(தலைவன் வரையாமல் வந்தொழுகிய காலத்தில் ஒருநாள் அவன்சிறைப்புறத்தில் நிற்பத் தலைவிக்கு, “தலைவனுக்கு நின்துயர் நிலையைக்கூறினால் என்?” என்று தோழி கூறியது.)
 332.   
வந்த வாடைச் சில்பெயற் கடைநாள் 
    
நோய்நீந் தரும்படர் தீர நீநயந்து 
    
கூறி னெவனோ தோழி நாறுயிர் 
    
மடப்பிடி தழீஇத் தடக்கை யானை 
5
குன்றச் சிறுகுடி யிழிதரு 
    
மன்ற நண்ணிய மலைகிழ வோற்கே. 

என்பது வரையாது வந்தொழுகாநின்ற காலத்துக் கிழவன் கேட்பக்கிழத்திக்குத் தோழி கூறியது.

மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன்.

    (பி-ம்) 3. ‘நாறுமயிர்’ 5. ‘குன்றகச்’ 6. ‘மன்றனண்ணிய’.

    (ப-ரை.) தோழி--, நாறு உயிர் மடம் பிடிதழீஇ -மணம் வீசுகின்ற மூச்சையுடைய மடப்பத்தையுடைய பெண்யானையைத் தழுவி, தட கை யானை - வளைந்த கையையுடைய யானை, குன்றம் சிறுகுடி இழிதரு மன்றம் - குன்றினிடத்துள்ள சிற்றூரின்கண் இறங்கிச் செல்லும் மன்றங்கள்,நண்ணிய மலை கிழவோற்கு - பொருந்திய மலையையுடைய தலைவனுக்கு, வந்த வாடை சில் பெயல் கடைநாள் - வாடை வந்த சிலவாகிய பெயலையுடைய நாளின்கடையாமத்தில், நோய் நீந்து அருபடர் தீர - வருத்தத்திலேதுளையும் பொறுத்தற்கரிய நின் துன்பம் தீரும் வண்ணம்,நீ நயந்து - நீ விரும்பி, கூறின் எவன் - கூறத்தகுவனவற்றைக்கூறினால் என்ன துன்பம் உளதாகும்?

     (முடிபு) தோழி, மலைகிழவோற்குப் படர்தீர நீ கூறின் எவனோ?

     (கருத்து) நினது துன்ப மிகுதியைத் தலைவனுக்கு நீயே கூறவேண்டும்.

     (வி-ரை.) நாறு உயிர் - தோன்றுகின்ற உயிர்ப்பெனலும் ஆம். பிடியைத் தழுவி யானை இழிதருவதைக் கூறியது, தலைவன் தன்னை வெளிப்படையாக வரைந்து கொள்ள வேண்டுமென்னும் குறிப்பை உணர்த்தியது.

    ஒப்புமைப் பகுதி 1. சில்பெயற் கடைநாள்: குறுந். 261:2.

    1-2. வாடை துயர் தருதல்: குறுந். 103:4, ஒப்பு. 3. நாறுயிர்: அகநா. 7:10.

    3-4. நாறுயிர் மடப்பிடி தழீஇ: அகநா. 189:4.

    5. குன்றச் சிறுகுடி: “குன்றகச் சிறுகுடி” (முருகு. 196.)

    6. மன்றம்: குறுந். 346:3. மு. குறுந். 98:1-3, ஒப்பு.

(332)