கருவூர்க் கதப்பிள்ளை. (பி-ம்.) 3. ‘சான்றோர் கண்ட’.
(ப-ரை.) தோழி-, காந்தள் அம் கொழு முகை - காந்தளினது அழகிய கொழுவிய அரும்பை, காவல் செல்லாது -தானாக மலரும் வரையில் காத்து நில்லாமல், வண்டு -வண்டுகள், வாய் திறக்கும் பொழுதில் - மூடிய இதழ்களைத் திறக்கும் சமயத்தில், பண்டும் தாம் அறி செம்மை சான்றோர்கண்ட - முன்பும் தாம் அறிந்த நடுநிலைமையை உடைய சான்றோரைக் கண்ட, கடன் அறிமாக்கள் போல - எதிர் கொள்ளுதல் முதலிய கடமைகளை அறிந்த மனிதரைப் போல, இடன் விட்டு - இடம் கொடுத்து, இதழ் தளை அவிழ்ந்த - இதழ்கள் பிணிப்பவிழ்ந்த, ஏகல் வெற்பன் - உயர்ச்சியை உடைய மலைகளை உடைய தலைவன், நின் நிலை - நினது நிலையை, யான் தனக்கு உரைத்தனென் ஆக - நான் தனக்குச் சொன்னேனாக, இஃது ஆகாவாறு - இக் களவொழுக்கம் மேலும் நீட்டித்து நிகழாதபடி, நாணினன் - நாணத்தை அடைந்தான்; நன்னர் நெஞ்சத்தன் - அவன் நின்னை வரைந்து கொள்ள வேண்டும் என்னும் நல்ல நெஞ்சத்தை உடையவன்.
(முடிபு) தோழி, நின்னிலை யான் உரைத்தனெனாக, வெற்பன் இஃது ஆகாவாறு நாணினன்; நன்னர் நெஞ்சத்தன்.
(கருத்து) நின்னை வரைந்து கொள்ளுதல் காரணமாகவே தலைவன்பிரிந்தானாதலின் நீ வருந்தற்க.
(வி-ரை.) வாய் திறத்தல் - பாடுதலுமாம். தானே மலரும் பருவத்திற்கு முன் வண்டு மலரைத் திறக்கும் என்றது, களவு வெளிப்பட்டு அலராதலுக்கு முன் வரைந்து கொள்ளும் எண்ணம் உடையான் தலைவன் என்ற குறிப்பினது.
‘யான், நீ ஆற்றூறஞ்சுதலையும் காவன் மிகுதியால் துன்பப்படுதலையும் கூறி வரைவு கடாவினேனாக, இனி இத்தகைய களவொழுக்கம் நிகழாவாறு எண்ணி நாணினான். அதனால் வரை பொருட்குப் பிரிந்தான்' என்றாள். நாணத்தால் நிகழும் காரியம் களவொழுக்கமாகாவாறு செய்வது; இங்கே காரணத்தைக் காரியமாக உபசரித்தாள்.
‘யாம் இதுகாறும் இதனை அறிந்து ஆவன புரிந்திலேமே!' எனத் தலைவன் நாணினன். இதனால் அவன் "வடுப்பரியு நாணுடையான்" (குறள். 502) என்பது போதரும்.
ஒப்புமைப் பகுதி 5. ஏகல் வெற்பு: நற். 116:10; அகநா. 52:5, 177:8; திணை.ஐம்.10; பழ. 68,127.
1-5. வண்டு வாய் திறக்கப் போது மலர்தல்: (குறுந். 260:1-2, 370:1-2); "வண்டுவாய் திறப்ப விண்ட பிடவம்" (நற். 238:3.)
6.தலைவன் நன்னர் நெஞ்சத்தன்: குறுந். 259:8.
(265)