(பி-ம்) 1. ‘ஆர்கலி மிகுத்த’, ‘ஆர்கள’ 2. ‘கூரசைத் தனையையாய்’, ‘சூரசைந்தனையையாய்’ 4. விரிந்திலங்கு’ 5. ‘பரந்தனென’. (ப-ரை.) நரந்தம் நாறும் - நரந்தப்பூவின் மணம் கமழ்கின்ற, குவை இரு கூந்தல் -தொகுதியாகிய கரிய கூந்தலையும், நிரந்து இலங்கு வெள் பல் - வரிசையுற்று விளங்கும் வெள்ளிய பல்லையுமுடைய, மடந்தை -மடந்தையே, ஆர் களிறு மிதித்த நீர் - தன்பால் பொருந்திய யானைகள் மிதித்தமையால் உண்டாகிய பள்ளத்தில் தங்கிய நீர், திகழ் சிலம்பில் - விளங்கும் மலைப் பக்கத்திலுள்ள, சூர்நசைந் தனையையாய் - தெய்வத்தால் விரும்பப் பெற்றாளைப் போன்றவளாகி, நடுங்கல் கண்டு - நீ நம் கற்புக்கு ஏதம் வருமோவென்று அஞ்சி நடுங்குதலையறிந்து, யான் - நின் வருத்தத்தைப் பொறாத யான், இறை இறை -சிறிது சிறிதாக, பரிந்தனென் அல்லனோ - அப்பொழுதப் பொழுது இரங்கி வருந்தினேனல்லனோ?
(முடிபு) மடந்தையே, நீ நடுங்கல் கண்டு யான் பரிந்தனென் அல்லனோ?
(கருத்து) நின் துயர் கண்டு ஆற்றாமல் யான் அறத்தொடு நின்றேன்.
(வி-ரை.) களிறு மிதித்த இடம் பள்ளமாதலும் அங்கே நீர் தங்குதலும், “விலங்குமலைக் கவாஅற், கரும்புநடு பாத்தியன்ன, பெருங்களிற் றடிவழி நிலைஇய நீரே” (குறுந். 262:6-8) என்பதனாலும் உணரப்படும். சிலம்பிற் சூரென்றது மலைப் பக்கத்தில் வாழுந் தெய்வங்களை; அவர் வரையர மகளிரெனப்படுவர்; “சூரர மகளி ராரணங் கினரே.......... நீவர லாறே” (பழம்பாடல்), “மூப்புடை முதுபதி தாக்கணங் குடைய” (அகநா. 7:4) என்பவற்றைக் காண்க; சிலம்பிற்சூர் - முருகனுமாம், காப்பு மிகுதியினாலும் தாயர் வெறியாட்டெடுக்க விரும்பியதனாலும் தலைவி நடுங்கினாள். நரந்தம்: இதனை நாரத்தம்பூ வென்பர் நச்சினார்க்கினியர் (குறிஞ்சிப். 94, உரை.) ஐவகையாகப் பகுக்கப் படுவதாதலின், ‘குவையிருங் கூந்தல்’ என்றாள்; ‘குவையிருங் கூந்தல் - குவிந்த கரிய கூந்தல்’ (புறநா. 25:14, உரை.) குவையிருங் கூந்தலும் நிரந்திலங்கு வெண்பல்லும் உடைமை, தலைவி பேதைப்பருவம் நீங்கிப் பெதும்பைப் பருவம் முதிர்ந்து மணம் செய்தற்குரிய நிலையினள் என்பதை அறிவிக்கும்; குறுந்.337.
பரிதல் - இரங்கி அறத்தொடு நிற்றல். இறை இறையென்றது பலமுறை வருந்தினமையைக் குறித்தது.
ஏகாரங்கள் அசைநிலை.
(மேற்கோளாட்சி) 1.மிதித்த: செய்தவென்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம் காரண காரியப் பொருளில் வந்தது (தொல். வினை.37,ந.); இவ்வெச்சம் செயப்படுபொருள் விகற்பமாகும். (தொல்.வினை.36, கல்.) மு. தோழி கூறிய சொற்கேட்டு வரைவுடம்படுதற்கண் தலைவிக்குக் கூற்று நிகழ்ந்தது. (தொல். களவு. 17, இளம்.)
ஒப்புமைப் பகுதி 2. தெய்வமேறினார் நடுங்குதல்: (குறுந். 105:3-5); “சூருறு மஞ்ஞையி னடுங்க” (குறிஞ்சிப்.169); “சூரமை நுடக்கம்” (ஐங், 71:1); “சூருறு மஞ்ஞையின்....... அதிர்வனர் நடுங்கி” (பெருங்.1.44:22-4): “நீ கண்டனை” (திருச்சிற்.84.தஞ்சை.40, 44).
4. குவையிருங் கூந்தல்: குறுந். 300:1. நரந்தம் நாறும் கூந்தல்: “நரந்தநா றிருங்கூந்தல்” (கலி.54:5); “விளங்கிழை மகளிர் கூந்தற் கொண்ட, நரந்தப் பல்காழ்க் கோதை” (புறநா. 302:3-4); குறுந். 272:8
3. மு.அகநா.266:4.
(52)