விழுமிது - அறம், பொருள் முதலியன (அகநா. 13:12, உரை); மிக உயர்ந்த பொருள் எனலுமாம். கேட்பின் விழுமிது கழிவதாயினும் நீடலர். நீடலராதலின் துயர் கெடும். கெட என்ற எச்சம் நீடலர் என்றதன் கண்ணுள்ள அலர் என்ற வினைக் குறிப்பைக் கொண்டு முடிந்தது. நாட்டுயர் - நாள்தோறும் படும் துயர் எனலும் பொருந்தும்.
முறுக்கேறிய நூலாயின் மெல்லிய மலர்களைத் தொடுத்தற்கு இயலாமையின் நெகிழ்நூலைக் கூறினாள். மாலைகளை நூலால் கட்டும்வழக்கமும் உண்டு. அணையினாற் குறையில்லை என்பாள் அதனைச் சிறப்பித்தாள்.
தலைவன் பிரிந்த காலத்தில் தலைவி பாயலில் இருந்து துயருறும் செய்தி நெடுநல்வாடையில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
ஒலி கழை - தன்பாலுள்ள துளை வழியே காற்றுப் போகையில் ஒலிக்கும் மூங்கில் எனலும் ஆம்;
| "ஆடமைக் குயின்ற வவிர்துளை மருங்கிற் |
| கோடை யவ்வளி குழலிசை யாக" (அகநா. 82:1-2); |
தழைத்த மூங்கில் என்பதும் ஒன்று. புகா - உணவு; "புகாஅக்காலை" ( தொல். களவு. 16) என்பதன் உரையைப் பார்க்க. பிறங்கல் - பிறங்குகல் என்பதன் விகாரமுமாம்.
ஒப்புமைப் பகுதி 2-3. நூலாற் பூவைத் தொடுத்தல்: "பன்னூன் மாலை" (குறுந். 173:2); "விரிநுண்ணூல் சுற்றிய வீரித ழலரி" (கலி. 64:3); "புரிநூன் மீக்கோள் பூம்புறத் தேற்றதன், தெரிநூல் வாங்கி யிருநூற் கொளீஇப், பவழமும் வெள்ளியும் பசும்பொன் னடரும். திகழ்கதிர் முத்தமுந் திருமணிக் காசும், உறழ்படக் கோத்த வொளியின போல,வண்ணம் வாடாது வாசங்கலந்த, தண்ணறும் பன்மலர் தானத் திரீஇ,வாட்டொழிற் றடக்கையின் வத்தவர் பெருமகன், சூட்டுநலம் புனைந்து சுடர்நுதற் கீய" (பெருங். 2.15: 126-34.)
6. புகா: குறுந். 232:3, 258:5; ஐந். எழு. 31.
புலியின் புலால் நாற்றம் வீசும் உணவு: "புலவுப்புலி துறந்த கலவுக்கழி கடுமுடை" (அகநா. 3:9, 97:3.)
கல்லளையும் புலியும்: "பைங்கண் வல்லியங் கல்லளைச் செறிய" (அகநா. 362:4); "புலிசேர்ந்து போகிய கல்லளை போல" (புறநா. 86:4.)
8. பிறங்கன் மலை: குறுந். 144:7, 285:8.
(253)