(பகற்குறி வந்தொழுகும் தலைவன், தலைவி இல்லினின்றும் வெளிப்போதலால் ஊரினர் அறிவரோவென அஞ்சி இரவுக்குறி விரும்பிச்சிறைப்புறத்தே நிற்பத் தலைவியை நோக்கிக் கூறுவாளாய், “நம் அன்னையின் காவல் இரவில் மிக்கது” என்று தோழி இரவுக்குறி மறுக்கும் வாயிலாக வரைவு கடாயது).
 353.   
ஆர்கலி வெற்பன் மார்புபுணை யாகக்  
    
கோடுயர் நெடுவரைக் கவாஅற் பகலே 
    
பாடின் னருவி யாடுத லினிதே 
    
நிரையிதழ் பொருந்தாக் கண்ணோ டிரவிற் 
5
பஞ்சி வெண்டிரிச் செஞ்சுடர் நல்லிற்  
    
பின்னுவீழ் சிறுபுறந் தழீஇ 
    
அன்னை முயங்கத் துயிலின் னாதே. 

என்பது பகற்குறி வந்து ஒழுகும் தலைமகன் வெளிப் பாடஞ்சி இரவுக்குறிநயந்தானது குறிப்பறிந்த தோழி, இரவின் கண் அன்னையது காவலறிந்துபின்னும் பகற்குறியே நன்று அவ்விரவுக் குறியினென்று பகற்குறியும்இரவுக்குறியும் மறுத்துத் தலைமகன் சிறைப்புறத்தானாக வரைவு கடாயது.

உறையூர் முதுகூற்றன்.

     (பி-ம்.) 4. ‘நிறையிதழ்‘

     (ப-ரை.) பகல் - பகற் காலத்தில், கோடு உயர் நெடு வரை கவான் - கொடுமுடிகள் உயர்ந்த நீண்ட மலையினதுதாழ்வரையினிடத்தே, பாடு இன் அருவி - ஓசை இனிதாகியஅருவியில், ஆர் கலி வெற்பன் மார்பு புணை ஆக - நிறைந்தமுழக்கத்தையுடைய மலையையுடைய தலைவனது மார்புதெப்பமாக, ஆடுதல் இனிது - நீர்விளையாடல் இனிய,இரவில் - இராக்காலத்தில், பஞ்சி வெள் திரி செ சுடர் நல்இல் - பஞ்சாலாகிய வெள்ளிய திரியையுடைய செவ்வியவிளக்கையுடைய நல்ல வீட்டின் கண்ணே, அன்னை - நம் தாய், பின்னு வீழ் சிறு புறம் தழீஇ - பின்னல் தாழ்கின்ற பிடரியைத் தழுவி, முயங்க - அணைப்ப, நிரை

இதழ் பொருந்தா கண்ணோடு - வரிசையாகிய இமைகள் ஒன்றோடு ஒன்று பொருந்தாத விழிகளோடு, துயில் - நாம் துயிலுதல், இன்னாது - இன்னாமையையுடையது.

     (முடிபு) பகலில் அருவியாடுதல் இனிது; இரவில் அன்னை முயங்கத்துயில் இன்னாது.

     (கருத்து) காப்பு மிகுதியால் இரவுக்குறி பெறற்கு அரிது.

     (வி-ரை.) ஆர்கலி - நிறைந்த ஆரவாரங்கள்; மலையிலுள்ளஆரவாரங்களைப் பற்றிய செய்திகளை ‘மலைபடுகடாம்’ என்னும் நூலிற்காணலாம். பகலே, இனிதே: ஏ அசை நிலை.

  
“பெருவரை மிசையது நெடுவெள் ளருவி  
  
 முதுவாய்க் கோடியர் முழவிற் தும்பி”            (குறுந். 78:1-2)  

என்று அருவியின் ஒலி சிறப்பிக்கப்படுதலின் அஃது இனியதாயிற்று.

     அன்னை முயங்கவென்றது அவளது காவன்மிகுதியை உணர்த்திய படி; இதழ் பொருந்தாது துயிலுதலென்றது துயிலின்மையைக் குறித்தவாறு.

     இதனால் இரவுக்குறி மறுத்தாளாயிற்று.

    (மேற்கோளாட்சி) மு. இரவுக்குறி நயந்த தலைவன் சிறைப்புறமாக, பகற்குறிநேர்வாள்போல் தோழி இரவுக் காப்புமிகுதி கூறியது; ‘பாடின் னருவியாடலென்றாள் அதன்கண் உதவினானென்பது பற்றி; அல்லது களவிற்குஉடனாடுதல் இன்று’ (தொல். களவு. 23, ந.)

    ஒப்புமைப் பகுதி 1. ஆர்கலி வெற்பன் மார்பு: நற். 104:7.

    2. வரைக் கவான்: குறுந். 262:6, ஒப்பு.

    3. பாடின்னருவி: “முழவின்னிசை மூரி முழங்கருவி” (சீவக. 1193).(கு-பு.) முழவினைப் போன்ற இனிய ஒலியையுடையவெனப் பொருள் கொள்க.

    1-3. தலைவன் மார்பு புணையாக நீராடுதல்: “வவ்வுவல்லார்புணை யாகிய மார்பினை” (பரி. 6:80); “கூடியார் புனலாடப் புணையாய மார்பினில்” (கலி. 72:15); “ஒங்குவரை யிழிதரும் வீங்குபெய னீத்தம் ....பெருமலை நாடன் மார்புபுணை யாக, ஆடுகம் வம்மோ” (அகநா. 312:4-8).

     தலைவி தலைவனோடு நீராடுதல்: “பெருங்க னாடனொடு .... பெருவரை யடுக்கத் தருவி யாடி”, “அங்க ணறைய வகல்வாய்ப் பைஞ்சுனை ... சார னாடனொ டாடிய நாளே”, “நாடனொடு, சூருடைச் சிலம்பி னருவியாடி” (நற். 259:3-5, 357:7-10, 373:4-5).

    5. சுடர்: குறுந். 398:5.

    6. பின்னுவீழ் புறம்: குறுந். 246:6, ஒப்பு.

    7. அன்னையின் முயக்கத்தைத் தலைவி வெறுத்தல்: குறுந். 84:2.

    6-7. சிறுபுறம் முயங்குதல்: அகநா. 19:19, 49:5-7.

(353)