(தலைவன் கூறிச் சென்ற கார் காலம் வரவும் அவன் வாராமையால், “தாம் வர வேண்டிய இக் காலத்தும் வந்திலர்; இனி என் செய்வேன்!” என்று தோழிக்குத் தலைவி கூறியது.)
 220.    
பழமழைக் கலித்த புதுப்புன வரகின் 
    
இரலை மேய்ந்த குறைத்தலைப் பாவை 
    
இருவிசேர் மருங்கிற் பூத்த முல்லை 
    
வெருகுசிரித் தன்ன பசுவீ மென்பிணிக் 
5
குறுமுகை யவிழ்ந்த நறுமலர்ப் புறவின் 
    
வண்டுசூழ் மாலையும் வாரார் 
    
கண்டிசிற் றோழி பொருட்பிரிந் தோரே. 

என்பது பருவ வரவின்கட் கிழத்தி தோழிக்கு உரைத்தது.

ஓக்கூர் மாசாத்தி.

     (பி-ம்.) 1. ‘பழமழை கலித்த’; 3. ‘அருவிசேர்’; 4. ‘பருவீ’.

     (ப-ரை) தோழி-, பொருள் பிரிந்தோர் - பொருள்ஈட்டி வரும் பொருட்டு நம்மை இங்கு வைத்துப் பிரிந்ததலைவர், பழமழை கலித்த - பழைய மழையினால் தழைத்த,புது புனம் வரகின் - புனத்தில் உள்ள புதிய வரகினது,இரலை மேய்ந்த குறைதலை பாவை இருவி - ஆண் மான்மேய்ந்தமையால் குறைதலை உடைய நுனியை உடையகதிர் அரிந்த தாள், சேர் மருங்கின் - சேர்ந்த பக்கத்தில், பூத்தமுல்லை - மலர்ந்த முல்லைக் கொடியினது, வெருகு சிரித்தன்ன - காட்டுப் பூனை சிரித்தாற் போன்ற தோற்றத்தைஉடைய, பசு வீ மெல் பிணி குறு முகை - செவ்விப் பூவின்மெல்லிய பொதிதலை உடைய சிறிய அரும்புகள், அவிழ்ந்த -மலர்ந்த, நறு மலர் புறவின் - நறிய மலர்களை உடையமுல்லை நிலத்தில், வண்டு சூல் மாலையும் வாரார் - வண்டுகள்அம் மலரை ஊதும் பொருட்டுச் சுற்றுகின்ற மாலைக்காலத்திலும் வாராராயினார், கண்டிசின் - இதனைக் கருதுவாயாக.

     (முடிபு) தோழி, பிரிந்தோர் மாலையும் வாரார்; கண்டிசின்.

     (கருத்து) தலைவர் தாம் கூறிச் சென்ற பருவம் வரவும் வந்திலர்.

     (வி-ரை.) பழமழை யென்றது வரகு விதைத்த காலத்திற் பெய்த மழையை. புதுமை கதிரின் மேற்று. பாவை - மானால் உண்ணப்படும்இலையை உடைய வரகின்தாள்; இங்ஙனமே அறுகின் தண்டையும்கூறுதல் மரபென்று தெரிகிறது;

   
“பதவின் பாவை முனைஇ மதவுநடை 
   
 அண்ண லிரலை யமர்பிணை தழீஇ”, 
   
“பழங்கன்று கறிக்கும் பயம்பம லறுகைத் 
   
 தழங்குகுரல் வானின் றலைப்பெயற் கீன்ற 
   
 மண்ணுமணி யன்ன மாயிதழ்ப் பாவை” (அகநா. 23:7-8, 136:11-3.)  

இருவி - கதிர்கொய்த தட்டை (திருச்சிற். 144, பேர்.)

     ஒப்புமைப் பகுதி 1. பழநீர்: குறுந். 251:5. மழையாற் கலித்த வரகு: “வரகிணர் சிறப்ப, மாமலை புலம்பக் கார்கலித் தலைப்ப” (ஐங். 496:1-2.)

     1-2. வரகை இரலை மேய்தல்: “வானம் வாய்த்த வயங்குகதிர்வரகிற், றிரிமருப் பிரலையொடு மடமா னுகள” (முல்லைப். 98-9);“ஈரிலை வரகின், கவைக்கதிர் கறித்த காமர் மடப்பிணை, அரலை யங்காட் டிரலையொடு வதியும்” (நற். 121:2-4.)

     4. பசுவீ: குறுந். 62:1, 183:1.

     4-5. பிணியவிழ்ந்த பூ: குறுந். 366:4-5.

     3-5. முல்லையரும்பிற்கு வெருகின்பல்: (குறுந். 240:3); ‘‘பிள்ளைவெருகின் முள்ளெயிறு புரையப் பாசிலை முல்லை முகைக்கும்” (புறநா. 117:8-9); “வெருகு வேட்பச் சிரிப்பனபோன் முகைத்த முல்லை” (சீவக. 1651.)

     முல்லை கார்காலத்தில் மலர்தல்: குறுந். 126:3-5, ஒப்பு.

     7. கண்டிசின்: குறுந். 240:5, 359:1.

     கண்டிசிற் றோழி: குறுந். 112:5.

(220)