(தலைவனுடன் செல்லத் தலைவி உடம்பட்டமை தெரிந்துஅக்கருத்தைத் தலைவனுக்கு வெளியிட்டபின் அவன் வந்து நிற்ப, அப்பொழுது நாண் அழிதற்கு வருந்திய தலைவியை நோக்கி, “நின்உடம்பாட்டை யறிந்தே அவனை வரச் செய்தேன்; இப்பொழுது மறுப்பின் என்செய்வேன்!” என்று தோழி கூறியது.)
 383.    
நீயுடம் படுதலின் யான்றர வந்து 
    
குறிநின் றனனே குன்ற நாடன் 
    
இன்றை யளவை சென்றைக் கென்றி 
    
கையுங் காலு மோய்வன வழுங்கத் 
5
தீயுறு தளிரி னடுங்கி 
    
யாவது மிலையான் செயற்குரி யதுவே. 

என்பது உடன்போக (பி-ம். உடன்போக்கு நேர்வித்து வந்த தோழிக்குநாணால்) வருந்துந் தலைமகளை நாணுக்கெட (பி-ம். நாணுடைக் கேட்ப)ச் சொல்லியது.

படுமரத்து மோசிகீரன் (பி-ம். படுமாத்து மோசிகீரன்.)

    (பி-ம்.) 3. ‘சென்றைக்கசென்றி’; 4. ‘வொழுங்கித்’, ‘வொழுகத்’,‘வொடுங்கித்’; 7. ‘யாதுமில்லையான்’.

    (ப-ரை.) நீ உடம்படுதலின் - நீ உடன்போக இயைந்த மையால், யான்தர - நான் கூற, குன்றம் நாடன் - தலைவன்,குறி நின்றனன் - குறியிடத்தே வந்து நின்றான; நீயோ--,இன்றை அளவை சென்றைக்க என்றி - இன்றையாகியபோதுகழிக என்று கூறினாய;, கையும் காலும் ஓய்வன அழுங்க - கையும் காலும் ஓய்வனவாகி வருந்த, தீ உறு தளிரின்நடுங்கி - நெருப்பில் விழுந்த தளிரைப் போல நடுங்கி, யான்செயற்கு உரியது யாவதும் இலை - நான் செய்யத்தக்கதுஒன்றும் இல்லை.

    (முடிபு) நாடன் நின்றனன்; சென்றைக்கென்றி; அழுங்க நடுங்கிச் செயற்குரியது இலை.

    (கருத்து) நீ தலைவனுடன் இப்பொழுதே செல்லுதல் நலம்.

    (வி-ரை.) தர - அழைப்பவெனலுமாம். குறி - குறித்த இடம். சென்றைக்க வென்பது வியங்கோட்பொருளில் வந்தது;

    “இன்பத்தின் பக்கமிருந்தைக்க” (நாலடி. 79)“ஆய மடமகளிரெல்லீருங் கேட்டைக்க”“எழுதெழின் மலருண்க ணிருந்தைக்க”(சிலப்.18:49, 19:67) எனப் பிற சொற்களும் இங்ஙனம் வருதல் காண்க.

    தலைவி நாணமிகுதியினால்,“இன்று போக, நாளைச்செல்வேம்” என்றாள்.

    மேற்கோளாட்சி மு. வருத்தமிகுதியால் தலைவனை வழிபடுதலை மறுத்துக் கூறுமிடத்துத் தலைவிக்குக் கூற்று நிகழும்; ‘இத்தோழி கூற்றே சென்றைக்க வென்றதனால் தலைவி மறுத்தமை பெற்றாம்’ (தொல். களவு. 29, ந.)

    (கு-பு.) இக்கருத்து சிறந்ததாகத் தோன்றுகிறது.

    ஒப்புமைப் பகுதி 5. தளிரைப் போல நடுங்குதல்: “கொல்புனற் றளிரினடுங்குவனள்” (பதிற். 52:21).

(383)