(தலைவனாற் பிரிவுணர்த்தப்பட்ட தோழி, “இனியளாகிய தலைவியைப் பிரிந்து செல்லுதல் இன்னாமையைத் தருவது” என்று அவனுக்குக் கூறியது.)
 363.   
கண்ணி மருப்பி னண்ண னல்லேறு  
    
செங்கோற் பதவின் வார்குரல் கறிக்கும்  
    
மடக்கண் வரையா நோக்கி வெய்துற்றுப்  
    
புல்லரை யுகாஅய் வரிநிழல் வதியும்  
5
இன்னா வருஞ்சுர மிறத்தல்  
    
இனிதோ பெரும வின்றுணைப் பிரிந்தே. 

என்பது பிரிவுணர்த்தப்பட்ட தோழி கிழவற்குச் சொல்லியது.

செல்லூர்க் கொற்றன் (பி-ம். சொல்லூர்க் கொற்றன்.)

     (பி-ம்.) 2. ‘புதவின்’; 3. ‘யெய்துற்றுப்’; 4. ‘வறுநிழல்’; 6. ‘வின்றுனைப்’.

     (ப-ரை.) பெரும--, இன் துணை பிரிந்து - இனிய துணைவியைப் பிரிந்து, கண்ணி மருப்பின் அண்ணல் நல் ஏறு - கண்ணியை அணிந்த கொம்பையுடைய தலைமையை யுடைய நல்ல மலை எருது, செ கோல் பதவின் வார் குரல் கறிக்கும் - செவ்விய தண்டுகளையுடைய அறுகினது நீண்ட கொத்தைக் கடித்துத் தின்னும், மடம் கண் வரை ஆ நோக்கி - மடப்பம் பொருந்திய கண்ணையுடைய மலைப் பசுவைப் பார்த்து, வெய்துற்று - பெருமூச்சுவிட்டு, புல் அரை உகாஅய் வரி நிழல் வதியும் - புல்லிய அடியையுடைய உகாஅய் மரத்தினது புள்ளிகளையுடைய நிழலின் கண்ணே தங்குகின்ற, இன்னா அரு சுரம் இறத்தல் இனிதோ-இன்னாத கடத்தற்கரிய சுரத்தைக் கடத்தல் இனிமையையுடையதோ?

     (முடிபு) பெரும, துணைப்பிரிந்து சுரம் இறத்தல் இனிதோ?

     (கருத்து) தலைவியைப் பிரிந்து செல்லுதல் இன்னாது.

     (வி-ரை.) கண்ணி - ஒருவகை மாலை. கண்ணி மருப்பு - கண்ணி யைப் போன்று வளைந்த மருப்பெனலுமாம். பதவு - அறுகு. உகாய் மரத்தின் அடி, “புன்கா லுகாஅய்” (குறுந். 274:1) என்று முன்னும் கூறப் பட்டது. தழைகளின் செறிவின்மையின் வரி நிழலை உடையதாயிற்று.

     ஒப்புமைப் பகுதி 1. மடக்கண்: குறுந் 64:3; அகநா. 238:6. 4.வரிநிழல்: சிறுபாண். 12.5. 5-6. ஒருவாறு ஒப்பு: குறுந். 124: 3-4.

(363)