(தலைவனது பிரிவை ஆற்றாதிருந்த தலைவியை நோக்கி, "நன்னிமித்தங்கள் உண்டாகின்றன; ஆதலின் தலைவர் வந்து விடுவர்; நீ ஆற்றுக" என்று தோழி கூறியது.)
 260.   
குருகு மிருவிசும் பிவரும் புதலும் 
    
வரிவண் டூத வாய்நெகிழ்ந் தனவே 
    
சுரிவளைப் பொலிந்த தோளுஞ் செற்றும் 
    
வருவர்கொல் வாழி தோழி பொருவார் 
5
மண்ணெடுத் துண்ணு மண்ணல் யானை 
    
வண்டேர்த் தொண்டையர் வழையம லடுக்கத்துக் 
    
கன்றி லோரா விலங்கிய 
    
புன்றா ளோமைய சுரனிறந் தோரே. 

என்பது அவர் வரவிற்கு நிமித்தமாயின கண்டு, ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி சொல்லியது.

கல்லாடனார்.

    (பி-ம்.) 2. ‘வாய்ஞெகிழ்ந்’; 6. ‘வழையமரடுக்கத்துச்’, ‘வழைமலரடுக்கத்துச்’; 7. ‘கன்றி லேரா’.

    (ப-ரை.) தோழி-, குருகும் இருவிசும்பு இவரும் - நாரைகளும் கரிய வானத்தின்கண் உயரப் பறக்கும்; புதலும் - புதலிலுள்ள போதுகளும், வரி வண்டு ஊத - கோடுகளை உடைய வண்டுகள் ஊதுவதனால், வாய் நெகிழ்ந்தன - மலர்ந்தன; சுரி வளை பொலிந்த தோளும் - சுழித்த சங்காற் செய்த வளையினால் விளங்கிய தோள்களும், செற்றும் - நெகிழ்ச்சி நீங்கி வளையோடு செறியும்; ஆதலின், பொருவார் - பகைவரது, மண் எடுத்து உண்ணும் - பூமியைக் கொண்டு நுகரும், அண்ணல் யானை - தலைமை பொருந்திய யானையையும், வள்தேர் - வளவிய தேரையுமுடைய, தொண்டையர் - தொண்டை மான்களுக்குரிய, வழை அமல் அடுக்கத்து - சுர புன்னைகள் நெருங்கிய மலைப் பக்கத்தில், கன்று இல்ஓர் ஆ - கன்றில்லாத ஒற்றைப் பசுவை, விலங்கிய - நிழலினால் தம்பால் வரச் செய்து தடுத்த, புல்தாள் ஓமைய சுரன் - புல்லிய அடியை உடைய ஓமை மரங்களை உடைய பாலை நிலங்களை, இறந்தோர் - கடந்து சென்ற தலைவர், வருவர்-.

    (முடிபு) தோழி, குருகும் இவரும்; புதலும் நெகிழ்ந்தன; தோளுஞ்செற்றும்; சுரன் இறந்தோர் வருவர்.

    (கருத்து) நன்னிமித்தங்கள் உண்டாதலின் தலைவர் வருவர்.

    (வி-ரை.) இதில் கூறப்படும் நிமித்தங்கள் கூதிர்க் காலம் என்பதைப் புலப்படுத்தின (நெடுநல். 15-7.) புதல்: ஆகுபெயர். வண்டூத மலர்கள் மலர்வது இயல்பு. வளை - சங்கினால் செய்த தோள் வளை. வளை இறுகுதல் நன்னிமித்தம்;

   
"மயிர்வார் முன்கை வளையுஞ் செறூஉம் 
   
 ....... ............ ............. .................  
   
பெருங்க னாடன் வருங்கொ லன்னாய்"          (ஐங். 218:2-5.)  

    கொல், வாழி: அசை நிலைகள். பொருவார் மண்ணெடுத்துண்ணும்தொண்டையர் என இயைக்க. பொருவார் மண் எடுத்து உண்ணுதலாவது, பகை அரசர்களுடைய நாடுகளை வென்று அடிப்படுத்து அவற்றால் வரும் பயன்களை நுகர்தல்; இப்பொருள் பற்றியே வட மொழியிலும் அரசனை, ‘பூபுக்’ என்று கூறுவர்;

   
"பிறர்மண் ணுண்ணுஞ் செம்ம னின்னாட்டு 
   
 வயவுறு மகளிர் வேட்டுணி னல்லது 
   
 பகைவ ருண்ணா வருமண் ணினையே"          (புறநா. 20:13-5.)  

தொண்டையரடுக்கம் என்றது வேங்கட மலையை;

   
"வென்வேற் றிரையன் வேங்கட நெடுவரை", 
   
"வினைநவில் யானை விறற்போர்த் தொண்டையர் 
   
 இனமழை தவழு மேற்றரு நெடுங்கோட்  
   
 டோங்குவெள் ளருவி வேங்கடத் தும்பர்"      (அகநா. 85:9, 213:1-3.)  

    விலங்கிய - தடுத்த (குறுந். 59:5.) புன்தாள் - சிவந்த தாளெனலும்பொருந்தும்; "ஓமைச் செவ்வரை" (நற். 279:7.)

    மேற்கோளாட்சி 8. குறிப்பு வினைமுற்று, பெயரெச்சக் குறிப்பாயிற்று (நன். 350, மயிலை, 351, சங்கர; இ.வி. 250 .)

    1. குருகு விசும்பிற் பறத்தல்: "வேழ வெண்பூ, விசும்பாடுகுருகிற் றோன்று மூரன்" (ஐங். 17:1-2.)

    1-2. வண்டு ஊதப் புதல் மலர்தல்: குறுந். 265:1-5, ஒப்பு.

    4. வாழி தோழி: குறுந். 226:4, 240:5, 278:4, 316:3, 331:5, 339:5, 350:1, 387:4.

    6. வழையம லடுக்கம்: "வழையமை சாரல்" (மலைபடு. 181.)

    8. புன்றாளோமை: குறுந். 79:2, ஒப்பு.

(260)