(தலைவன் வரைவிடை வைத்துப் பிரிந்த காலத்தில் வேறுபட்டதலைவியை நோக்கி, “நீ வேறுபடாமல் ஆற்றல்வேண்டும்” என்றதோழிக்கு, “யான் என்செய்கேன்! யான் ஆற்றியிருப்பினும் காமம்பெரிதாகலின் என் வரைத்தன்றி வேறுபாடு உண்டாயது” என்று தலைவிகூறியது.)
 371.    
கவளை நெகிழ்தலு மெய்பசப் பூர்தலும்  
    
மைபடு சிலம்பி னைவனம் வித்தி 
    
அருவியின் விளைக்கு நாடனொடு 
    
மருவேன் றோழியது காமமோ பெரிதே. 

என்பது வரைவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

உறையூர் முதுகூற்றன்.

    (ப-ரை.) தோழி--, மை படு சிலம்பின் - மேகங்கள் பொருந்துகின்ற மலைப்பக்கத்தில், ஐவனம் வித்தி - மலைநெல்லை விதைத்து, அருவியின் விளைக்கும் நாடனொடு - அருவியினாலே விளைக்கின்ற நாட்டையுடைய தலைவனால், கைவளை நெகிழ்தலும் - என்கைகளில் உள்ள வளைகள் நெகிழ்தலையும், மெய் பசப்பு ஊர்தலும் - மெய்யின்கண்ணே பசலை பரத்தலையும், மருவேன் - பெறேன்;ஆயினும், அது காமம் - அக்காமம், பெரிது--,

     (முடிபு) தோழி, நாடனொடு வளை நெகிழ்தலும் பசப்பூர்தலும் மருவேன்; காமம் பெரிது.

     (கருத்து) காமம் என்வரைத்தன்றி மிக்கது.

     (வி-ரை.) தலைவி தலைவனது பிரிவினால் மெலிந்தாள்; அதனால் வளை நெகிழ்ந்தது; மெய்யிற் பசலை உண்டாயிற்று. அதுகண்ட தோழி,"நீ இங்ஙனம் ஆற்றாயாதல் தக்கதன்று. அவர் நின்பொருட்டன்றேபிரிந்தனர்?” என்றாள். அப்பொழுது, “இவ்வேறுபாடு தலைவனால்உண்டாகவில்லை. எனக்கும் இவ்வேறுபாடு கொள்ளல் கருத்தன்று.ஆயினும் காமம் பெரிதாகலின் என்னளவில் நில்லாது இவை உண்டாகக்காரணமாயிற்று” என்று தலைவி கூறினாள்.

    மைபடு சிலம்பு - மேகங்கள் தாழ்ந்து மழை பெய்யும் மலை.மை படுவதை நோக்கி ஐவனம் வித்தினர்; பின்னர் மழை பொழியஅதனால் அருவி உண்டாக அதன் நீரால் ஐவனம் விளைந்தது. மேகம்பொழியுமென்னும் உறுதி பற்றி ஐவனத்தை வித்திப்பின்னர் விளைக்கும்நாடனென்றது, பின்னர் நலம் உண்டாகுமென்னும் உறுதிபற்றி இக்காமம்உண்டாயிற்றென்ற குறிப்பினது. நாடனொடு: ஒடுவுருபு ஆலுருபின்பொருளில் வந்தது. அது காமமென்றதில் அதுவென்றது அகரச்சுட்டின்பயத்ததாய் நின்றது.

     காமமோ: ஓ அசைநிலை. பெரிதே: ஏ அசைநிலை; தேற்றமுமாம்.

     ஒப்புமைப் பகுதி 1. வளை நெகிழ்தல்: குறுந். 11:1, ஒப்பு. மெய் பசத்தல்: ஐங். 29:5, 41:3-4, 217:4. 2. மைபடு சிலம்பு: கலித். 43:6.

    2-3. ஐவனம் வித்தி அருவியினால் விளைத்தல்: குறுந். 100:1, ஒப்பு.

     4. காமம் பெரிது: குறுந். 18:5, ஒப்பு.

(371)