உறையூர் முதுகூற்றன். (ப-ரை.) தோழி--, மை படு சிலம்பின் - மேகங்கள் பொருந்துகின்ற மலைப்பக்கத்தில், ஐவனம் வித்தி - மலைநெல்லை விதைத்து, அருவியின் விளைக்கும் நாடனொடு - அருவியினாலே விளைக்கின்ற நாட்டையுடைய தலைவனால், கைவளை நெகிழ்தலும் - என்கைகளில் உள்ள வளைகள் நெகிழ்தலையும், மெய் பசப்பு ஊர்தலும் - மெய்யின்கண்ணே பசலை பரத்தலையும், மருவேன் - பெறேன்;ஆயினும், அது காமம் - அக்காமம், பெரிது--,
(முடிபு) தோழி, நாடனொடு வளை நெகிழ்தலும் பசப்பூர்தலும் மருவேன்; காமம் பெரிது.
(கருத்து) காமம் என்வரைத்தன்றி மிக்கது.
(வி-ரை.) தலைவி தலைவனது பிரிவினால் மெலிந்தாள்; அதனால் வளை நெகிழ்ந்தது; மெய்யிற் பசலை உண்டாயிற்று. அதுகண்ட தோழி,"நீ இங்ஙனம் ஆற்றாயாதல் தக்கதன்று. அவர் நின்பொருட்டன்றேபிரிந்தனர்?” என்றாள். அப்பொழுது, “இவ்வேறுபாடு தலைவனால்உண்டாகவில்லை. எனக்கும் இவ்வேறுபாடு கொள்ளல் கருத்தன்று.ஆயினும் காமம் பெரிதாகலின் என்னளவில் நில்லாது இவை உண்டாகக்காரணமாயிற்று” என்று தலைவி கூறினாள்.
மைபடு சிலம்பு - மேகங்கள் தாழ்ந்து மழை பெய்யும் மலை.மை படுவதை நோக்கி ஐவனம் வித்தினர்; பின்னர் மழை பொழியஅதனால் அருவி உண்டாக அதன் நீரால் ஐவனம் விளைந்தது. மேகம்பொழியுமென்னும் உறுதி பற்றி ஐவனத்தை வித்திப்பின்னர் விளைக்கும்நாடனென்றது, பின்னர் நலம் உண்டாகுமென்னும் உறுதிபற்றி இக்காமம்உண்டாயிற்றென்ற குறிப்பினது. நாடனொடு: ஒடுவுருபு ஆலுருபின்பொருளில் வந்தது. அது காமமென்றதில் அதுவென்றது அகரச்சுட்டின்பயத்ததாய் நின்றது.
காமமோ: ஓ அசைநிலை. பெரிதே: ஏ அசைநிலை; தேற்றமுமாம்.
ஒப்புமைப் பகுதி 1. வளை நெகிழ்தல்: குறுந். 11:1, ஒப்பு. மெய் பசத்தல்: ஐங். 29:5, 41:3-4, 217:4. 2. மைபடு சிலம்பு: கலித். 43:6.
2-3. ஐவனம் வித்தி அருவியினால் விளைத்தல்: குறுந். 100:1, ஒப்பு.
4. காமம் பெரிது: குறுந். 18:5, ஒப்பு.
(371)