("தலைவன் வரைவிடை வைத்துப் பிரியுங்காலத்தில் ஆற்றும்ஆற்றல் உடையையோ?" என்று வினவிய தோழிக்கு, "அவனதுவிருப்பப்படியே ஒழுகும் தன்மையினேனாதலின் ஆற்றுவேன்" என்றுதலைவி கூறியது.) 315. | எழுதரு மதியங் கடற்கண் டாஅங் | | கொழுகுவெள் ளருவி யோங்குமலை நாடன் | | ஞாயி றனையன் றோழி | | நெருஞ்சி யனையவென் பெரும்பணைத் தோளே. |
என்பது வரைவிடை யாற்றகிற்றியோ என்ற (பி-ம். வேறுபடுகின்றாயென்ற) தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
மதுரை வேளாதத்தன் (பி-ம். தும்பிசேர்கீரன்.) (பி-ம்.) 3. ‘றனையனென் றோழி’.
(ப-ரை.) தோழி--, எழுதரு மதியம் - உதயமாகின்ற சந்திரன், கடல் கண்டாஅங்கு - கடலினிடத்தே காணப்பட்டாற் போல, ஒழுகு வெள் அருவி - ஓடிவருகின்ற வெள்ளிய அருவியையுடைய, ஓங்கு மலைநாடன் - உயர்ந்தமலைநாட்டையுடைய தலைவன், ஞாயிறு அனையன் - சூரியனைப் போன்றவன்; என்பெரு பணை தோள் - என் பெரிய மூங்கிலைப் போன்ற தோள்கள், நெருஞ்சி அனைய - நெருஞ்சி மலர்களைப் போன்றன.
(முடிபு) தோழி, மலைநாடன் ஞாயிறனையன்; என் தோள் நெருஞ்சியனைய.
(கருத்து) தலைவன் கருதுவதையே யானும் கருதி ஆற்றியிருப்பேன்.
(வி-ரை.) மதியமென்றது இங்கே பிறையை. அருவிக்குப் பிறையும்மலைக்குக் கடலும் உவமைகள். மதியத்தின் நிழல் கார்க்கடலில் நீண்டுதோன்றுதல் அருவியைப் போலும். நெருஞ்சிமலர் ஞாயிற்றையே நோக்கிநிற்கும் இயல்பினது; ஞாயிறு கீழ்த்திசையிருப்பின் கிழக்கு நோக்கியும்மேற்றிசைச் செல்லின் மேற்கு நோக்கியும் உச்சி வானத்திலிருப்பின் உச்சியை நோக்கியும் நிற்பது. ஞாயிற்றை நோக்கிய நெருஞ்சிபோலத் தலைவனை என்தோள் நோக்கி நிற்குமென்றாள்.
தோள்மேல் வைத்துக்கூறினும் ‘அவனது கருத்தின்படியே யான்ஒழுகுவேன்' என்ற தனது இயல்பையே கருதினாள்.
மேற்கோளாட்சி மு. தலைமகள் பிரிவுடன்பட்டது (தமிழ்நெறி. 24.)
ஒப்புமைப் பகுதி 1. கடற் கண்டாங்கு: முருகு. 2.
2-3. தலைவனுக்கு ஞாயிறு: "ஞாயி றனையன் யானே" (தமிழ்நெறி.மேற். 55.)
4. பணைத்தோள்: குறுந். 268:6, ஒப்பு.
3-4. நெருஞ்சி ஞாயிற்றை நோக்கி நிற்றல்: "சுடரொடு திரிதருநெருஞ்சி போல" (அகநா.336:18); "பாழூர் நெருஞ்சிப் பசலை வான்பூ,ஏர்தரு சுடரி னெதிர்கொண் டாஅங்கு" (புறநா. 155:4-5); "செங்கதிர்விரும்பும் பைங்கொடி நெருஞ்சிப், பொன்புனை மலர்" (பெருங். 2.4:14-5); "வெஞ்சுடர் நோக்கு நெருஞ்சியில்" (பாண்டிக்.); "நீள்சுடர் நெறியைநோக்கு நிரையிதழ் நெருஞ்சிப் பூப்போல்" (சீவக. 461); "ஏழுளைப்புரவியொ டெழுகதிர் நோக்கிய, சிற்றிலை நெருஞ்சிப் பொற்பூ வென்ன"(கல். 65:14-5); "நிரம்பு கதிர்நேர் நெருஞ்சியெனத் தன்பால், திரும்புவிழியாயமொடு சென்றாள்" (வெங்கையுலா. 352.)
(315)
|