கோப்பெருஞ்சோழன். (பி-ம்) 1. ‘மகிழ்நனை நறிய’ 2. ‘நனைமுது’ 4. ‘வெண்பொரி’ 6. ‘நேரிழை’.
(ப-ரை.) மகிழ்ந - தலைவனே, முன்றில் - முன்னிடத்திலுள்ள, நனைமுதிர் புன்கின் பூ - அரும்பு முதிர்ந்த புன்க மரத்தின் மலர்கள், தாழ் - உதிர்ந்து பரந்து தங்கிய, வெண்மணல் - வெள்ளிய மணற்பரப்பினது, வேலன் புனைந்த - வேலனால் அமைக்கப்பட்ட, வெறி அயர் களந்தொறும் - வெறியாட்டெடுக்கும் இடந்தோறும், செ நெல் வான் பொரி - செந்நெல்லினது வெள்ளிய பொரி, சிதறி அன்ன - சிதறினாற் போன்ற தோற்றத்தைத் தரும், எக்கர் நண்ணிய - மணல் மேடுகள் பொருந்திய, எம் ஊர்வியல் துறை - எம்முடைய ஊரிலுள்ள அகன்ற நீர்த்துறையில், நேர் இறை முன் கை பற்றி - நுண்ணிய மூட்டுவாயையுடைய முன் கையைப் பிடித்து, சூரரமகளிரொடு உற்ற - தெய்வமகளிரைச் சுட்டிக் கூறிய, சூள் - சத்தியம், எம் அணங்கின - எம்மைத் துன்புறுத்தின.
(முடிபு) மகிழ்ந, எம்மூர் வியன்றுறையில் நீ உற்ற சூள் எம்மை அணங்கின.
(கருத்து) நீ உன் உறுதிமொழிக்கேற்ப விரைவில் மணம் செய்து கொள்ள வேண்டும்.
(வி-ரை.) சூள் பலமுறை செய்யப்பட்டனவாதலின் அணங்கின வென்று பன்மையாற் கூறினள். வெண்மணலென்றது எக்கரின் ஒரு பகுதி. வேலன் - வெறியாட்டெடுப்பவன்; இவன் படிமத்தானென்றும் கூறப்படுவான்; முருகனைப் பூசை பண்ணும் தொழிலினன்; தன் கையில் வேலையுடைமையின் இப்பெயர் பெற்றான். வெறியயர்தல் - மறியறுத்துக் குரவையாடி முருகனை வழிபடுதல். அங்ஙனம் வெறியயருங் களத்திற் பொரி சிதறுதல் உண்டென்பது, “செந்நூல் யாத்து வெண்பொரி சிதறி” (முருகு.231) என்பதனாலும் அறியப்படும். மணலையுடைய எக்கர். சூளாவது, “நின்னை விரைவில் மணம் செய்து கொள்வேன்” என்றது; “நேரிறை முன்கை பற்றி நுமர்தர, நாடறி நன்மண மயர்கஞ் சின்னாள், கலங்க லோம்புமின்” (குறிஞ்சிப். 231-3) என்பதைப் பார்க்க.
சூள் அணங்குதலாவது அதை நினைந்து, ‘இன்னும் வரைந்திலரே!’ என்று வருந்துதற்கு ஏதுவாதல். சூள் செய்தாரையே அச்சூளாற் குறிக்கப் படும் தெய்வம் வருத்துவது மரபு (பரி. 8: 65-6); அஃது எம்மையும் அணங்கிற்று என்றது, அதனால் உண்டான வருத்தமிகுதியையும் அதனை நிறைவேற்றுதற்கண் விரைந்து மேற்கொள்ள வேண்டும் முயற்சியையும் அறிவுறுத்தியவாறு.
