(தலைவன் பகல் பொழுதில் வந்து தலைவியுடன் பழகும் காலத்தில் அவனைக் காணாது நெடுநேரம் கழிவதனால் துயருற்ற தலைவியினது மேனியிற் பசலை முதலிய வேறுபாடுகள் உண்டானமை கண்டு வருந்தி, “தலைவர் இவளை வரைந்து கொள்வோம் என்று சொல்லாரோ!” என்று தோழி கூறியது.)
 48.   
தாதிற் செய்த தண்பனிப் பாவை 
    
காலை வருந்துங் கையா றோம்பென 
    
ஓரை யாயங் கூறக் கேட்டும் 
    
இன்ன பண்பி னினைபெரி துழக்கும் 
5
நன்னுதல் பசலை நீங்க வன்ன 
    
நசையாகு பண்பி னொருசொல் 
    
இசையாது கொல்லோ காதலர் தமக்கே. 

என்பது பகற்குறிக்கட் காணும் பொழுதினும் காணாப்பொழுது பெரிதாகலின், (தொல். களவு. 16) வேறுபட்ட கிழத்தியது வேறுபாடு கண்டு தோழி சொல்லியது.

    (‘இவ்வகை பகற்குறி வந்து ஒழுகாநின்ற தலைமகனைக் காணும் பொழுதிற் காணாப்பொழுது பெரிதாகலான் ஆற்றாளாய் நெஞ்சுமிக்கது வாய் சோர்ந்து கடலிற்கானும் கானலிற் கானும் ... ... வறிதே குழவி அழுதாற் போல யாதானும் ஒரு சொற் சொல்லும்’(18) என்பது இறையனாரகப் பொருள் உரை.)

பூங்கணுத்திரையார் (பி-ம். பூங்கணுத்தரையார்.)

    (பி-ம்) 5.‘நன்னுதற் பசலை’ 6. ‘நசையாடு’.

    (ப-ரை.) தாதின் செய்த - பூந்தாது முதலிய பொடிகளாற் செய்யப்பட்ட, தண் பனி பாவை - மிக்க குளிர்ச்சியையுடைய விளையாட்டுப் பாவையானது, காலை வருந்தும் - காலைப் பொழுதில் வருந்துதலாற் பிறந்த, கையாறு ஓம்பு என - செயலறுதலை ஒழிப்பாயாகவென்று, ஓரை ஆயம் - விளையாட்டையுடைய மகளிர் திரள், கூற கேட்டும் - சொல்லக் கேட்டபின்பும், இன்ன பண்பின் - இத்தகைய தன்மையையுடைய, இனை பெரிது உழக்கும் - வருத்தத்தை மிக அடையும், நன் நுதல் - நல்ல நெற்றியையுடைய தலைவியினது, பசலை நீங்க - பசலை நீங்கும்படி, காதலர் தமக்கு - தலைவர் மாட்டு, நசை ஆகு பண்பின் - இவளுக்கு விருப்பமாகும் தன்மையையுடைய, அன்ன ஒரு சொல் - அத்தகைய ஒரு சொல்லானது, இசையாது கொல் - இயலாதோ?

    (முடிபு) ஆயம் கூறக்கேட்டும் உழக்கும் நன்னுதலின் பசலை நீங்க ஒரு சொல் காதலர் தமக்கு இசையாது கொல்?

    (கருத்து) தலைவன் இத்தலைவியை வரைந்து கொண்டால் இவள் தன் துன்பத்தினின்றும் நீங்குவாள்.

    (வி-ரை.) தாது - பலவகைப் பொடி, தலைவி பாவையினிடத்து மிக்க விருப்பினளாதலின் (பெருங். 2. 15:112),‘பாவையின் கையாற்றைப் பாதுகாப்பாயாக’ என்றால் அவள் அதனை உடனே செய்வாளென்று மகளிர் நினைந்தனர். கேட்டும்: உம்மை உயர்வு சிறப்பு. இன்ன பண்பு என்றது தலைவனைக் காணாப்பொழுது பெரிதானமையின் அவன் பிரிவினால் துன்புற்றுப் பசலையும் படரும் கொண்டிருந்த இயல்பை. இனை - வருத்தம் (கலி.11:19, ந.) பசலை : தலைவனது பிரிவினால் உண்டாவது; இந்நூல்27-ஆம் செய்யுளின் விசேடவுரையைப் பார்க்க. நன்னுதலென்று வைத்து அந்நுதலை யுடையாளது பசலை யென்றமையின் நுதலும் பசலை கொண்டதெனக் கொள்க (குறுந்.87:4.)அன்ன ஒரு சொலென்றது வரைவேனென்று சொல்வதை. எப்பொழுதும் உடனுறையும் நிலையைத் தலைவி விரும்பினாளாக, அதற்கு ஏற்றது வரைந்து கொண்டு இல்லறம் நடத்துதலேயாதலின் அக்கருத்தை வெளியிடும் சொல்லை, ‘நசையாகு பண்பின் ஒரு சொல்’ என்றாள். தலைவன் வரைந்து கொள்வேன் என்று கூறும் வழக்கத்தை, ஐங்குறுநூறு, 92-ஆம் செய்யுளும் அதன் உரையும் விளக்கும். ஒரு சொல் - ஒப்பற்ற சொல்; ‘ஒரு சொல் இசையாது கொல்லோ’ என்ற சொற்கிடக்கை, ‘பல சொல்லி நயப்புணர்த்திப் பாராட்டும் தன்மை யினருக்கு இவ்வொருசொல் அரிதன்றே’ என்னும் குறிப்பையும் புலப்படுத்தியது.

    அன்னம் என்று பிரித்து, அன்னமானது காதலருக்கு ஒரு சொல்லை இசையாதுகொலென்பதும் ஒருவாறு பொருந்தும்; ஆயினும் சிறப்புடைய தன்று.அன்னம் தூது செல்லல் : திருச்சிற்.191.

    ஓகாரமும் ஏகாரமும் அசைநிலை.

    ஒப்புமைப் பகுதி 1. தாதிற் செய்த பாவை:“தாதுசெய் பாவை” (அகநா.392:6.) செய்த பாவை: “செய்வுறு பாவை” (குறுந்.195:6.) தலைவியின் பாவை: குறுந். 114:1, 276:1, 278:3. 3. ஓரை ஆயம் :குறுந். 316:5, 401:3; நற். 68:1, 143:3; புறநா. 176:1.

(48)