ஓரம்போகியார் (பி-ம். காம்போதியார்). (பி-ம்.) 1. ‘கழுத்திற்’, ‘கழுதின்’; 4. ‘மகிழ்ந்தநின்’.
(ப-ரை.) மகிழ்ந -- தலைவ, உழுந்து உடை கழுந்தின் - உழுத்தங்காயை அடித்தற்கு உரிய கழுந்துள்ள தடியைப்போல உள்ள, கரும்பு உடை பணை தோள் - கரும்பெழுதிய தொய்யிலையுடைய பருத்த தோளையும், நெடு பல் கூந்தல் - நெடிய பலவாகிய கூந்தலையும், குறு தொடி மகளிர் - குறிய வளைகளையும் உடைய பரத்தையரது, நலன் உண்டு - பெண்மைநலத்தை நுகர்ந்து, துறத்தி ஆயின் - துறந்துஈண்டு வருவாயாயின், நின் சூள் - நீ அவர் மாட்டுச் செய்தசூள், மிக நன்று - மிக நன்றாக இருந்தது!
(முடிபு) மகிழ்ந, மகளிர் நலன் உண்டு துறத்தியாயின், நின் சூள் மிக நன்று!
(கருத்து) நின்மொழியை மெய்யென்று எண்ணி மயங்கேம்.
(வி-ரை.) தலைவன், “அங்கவர் யாரையும் அறியேன்” என்று சூள் செய்தானாக, “நீ இங்ஙனமே பரத்தையர் மாட்டும் சூள் செய்து அவர்நலன் நுகர்ந்து இப்பொழுது பிரிந்தாய். அவ்வியல்பே ஈண்டும் நின்பால் உள்ளதாதலின் நின்சூள் ஏற்கத் தகுவதன்று” என்று தோழி கூறி வாயில் மறுத்தாள்.
உழுந்தை அடித்தற்குரிய தடியின் கழுந்து தேய்ந்து வழுவழுப்பாகவும் பருத்ததாகவும் இருத்தலின் அதனைத் தோட்கு உவமை கூறினாள். பரத்தையர் தோளுக்குக் கூறினமையின் பிற உயர்ந்த பொருள்களைக் கூறாது இதனைக் கூறினாள். காமனது வில்லாகிய கரும்பின் உருவத்தைக் குங்குமக் குழம்பால் மகளிர் தோளில் எழுதுதல் வழக்கம். தோளையுங்கூந்தலையும் சிறப்பித்துக் கூறியது முயங்குதற்குரிய இயல்பினரென்பது கருதி. மகளிரென்று பன்மை வாசகம் படக்கூறியது தலைவன் பலர்பால் அன்புடையானென்பதை நினைந்து. இதுவே வாயின் மறுத்தற்கு ஏதுவாயிற்று.
அம்ம: வியப்புக் குறிப்பு. சூளே: ஏ ஈற்றசை.
ஒப்புமைப் பகுதி 1. மகளிர் தோள்களில் கரும்பின் வடிவத்தை எழுதுதல்:“தோண்மேற், கரும்பெழுது தொய்யிற்கு”, “நற்றோளிழைத்தகரும்புக்கு”, “தெரிவேய்த்தோட் கரும்பெழுதித் தொய்யில்செய்தனைத்தற்கோ”, “நடாஅக் கரும்பமன்ற தோளாரை”, “அன்றுதானீர்த்த கரும்பணிவாடவென், மென்றோண் ஞெகிழ்த்தான்”, “நெடுமென்றோட், பெய்கரும் பீர்க்கவும் வல்லன்” (கலி. 63:7-8, 64:19, 76:15, 112:6, 131:29-30,143:31-2); “கரும்பும் வல்லியும் பெருந்தோளெழுதி” (சிலப். 2:29)
2. குறுந்தொடி: குறுந். 267:5, 356:8.
3. நலனுண்டு துறத்தல்: “தோணல முண்டு துறக்கப்பட்டோர்” (கலி். 23:8.)
4. தலைவனது சூள்: குறுந். 238:5, ஒப்பு.
(384)