(தலைவன் கூறிச்சென்ற பருவம் வந்தது கண்டு கவன்ற தலைவியை, “நீ ஆற்றியிருத்தல் வேண்டும்” என வற்புறுத்திய தோழியை நோக்கி, “முல்லை மலர்ந்தது; கார்காலம் வந்து விட்டது; அவர் வந்திலர்; யான் எங்ஙனம் ஆற்றியிருப்பேன்?” என்று தலைவி கூறியது.)
  221.    
அவரோ வாரார் முல்லையும் பூத்தன 
    
பறியுடைக் கையர் மறியினத் தொழியப் 
    
பாலொடு வந்து கூழொடு பெயரும் 
    
யாடுடை யிடைமகன் சென்னிச் 
5
சூடிய வெல்லாஞ் சிறுபசு முகையே. 

என்பது பிரிவிடைப் பருவ வரவின்கண் வற்புறுத்தும் தோழிக்குக்கிழத்தி உரைத்தது.

உறையூர் முதுகொற்றன் (பி-ம். முதுகூற்றன்.)

     (பி-ம்.) 4-5. சென்னி சூடிய.

     (ப-ரை.) தோழி--, முல்லையும் பூத்தன - முல் லைகளும்மலர்ந்தன; பறியுடை கையர் - பறியோலையை உடையகையினை உடையார், மறி இனத்து ஒழிய - குட்டிகளைஉடைய ஆட்டின் திரளோடு சென்று தங்க, பாலொடு வந்துகூழொடு பெயரும் - பாலைக் கொணர்ந்து வந்து பாற்சோற்றைப் பெற்று மீண்டு செல்கின்ற, யாடுடை இடைமகன் - ஆடுகளை உடைய இடையன், சென்னி சூடியஎல்லாம் - தன் தலையில் அணிந்து கொண்டன யாவும்,சிறு பசு முகையே - சிறிய செவ்வியை உடைய அம்முல்லையின் அரும்புகளே ஆகும்; அவர் வாரார் - அத்தலைவர் இன்னும் வாராராயினர்.

     (முடிபு) முல்லையும் பூத்தன; இடைமகன் சூடியவெல்லாம்முகையே; அவர் வாரார்.

     (கருத்து) கார்ப்பருவம் வரவும் தலைவர் வந்திலர்.

     (வி-ரை.) அவரோ: ஓகாரம் அசை நிலை; இரங்கற் குறிப்புமாம்.முல்லையும்: உம்மை, சிறப்பு. முல்லை பூத்தல் கார் காலத்திற்குஅடையாளம். பறி - இடையர்கள் மழைக்காகத் தலையில் கவிழ்த்துக்கொள்ளும் ஒரு வகைக் கருவி; இது பனை ஓலையால் செய்யப்படுவது;இதில் படுத்தலும் உண்டு.

     மாலைக் காலத்தில் ஆட்டை மேய்ப்பவர்கள் மேய்ச்சல் நிலத்தில்தங்க இடையன் பாலை வீட்டிற்குக் கொணர்ந்து கொடுத்து அவர்களுக்குப் பால் சோற்றைக் கொண்டு சென்றான். பாலை விற்கும் பொருட்டு வந்த இடையன் ஊரில் அதனை விற்று விட்டு அதற்கு விலையாக உணவுக்குரிய தானியத்தைப் பெற்றுச் சென்றானெனலும் ஒன்று. இடையர் பாலை விற்றல் வழக்கம்; “பானொடை யிடையன்” (நற். 142:4.) அவன் செல்லும் வழியில் பூத்த முல்லைப் பூக்களைப் பறித்துத் தன் தலையில் சூடினான்.

     முகையே: ஏகாரம் பிரி நிலை.

     மேற்கோளாட்சி மு. இருத்தல் என்னும் உரிப் பொருள் வந்தது: ‘இதுபருவம் கண்டு ஆற்றாது கூறியது. இது முல்லை சான்ற கற்பாயிற்று;அவன் கூறிய பருவம் வருந்துணையும் ஆற்றியிருத்தலின்’ (தொல். அகத். 14, ந. )

     ஒப்புமைப் பகுதி 1. அவரோ வாரார்; ஐங். 341-50.

     முல்லை கார்காலத்தில் மலர்தல்: குறுந். 126:3-5, ஒப்பு.

     2. பறி. “பறிப்புறத் திட்ட .. இடையன்” (நற். 142:4); “மறித்துரூஉத்தொகுத்த பறிப்புற விடையன்” (அகநா. 94:4); “பறியோலை மேலொடுகீழா விடையர், பிறியோலை பேர்த்து விளியாக் கதிப்ப” (திணைமாலை.113); “பறியோலைச் சயனத்தர்” (திவ். பெரியாழ்வார், 1.1:5.) 3. கூழ்: பெரும்பாண். 175.

    4.ஆடுடை இடைமகன்: நற். 266:3; “அ, உ அறியா வறிவிலிடைமகனே” (யா.கா.மேற்.)

    4-5.இடையன் முல்லைப் பூ அணிதல்: குறுந். 358:7.

    5.பசுமுகை - போது; குறுந். 323:5

(221)