பார்வைக்கும் பயிலுதற்கும் இனிமை தருதற்குரியதாகிய புன்கமலர் பரந்த மணற்பரப்பு, அஞ்சுதற்கேதுவாகிய தோற்றத்தைத் தரும் துறை யென்றமையால், விரைந்து மணம் செய்வாயென்னும் தெளிவைத் தந்து இனிமை பயப்பதற்குரியனவாகிய நின்சூள் இப்பொழுது வருத்தத்தைத்தருவனவாயினவென்னும் குறிப்புப் புலப்பட்டது.
ஏகாரங்கள் அசை நிலை.
(மேற்கோளாட்சி) 7. குறிஞ்சிக்கருப்பொருளில் ஒன்றாகிய தெய்வத்தின் வகை சூரரமகளிர் (தொல். அகத். 5, ந.)
மு. தலைமகன் சூளுற்ற சூளுறவிற் சோர்வு கண்டு அழிந்து தோழி கூறியது (தொல். கற்பு.9., இளம்.); தீராத் தேற்றத்தைப் பின்னொரு கால் தலைவி தேர்ந்து தெளிவொழித்துக் கூறியது (தொல். களவு. 10, ந.11, இளம்.).
ஒப்புமைப் பகுதி 1. எம் அணங்கின: குறுந். 119:4.
3. வேலன் வெறியயர் களம்: “வேலன் றைஇய வெறியயர் களனும்” (முருகு.222); “வேலன், வெறியயர் வியன்களம்” (அகநா.98: 18-9); “வெறியயர் வெங்களத்து வேன்மகன்’’ (நாலடி. 16); ‘’வேலனார் வந்து வெறியாடும் வெங்களத்து” (சிலப். குன்றக்.) வெறிக்களம்: மலைபடு. 150: குறிஞ்சிப்: 175. 2-3. பலமலர்கள் நிறைந்த இடம் வெறிக்களம் போலத் தோன்றுதல்: குறுந்.318:1-3. 2-4. புன்கின் மலருக்குப் பொரி: “பொரிப்பூம் புன்கு” (குறுந்.341:2; நற்.9:5; ஐங்.347:3, 368:2); பொரியுரு வுறழப் புன்குபூ வுதிர” (கலி.33:11); “பொரியெனப், புன்கவி ழகன்றுறை” (அகநா. 116:5-6); “புன்கு பொரிமலரும் பூந்தண் பொழிலெல்லாம்” (திணைமொழி. 14); “பொங்கர் வெண்பொரி சிந்தின புன்கு” (சிலப்.12: ‘செம்பொன்’); “பேசிற் செந்தலைய வெண்கறைய புன்கம் பொரியணிந்தனவே” (சீவக. 1649); “பொரியணிந்து புன்குதிர்ந்து பூநாறுந் துறையெல்லாம்”, “பொரிவிரிவன புதுமலரன புன்குதிர்வன புறனே” (சூளா. 4:56, 6:1); “மிகவுடைய புன்குமலர்ப் பொரியட்ட மணஞ் செய்யு மிழலை யாமே”, "பொரியேர் புன்கு சொரி பூஞ்சோலைப் புத்தூரே” (தே. திருஞா.)
4. வெண்பொரி சிதறி: முருகு.231.
5. எக்கர் நண்ணிய துறை: குறுந்.349:2-3.
6. நேரிறை முன்கை: ஐங்.493:4; குறிஞ்சிப்.231; கலி.51:10; மணி. 18: 130-33. 7. தலைவன் களவுக்காலத்திற் சூளுறுதல்: குறுந். 36:5: ஒப்பு.137: மு.6-7.முன்கைபற்றிச் சூளுறுதல்:“அரிய வஞ்சினஞ் சொல்லியும் பன்மாண், தெரிவளை முன்கை பற்றியும்” (அகநா. 175:7-8.) 5-7.துறையிற் சூளுறுதல்: ஐங்.53:1-4.சூள்: குறுந். 238:5, 384:4; ஐங். 31; கலி.75:21.
(53)