அம்மூவன். (பி-ம்.) 1. ‘வளையோய் வந்திசின்’, ‘விரவுங் கொடுந்தாள்’ 3. ‘ஈர்மண லீர்நெறி’ 4-5. ‘துறைவற்குரிய’ 6-7. ‘சேரியினகை யாய்த்தாயத்தாரே’.
(ப-ரை.) வளையோய் - வளையை அணிந்தோய்,நமர் - நம் சுற்றத்தார், விரைவு உறு கொடு தாள் அளைவாழ் அலவன் - விரைதலையுடைய வளைந்த காலையுடைய வளையின்கண் வாழும் நண்டு, கூர்உகிர் வரித்த - தன் கூரிய நகத்தினால் கீறிய, ஈர் மணல் மலிர்நெறி சிதைய - ஈரமுள்ள மணலையுடைய நீருள்ள வழி சிதையும்படி,இழுமென - இழுமென்னும் ஓசையுண்டாக, உரும் இசைபுணரி உடைதரும் துறைவர்க்கு - இடியினது முழக்கத்தையுடைய அலைகள் உடையும் துறையையுடைய தலைவருக்கு, உரிமை செப்பினர் - நீ உரியாயென்றமையை உடம் பட்டுக் கூறினர்; உவந்திசின் - அதனையறிந்து நான் மகிழ்ந்தேன்; விரி அலர் புன்னை - விரிந்த மலர்களையுடைய புன்னை மரங்கள், ஓங்கிய - உயர்ந்து வளர்ந்த, புலால்சேரி - புலால் நாற்றத்தை யுடைய சேரியிடத்துள்ள, இன் நகைஆயத்தாரோடு - இனிய நகையையுடைய மகளிர் கூட்டத் தினரோடு, இ அழுங்கல் ஊர் - இந்த ஆரவாரத்தையுடையஊர், இன்னும் அற்றோ - இனியும் அலர்கூறும் அத்தன்மையையுடையதோ?
(முடிபு) வளையோய், நமர் துறைவர்க்கு உரிமை செப்பினர்;உவந்திசின்; இவ்வூர் இன்னும் அற்றோ?
(கருத்து) தலைவரது வரைவுக்கு நம் தமர் உடம்பட்டனர்.
(வி-ரை.) தலைவியின் ஐயத்தைப் போக்க எண்ணியவள் அவள்உவப்பையடையும் பொருட்டு முதலில், “யான் உவந்தேன்” என்று கூறினாள்; அதனால் ‘இவள் கூறப்புகுவது நற்செய்தி” என்று தலைவி துணிவாள்.
அலவன் வரித்த சிறுநெறி சிதைய அலை வீசுமென்பது, ஊரினர்கூறும் அலரெல்லாம் ஒழியத் தலைவன் மணந்து கொள்வானென்றகுறிப்பினது.
வரித்தல் - கோலஞ்செய்தல்; இங்கே கோடு கோடாகக் கீறுதலென்று கொள்க. உடைதரும் - கரையின்மேல் மோதி உடையும். துறைவர்க்கு உரிமையென்றது அவருக்கே தலைவி உரியளென்றபடி; ஓர் ஆடவனுக்கு உரிய பொருள்கள் யாவற்றினும் சிறந்தமை பற்றி மனைவிக்கு ‘உரிமை’ என்னும் பெயர் அமைந்தமை இங்கே கருதற்குரியது (பெருங். 1.38:263-7).
புலாலஞ்சேரி: அம் சாரியை. புன்னை மலரின் மணமும் புலாலின்நாற்றமும் ஒருங்கு வீசும் சேரியென்றது தலைவன் வரைவுக்கு உடம்படும்தமரும், வறிதே அலர்கூறும் ஆயமும் உடையதென்ற நினைவிற்று.
ஒப்புமைப் பகுதி 1. கொடுந்தாளலவன்: ஐந். ஐம். 42.
2-3. அலவன் வரித்த நெறி: “தண்சேறு கள்வன் வரிக்கும்” (ஐங். 28:2.)
4. உருமிசைப் புணரி உடைதருதல்: அகநா. 310:16.
3-4. இழுமென ஒலித்தல்: குறுந். 345:6, ஒப்பு.
6. புன்னையோங்கிய சேரி: குறுந். 320:7, ஒப்பு.
புலாலஞ் சேரி: குறுந். 320:1-4; நற். 101:1-5, 338:8; அகநா. 270:2.
7. இன்னகையாயம்: பொருந. 85; சிறுபாண். 220; ஐங் . 397:5;பெருங். 1. 36:306, 48:70; பு. வெ. 75.
(351)