டுக் கூற அஞ்சிப் பெருமூச்சு விட்டான். காமம் எவ்வளவு நுண்ணியது! யான் அவன் குறிப்பை உணர்ந்தேன். அவன் நினைந்ததே தக்க விரகாகத் தோற்றியது. ‘நீ நினைந்தது அறிவுடைமையே ஆகும்; ஆயினும் ஊரினர் பழி கூறுதற்கு இடமாம்’ என்றேன்” என்று தோழி கூறினாள். இதனால் தலைவன் உடன்போக்கு நயக்கின்றான் என்பதையும், அதனையன்றி வேறு பரிகாரம் இல்லை என்பதையும், அங்ஙனம் செய்தலே அறிவுடைமைக்கு ஏற்றது என்பதையும், பழிக்கு அஞ்சி அறிவுடைய செயலை விலக்குதல் தகாது என்பதையும் புலப்படுத்தித் தலைவியை உடம்படச் செய்தாள்.

     மேற்கோளாட்சி 6. ஐயென்னும் உரிச்சொல் வியப்பென்னும் குறிப்பில் வந்தது (தொல். உரி. 88, இளம், 89, சே. 87, ந.)

     ஒப்புமைப் பகுதி 3. யாங்குச் செய்வாம்: குறுந். 268:3, 380:5; நற். 51:1, 259:1; அகநா. 252:9. 6. ஐதே காமம்:குறுந். 401:6; நற். 143:1,மு. திருச்சிற். 181.

     (பி-ம்.) ஐதேகம்ம: நற். 52:11, 240:1

(217)