(தலைவன் பிரிந்திருந்த காலத்தில், “தலைவர் நம்மை நினைத்திலர்போலும்!” எனக் கவன்ற தலைவியை நோக்கி, “அவர் நினையாமலிரார்;வினை முற்றாமையின் வந்திலர்” என்று தோழி கூறியது.)
 232.   
உள்ளார் கொல்லோ தோழி யுள்ளியும் 
    
வாய்ப்புணர் வின்மையின் வாரார் கொல்லோ 
    
மரற்புகா வருந்திய மாவெருத் திரலை 
    
உரற்கால் யானை யொடித்துண் டெஞ்சிய 
5
யாஅ வரிநிழற் றுஞ்சும் 
    
மாயிருஞ் சோலை மலையிறந் தோரே. 

என்பது பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது.

     (வற்புறுத்தியது - துணிவுபடச் சொல்லியது.)

ஊண்பித்தை.

    (பி-ம்.) 3. ‘வரற்புகா’, ‘வருந்த’; 4. ‘பொளித்துண்’.

    (ப-ரை.) தோழி -, மரல் புகா அருந்திய - மலராகியஉணவை உண்ட, மா எருத்து இரலை - பெரிய பிடரைஉடைய ஆண்மான், உரல் கால் யானை - உரலைப்போன்ற காலை உடைய யானை, ஒடித்து உண்டு எஞ்சிய -முறித்து உண்டு குறையச் செய்த, யாஅ வரிநிழல் - யாமரத்தின்புள்ளிகளை உடைய நிழலில், துஞ்சும் - தூங்குகின்ற, மாஇரு சோலை மலை இறந்தோர் - மிகப் பெரிய சோலைகளைஉடைய மலைகளைக் கடந்து நம்மைப் பிரிந்து சென்றதலைவர், உள்ளார் கொல் - நம்மை நினைத்தாரலரோ?உள்ளியும் - அன்றி நினைத்தும், வாய்ப்பு உணர்வுஇன்மையின் - வினை முற்றி மீள்வதற்கு வாய்த்த செவ்வியைஉணராமையினால், வாரார் கொல் - வாராராயினரோ?

    (முடிபு) தோழி, மலையில் இறந்தோர் உள்ளார் கொல்? உள்ளியும்வாய்ப்பு உணர்வின்மையின் வாரார்கொல்?

    (கருத்து) தலைவர் வினை முற்றாமையின் வந்திலர்; விரைவில்வருவர்.

    (வி-ரை.) தலைவி, “அவர் வாராராயினர்; நம்மை நினைத்திலர்”என்று கவன்றனளாதலின், அவள் கருத்தையும் ஐயத்தின் பாற்படுத்தித்தன் கருத்தையும் ஐயத்தின்பாற் படுத்தினாள்; படுப்பினும் வாய்ப்புஉணர்வின்மையின் வாராராயினர் என்பதே தோழி கருத்தாகக் கொள்க.

    கொல்: ஐயம். ஓ: அசை நிலை.

    வாய்ப்பு- வாய்த்தல்; என்றது தாம் நினைந்து வந்த வினை முடிந்துமீள்வதற்குரிய செவ்வி வாய்த்தல். புகா - உணவு, உண்டு - உண்ணஎனினுமாம்; எச்சத்திரிபு.

    தனக்கு வேண்டிய உணவைப் போதிய அளவு உண்ட இரலையாமரத்தின் அடியின்கண் வந்து துஞ்சுதலைப் பார்ப்பாராதலின் தமக்குவேண்டிய வினையை நன்கு முடித்து ஈண்டு வந்து நின்னோடு இன்புறுவர் என்பது குறிப்பு.

    மேற்கோளாட்சி 4. செய்தெனெச்சம் செயவெனெச்சப் பொருட்டாய் நின்றது (தொல். வினை. 34, சே.); செய்தெனெச்சம் வினைமுதல் வினை கொள்ளாது பிறிதின் வினைகொண்டு ஈறு திரிந்தது ( தொல். எச்ச. 61,சே, 55, தெய்வச்.); செய்தெனெச்சம் தனக்குரிய வினை முதலானன்றிப்பிற வினை முதலோடு காரண காரியமின்றி வந்து முடிந்தது( தொல். வினை. 34,ந.); செய்தனெச்சம் பிறவினை கொண்டு முடிந்தது(சீவக. 15, ந.); முதனிலை திரியாத பிறவினை (இ. கொ. 71.)

    4-5. செயவெனெச்சம் செய்தெனெச்சமாகத் திரிந்தது ( நன். 345, மயிலை, 346, சங்.); முதற்பொருளின் வினை தமக்குரிய வினை முதல்வினையானன்றிப் பிறவினை முதல் வினையோடு முடிந்தது (இ.வி. 248);எஞ்சிய என்பதற்கு எஞ்சுவித்தவெனப் பொருள் கொள்ள வேண்டும்( தொல். பாயிரவிருத்தி. ப. 10.)

    ஒப்புமைப் பகுதி 1. உள்ளார்கொல்லோ தோழி: குறுந். 16:1, ஒப்பு.

    1-2. ‘‘உள்ளார் கொல்லோ காதல ருள்ளியும், சிறந்த செய்தியின்மறந்தனர் கொல்லோ” (அகநா. 235:2-3.)

    3. மரல்:குறுந். 100:2.

    மான் மரலை உண்ணுதல்:கலி. 6:1; “மடமா னசாவினந் திரங்குமரல் சுவைக்கும்”, “வரிமரற் கறிக்கு மடப்பிணைத், திரிமருப் பிரலையகாடிறந்தோரே” (அகநா. 49:12, 133:17-18.)

    4.உரற்கால் யானை: “கறையடிக், குன்றுறழ் யானை” (பெரும்பாண். 351-2); “உரல்புரை பாவடி ... ஒருத்தல்” (கலி. 21:1-2); “உரற்காற் குஞ்சரம்” (தஞ்சை. 413.)

    4-5.யானை யாவை உண்ணல்: குறுந். 37:3-4, ஒப்பு; மலைபடு. 429.

(232)