(தலைவன் இரவுக் குறி வந்து ஒழுகா நின்ற காலத்துக் காப்பு மிகுதியால் தலைவியைக் காணப் பெறாமையின், தோழி அதன் காரணம் கூறி வரைவு கடாயது.)
 244.   
பல்லோர் துஞ்சு நள்ளென் யாமத் 
    
துரவுக்களிறு போல்வந் திரவுக்கதவ முயறல் 
    
கேளே மல்லேங் கேட்டனம் பெரும 
    
ஓரி முருங்கப் பீலி சாய 
5
நன்மயில் வலைப்பட் டாங்கியாம் 
    
உயங்குதொறு முயங்கு மறனில் யாயே. 

என்பது இரவுக்குறி வந்தொழுகா நின்ற தலைமகற்குத் தம் காவல் மிகுதியாற் (பி-ம். தாம் காவன் மிகுதியாற்) புறப்பட்டு எதிர்கொள்ளப் பெறாதவழி, பிற்றை (பி-ம். இற்றை) ஞான்று தோழி, "வரைந்து கொளினல்லது இவ்வொழுக லாற்றின் (பி-ம். இவ்வொழுகலாறு) இனிக் கூடல் (பி-ம். கூட) அரிது" என வரைவு கடாயது.

    (பிற்றை ஞான்று - மறுநாள். இவ்வொழுகலாறென்றது களவுஒழுக்கத்தை.)

கண்ணன்.

    (பி-ம்,.) 2. ‘கதவு’; 3. ‘கேட்டனெம்’.

    (ப-ரை.) பெரும - தலைவ, பல்லோர் துஞ்சும் நள்ளென் யாமத்து - ஊரில் உள்ளார் பலரும் துயிலும் இருள் செறிந்த இடையிரவின் கண், உரவு களிறு போல் வந்து - வலியைஉடைய களிற்றைப் போல வந்து, இரவு கதவம் முயறல் - இராக் காலத்தே தாழிட்ட கதவைத் திறக்க முயன்றதனால் உண்டான ஒலியை, கேளேம் அல்லேம் - யாம் கேளேம் அல்லேம்; கேட்டனம் - கேட்டேம்; ஓரி முருங்க - தலைக்கொண்டை சிதைய, பீலி சாய - தோகை மெலிய, நல் மயில்வலை பட்டாங்கு - நல்ல மயில் வலையின் கண்ணே அகப் பட்டாற் போல, யாம் உயங்கு தொறும் - யாம் வருந்துந் தோறும், அறன் இல் யாய் - மறமிக்கதாய், முயங்கும் - எம்மைத் தழுவுவாள்; அதனால் நின் குறிப்பறிந்து நின்பால் வர இயலவில்லை.

    (முடிபு) பெரும, கதவம் முயறல் கேளேம் அல்லேம்; கேட்டனம்;யாய் முயங்கும்.

    (கருத்து) காவல் மிகுதியால் நின்னைத் தலைவி காண்டல் அரிதாதலின் வரைந்து கோடலே நலம்.

    (வி-ரை.) தலைவன் இரவுக் குறியின் கண் தலைவியோடு அளவளாவுதற்கு வந்து கதவைத் தட்டித் தன் வரவைக் குறிப்பித்தான். அப்பொழுது அவன் வந்தது தெரிந்த தலைவி வருந்தினாள். அவளது வருத்தத்தின் காரணத்தை உணராத செவிலி அவள் அச்சத்தால் அங்ஙனம் வருந்தினாள் என்று கருதி இறுகத் தழுவிக் கொண்டாள். இச் செய்தியையே தோழி தலைவனுக்குக் கூறினாள்.

    பல்லோர் துஞ்சும் யாமம் ஆதலின் தலைவன் செய்த ஒலி தெளிவாகக் கேட்டது. தாம் கேட்டதை வற்புறுத்திக் கூறுவாளாகி எதிர் மறையாலும் உடம்பாட்டாலும் உணர்த்தினாள். நள் - நளி என்பதன் திரிபு; மலைபடு. 397.

    ஓரி - ஆண் தலைமயிர்; இங்கே ஆண் மயிலின் கொண்டைக் காயிற்று. தலைவனை எதிர்ப்படாது தடுத்தலின் அறனில்யாய் என்றாள்.

    மேற்கோளாட்சி மு. காப்பு வரையிறத்தல் (தொல். களவு. 24, இளம்.); இரவுக் குறிக் காப்பின் கடுமை தோழி கூறியது ( தொல். களவு. 23, ந.)

    ஒப்புமைப் பகுதி 1. நள்ளென் யாமம; குறுந். 6:1 ஒப்பு. பல்லோர் துஞ்சும் யாமம் (குறுந். 6:1-3, 302:6-7, 355:4); "துஞ்சூர் யாமத்தும்", "பலர்மடி பொழுதில்" (ஐங்.13:4, 104:2.)

    2. களிறு தலைவனுக்கு: குறுந். 161:7, ஒப்பு.

    தலைவன் கதவம் முயறல்: "களையாநின் குறிவந்தெங் கதவஞ் சேர்ந் தசைத்தகை", "பொருந்துநோன் கதவொற்றிப் புலம்பியா முலமர" (கலி. 68:8, 83:2); "வீழாக் கதவ மசையினன் புகுதந்து", "கடைநின், றருங்கடிக் காப்பி னகனக ரொருசிறை, எழுதி யன்ன திண்ணிலைக் கதவம், கழுதுவழங் கரைநாட் காவலர் மடியத், திறந்து" (அகநா. 102:13, 311:1-5.)

    5. மயில் வலைப்படுதல்: குறிஞ்சிப். 250; கலி. 128:16; சீவக. 424, ந.

    6. அறனில் யாய்: குறுந். 262:2; நற். 63:6, 145:7; 376:12.

    அன்னை தலைவியை முயங்கல்: குறுந். 353:6-7.

(244)