(இயற்கைப் புணர்ச்சிக்கண் தலைவன் தலைவியை நோக்கி, “நான்நின்னைப் பிரியேன்; பிரியின் ஆற்றேன்” என்றானாக அது கேட்டதலைவி, “பிரிவென்பது ஒன்றும் உண்டாங்கொல்?’ என அஞ்சினாளை,“நீ அஞ்சற்க; நான் இவ்வுலகத்தைப் பெறுவேனாயினும் நின்னைப்பிரியேன்” என அவன் வற்புறுத்தியது.)
 300.   
குவளை நாறுங் குவையிருங் கூந்தல் 
    
ஆம்ப னாறுந் தேம்பொதி துவர்வாய்க் 
    
குண்டுநீர்த் தாமரைக் கொங்கி னன்ன 
    
நுண்பஃ றித்தி மாஅ யோயே 
5
நீயே, அஞ்ச லென்றவென் சொல்லஞ் சலையே 
    
யானே, குறுங்கா லன்னங் குவவுமணற் சேக்கும் 
    
கடல்சூழ் மண்டிலம் பெறினும் 
    
விடல்சூ ழலனா னின்னுடை நட்பே. 

என்பது இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன், பிரிவச்சமும்வன்புறையும் (பி-ம். வன்பொறையும்) கூறியது.

சிறைக்குடி யாந்தையார.்

     (பி-ம்.) 4. ‘நுண்பகுறுத்தி’; 8. ‘சூழலென்’, ‘சூழிலன்’, ‘சூழலன்யானின்னுடை’.

     (ப-ரை.) குவளை நாறும் - குவளை மலரின் மணத்தைவீசுகின்ற, குவை இரு கூந்தல் - தொகுதியாகிய கரியகூந்தலையும், ஆம்பல் நாறும் - ஆம்பல் மலரின் மணத்தைவீசும், தேம் பொதி துவர் வாய் - தேன் பொதிந்த சிவந்தவாயையும், குண்டு நீர் தாமரை கொங்கின் அன்ன -ஆழமாகிய நீரில் வளர்ந்த தாமரைப் பூந்தாதைப் போன்ற,நுண்பல் தித்தி - நுண்ணிய பல தேமற் புள்ளியையுமுடைய,மாஅயோயே - மாமை நிறமுடையாய், நீ--, அஞ்சல்என்ற என் சொல் - யான் பிரிவேனென்று கருதி அஞ்சாதேகொளென்ற எனது சொல்லைக் கேட்டு, அஞ்சலை-அஞ்சாதே கொள்; யான்--, நின்னுடை நட்பு - நினதுநட்பினை, குறு கால் அன்னம் - குறிய காலையுடையஅன்னப் பறவைகள், குவவு மணல் சேக்கும் - குவிதலையுடைய மணலின் கண்ணே தங்கியிருக்கும், கடல் சூழ்மண்டிலம் பெறினும் - கடல் வளைந்த நில வட்டத்தைப்பெறினும், விடல் சூழலன் - விடுதலை நினையேன்.

     (முடிபு) மாஅயோயே, நீ அஞ்சலை; யான் நின்னுடை நட்பு விடல்சூழலன்.

     (கருத்து) நின்னைப் பிரியேன்.

     (வி-ரை.) கூந்தலும், வாயும் இன்பமளித்தன வாதலின் அவற்றைமுற்கூறினான். தேமென்றது வாயூறலை நினைந்து. தலைமகள் உறுப்புநலன் கூறவந்த தலைவன் நீர்ப்பூக்கள் மூன்றை உவமையாகக் கூறினான்.மாஅயோய் - மாமையை உடையோய்.

     மண்டிலமென்பது வட்டம்; கடல்சூழ் மண்டிலமென்றமையின்நிலவட்டமாயிற்று. அன்னம் மணலிற் சேக்கு மென்றது கடலுக்கு அடை.ஏகாரங்கள், ஆல்: அசை நிலைகள்.

     மேற்கோளாட்சி 2. மூக்காலறியப்பட்ட பொதுத்தன்மை வந்தது (தொல். உவம. 3, இளம்.) “ஆம்பலென்றது முதலாகு பெயர் (நன். 289,மயிலை. 290, சங்கர.; இ.வி. 192.) மு. தலைவன் நயப்பும் வன்புறையுங் கூறியது (தொல். களவு. 10, ந.); தலைவன் பிரிவுணர்த்தல் (களவியற். 23.)

     ஒப்புமைப் பகுதி 1. குவளை நாறும் கூந்தல்: குறுந். 270:6-8, ஒப்பு.

     குவையிருங் கூந்தல்: குறுந். 52:3.

     2. ஆம்பல் நாறும் வாய்: “ஆம்ப னாறுந் தேம்பொதி நறுவிரைத்,தாமரைச் செவ்வாய்” (சிலப். 4:73-4); “ஆம்பனா றமுதச் செவ்வாய்”,“ஆம்ப னாறு மரக்கார் பவளவா யாரமுதன்னார்” (சீவக. 561, 1656);நாலடி. 396.

     3-4. தேமலுக்குப் பூந்தாது: “அம்பூந் தாதுக் கன்ன, நுண்பஃறித்திமாஅ யோளே” (நற். 157:9-10.)

     7-8. குறுந். 267:1-6, ஒப்பு.

(300)