(தலைவன் வரைவு நீட்டித்தானாக அவன் சிறைப்புறத்தே நிற்குங்கால் தோழி வண்டினை நோக்கிக் கூறுவாளாகி, “தலைவி இன்னும் தன்வீட்டிலேயே உறைகின்றாளென்று சொல்வாயாக” என்றது).
 392.    
அம்ம வாழியோ வணிச்சிறைத் தும்பி 
    
நன்மொழிக் கச்ச மில்லை யவர்நாட் 
    
டண்ண னெடுவரைச் சேறி யாயிற் 
    
கடமை மிடைந்த துடவையஞ் சிறுதினைத் 
5
துளரெறி நுண்டுகட் களைஞர் தங்கை 
    
தமரிற் றீரா ளென்மோ வரசர் 
    
நிரைசெல னுண்டோல் போலப் 
    
பிரசந் தூங்கு மலைகிழ வோர்க்கே. 

என்பது வரைவிடைக் கிழத்தியது நிலைமை தும்பிக்குச் சொல்லுவாளாய்ச் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.

தும்பிசேர் கீரனார் (பி-ம். தும்பிசோகினார்).

     (பி-ம்) (பி-ம்.) 1. ‘மணிச்சிறைத்’; 2. ‘யவர்நாட்டுத்தெண்ண’; 4. ‘கடவை’, ‘துடவைய’; 5. ‘துளிரெற’ி; 6. ‘தமராற்’; 7. ‘நிரைசேர் நுண்டேர்போல’;8. ‘மலைகிழவோற்கே’.

    (ப-ரை.) அணி சிறை தும்பி - அழகிய சிறகுகளையுடைய தும்பியே, அம்ம - ஒன்று கூறுவன் கேட்பாயாக,நல் மொழிக்கு அச்சம் இல்லை - நல்ல மொழிகளை ஒருவர்பால்கூறுந்திறத்தில் அச்சம் இல்லை, அவர் நாடு - அத்தலைவருடய நாட்டிலுள்ள, அண்ணல் நெடு வரை சேறி ஆயின் - தலமையையுடைய உயர்ந்த மலைக்குச் செல்வாயாயின்,ரசர் நிரை செலல் நுண் தோல் போல - அரசர்களது வரிசையாகச் செல்லுதலையுடைய நுண்ணிய கேடகங்களைப் போல,பிரசம் தூங்கும் மலைகிழ வோர்க்கு - தேனடைகள் தொங்குகின்ற மலையையுடைய தலைவரிடத்தில், கடமை மிடைந்த -கடமை மான்கள் நெருங்கிய, துடவை அம் சிறுதினை - தோட்டத்திலுள்ள அழகிய சிறுதினையிடத்தே, துளர் எறிநுண்துகள் களைஞர் தங்கை - களைக்கொட்டை எறிவதனால்உண்டாகிய நுண்ணிய புழுதியையுடைய களையெடுப்பாருடைய தங்கையாகிய தலைவி, தமரின் தீராள் - தன் சுற்றத்தாரிடத்தினின்றும் நீங்காளாயினாள்; என்மோ - என்றுகூறுவாயாக.

     (முடிபு) தும்பி, அச்சம் இல்லை; சேறியாயின் மலைகிழவோர்க்கு, களைஞர் தங்கை தீராளென்மோ.

     (கருத்து) வண்டே, தலைவியினுடைய நிலையை நீ போய்த் தலைவனுக்குச் சொல்லுவாயாக.

     (வி-ரை.) தலைவன் வரைந்து கொள்வதாக உறுதி கூறியும் நீட்டித்த காலத்தில் தோழி கூறியது இது. வண்டை நோக்கிக் கூறினாளாயினும், சிறைப்புறத்தானாகிய தலைவனுக்கு உணர்த்துவதே அவள் கருத்து.

     வாழியோ: அசை நிலை; தும்பியால் முடித்துக்கொள்ளும் குறை யுடைமையின் அதனை வாழ்த்தியதுமாம். மணிச்சிறையென்னும்பாடத்திற்கு, நீலமணியைப் போன்ற சிறகென்று பொருள் கொள்க.

    ‘நன்மொழிக்கு அச்சமில்லை’ என்றது, தான் கூறப்புகுவது நன்மை பயப்பதென்னும் கருத்தை உண்டாக்கியது. துளரெறிந்தமையால் மண்ணின் துகள் மேனியிற் படிந்தது. துளர் - களைக்கொட்டு (மலைபடு. 122,உரை)

    தமரிற்றீராளென்றது, தலைவனால் வரையப்பட்டுத் தலைவனோடிருந்து இல்லறம் நடத்தற்குரியவள் இனும் தமரோடு வாழும் வாழ்க்கையையேயுடைய வளாயினாளென்னும் குறிப்பினது. மோ:முன்னிலையசை.

    தமரின்தீராள் - தமர் செய்யும் கொடுமை உயிர் நீக்குமள வினதா யிருப்பவும், இன்னும் வாழ்வாளாயினாளென்று பொருள் கொள்ளுதலும்ஒன்று; இக்கருத்து தமரது காப்புமிகுதி முதலிய கொடுமைகளைத்தலைவனுக்கு அறிவுறுத்துவது.

    நுண்டேர்போலவென்ற பாடத்திற்கு நுண்ணிய கைத்தொழிலையுடைய தேரைப்போலவெனப் பொருள் கொள்க. ஏ: ஈற்றசை.

    தும்பியை விளித்துக் கூறியதாக அமைத்தமையின் அசை செய்யுளைப் பாடிய புலவர் தும்பிசேர் கீரனாரென்னும் பெயர் பெற்றார் போலும்.

    ஒப்புமைப் பகுதி 1. அணிச்சிறைத் தும்பி: “அஞ்சிறைத்தும்பி” (குறுந். 2:1, ஒப்பு.) பி-ம். மணிச்சிறைத்தும்பி: கலி. 46:2.

    3. அண்ணல் நெடுவரை: குறிஞ்சிப். 54; அகநா. 75:8.

    8. பிரசந்தூங்கு மலை: குறுந். 273:5, ஒப்பு.

    7-8. தேனடைக்குக் கேடகம்: சீவக. 1561.

     மு. வண்டுவிடு தூது: நற். 277.

(392)