உருத்திரன். (பி-ம்.) 1. ‘புன்காயுகாய்’, ‘புன்காலுகா’ ‘அத்துச்சினை’; 3. ‘பற்றிக் கொடியவர்’;8. ‘மூழ்கினம்’, ‘முயங்கினம்’, ‘முழக்கினம்’.
(ப-ரை.) நெஞ்சே, பொன்னொடு மணிமிடை அல்குல் மடந்தை - பொன்னாலும் மணியாலும் இயற்றப்பட்ட அணிகளை அணிந்த அல்குலை உடைய தலைவியினது, அணி முலை ஆகம் - அழகிய நகிலை உடைய மார்பை, உள்கினம் செலின் - நினைந்தேமாகிச் சென்றால், புறவு புறத்து அன்ன புல் கால் உகாய் - புறாவினது முதுகைப் போன்ற புல்லிய அடியை உடைய உகாய் மரத்தினது, காசினை அன்ன - மணியைப் போன்ற, நளி கனி உதிர - செறிந்த பழங்கள் உதிரும்படி, விடு கணை வில்லொடு பற்றி - விடுகின்ற அம்பை வில்லோடு பிடித்து, கோடு இவர்பு - உயர்ந்த இடத்தின் மேல் ஏறி, வருநர் பார்க்கும் - வழியிலே வருபவரைப் பார்க்கும், வன்கண் ஆடவர் - தறு கண்மையை உடைய ஆறலை கள்வர், நீர் நசை வேட்கையின் - நீரை விரும்புகின்ற வேட்கையினால், நார் மென்று தணியும் - மரப் பட்டையை மென்று அவ் வேட்கை நீங்கும், இன்னாகானமும் இனிய - இன்னாமையை உடைய காடுகளும் இனியவாகும்.
(முடிபு) மடந்தை ஆகம் உள்கினம் செலின், இன்னாக் கானமும்இனிய.
(கருத்து) தலைவியை மறவாது நினைத்திருப்பின் பிரித்து வருதல்கூடும்.
(வி-ரை.) புறா பாலை நிலத்ததாதலின் இடத்திற்கு ஏற்ப அதனை உவமை கூறினான். உகாஅய் - ஒரு மரம்; இது யகர வீறுடையது என்பது நேமிநாதம், சூ. 15, உரையால் உணரப்படும்; உகாஅ எனவும் வரும். இதன் கனி மணியைப் போன்ற தோற்றமுடையது என்பது,
| "வெயிலவிர் நுடங்கும் வெவ்வெங் களரிக் |
| குயிற்கண் ணன்ன குரூஉக்காய் முற்றி |
| மணிக்கா சன்ன மானிற விருங்கனி |
| உகாஅய் மென்சினை யுதிர்வன கழியும்" (அகநா. 293;5-8.) |
என்பதனாலும் அறியப்படும். காசினை: ஐகாரம் அசை நிலை.
கனி உதிரும்படி அம்பை விடுவர். நார் - பட்டை (குறுந். 112:4, 156:2.) தலைவியை நினைந்து செல்லின் கானம் இனியவாகும் என்றுதலைவன் கருதுவதை,
| "நெடுங்கழை முளிய வேனி னீடிக் |
| கடுங்கதிர் ஞாயிறு கல்பகத் தெறுதலின் |
| வெய்ய வாயின முன்னே யினியே |
| ஒண்ணுத லரிவையை யுள்ளுதொறும் |
| தண்ணிய வாயின சுரத்திடை யாறே", |
| "வேனி லரையத் திலையொலி வெரீஇப் |
| போகில்புகா வுண்ணாது பிறிதுபுலம் படரும் |
| வெம்பலை யருஞ்சுர நலியா |
| தெம்வெங் காதலி பண்புதுணைப் பெற்றே", |
| "பொறிவரித் தடக்கை வேத லஞ்சிச் |
| சிறுகண் யானை நிலந்தொடல் செல்லா |
| வெயின்முளி சோலைய வேயுயர் சுரனே |
| அன்ன வாரிடை யானும் |
| தண்மை செய்தவித் தகையோள் பண்பே" (ஐங். 322, 325, 327.) |
என்னும் செய்யுட்களிலும் காணலாம்.
மேற்கோளாட்சி 1. செய்யுளில் குறியதன்கீழ் ஆக்குறுகி உகரமேற்றது (தொல். உயிர்மயங்கு. 32, ந.; இ.வி. 90.)
ஒப்புமைப் பகுதி 1. புன்கால் உகாய்: "புல்லரை யுகாஅய்" (குறுந். 363:4.)
(பி-ம்.) புன்காய் உகாய்: நற். 66:1-2. உகாய்: பெருங். 1.52:37.
1-3. கனியை அம்பால் உதிர்த்தல்: சீவக. 1640-41; வி.பா. பழம்பொருந்து. 3.
3-5. "ஊரில்ல வுயவரிய, நீரில்ல நீளிடைய, பார்வ லிருக்கைக்கவிகண்ணோக்கிற், செந்தொடை பிழையா வன்க ணாடவர்" (புறநா. 3:17-20.) 6. இன்னாக் கானம்: குறுந். 124:2-3.
(274)