(கார்காலம் வந்தபின்பும் தலைவன் வாராமையால் வருந்திய தலைவியை நோக்கி, "இப்போது பெய்யும் மழை பருவமல்லாத காலத்துப் பெய்வது; இதைக் கார்காலத்துக்குரியதென்று மயங்கிக் கொன்றை மரங்கள் மலர்ந்தன. ஆதலின் இது கார்ப்பருவமென்று நீ வருந்தற்க" என்று தோழி கூறியது.)
 66.   
மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை 
    
கல்பிறங் கத்தஞ் சென்றோர் கூறிய 
    
பருவம் வாரா வளவை நெரிதரத் 
    
கொம்புசேர் கொடியிண ரூழ்ந்த 
5
வம்ப மாரியைக் காரென மதித்தே. 

என்பது பருவங்கண்டு அழிந்த தலைமகளைத் தோழி பருவமன்றென்று வற்பறீஇயது.

    (பருவம் - இங்கே கார்காலம். வற்புறீஇயது - வற்புறுத்தியது.)

கோவதத்தன் (பி-ம். கோவத்தன்).

    (பி-ம்.) 1. மடவை; 4. கொடியிணர் பூத்த; 5.வம்பு.

    (ப-ரை.) கல் பிறங்கு அத்தம் சென்றோர் - கற்கள் விளங்கும் பாலைநிலத்து அருவழியைக் கடந்து சென்ற தலைவர், கூறிய - மீண்டு வருவேனென்று சுட்டிக் கூறிய பருவம் - கார்ப்பருவம், வாரா அளவை - வாராத காலத்திலே, வம்ப மாரியை - பருவமல்லாத காலத்துப் பெய்யும் மழையை, கார் என கார் என - கார் காலத்து மழையென்று, மதித்து - கருதி, நெரிதர - நெருங்கும்படி, கொம்புசேர் கொடி இணர் ஊழ்த்த - சிறு கொம்புகளிற் சேர்ந்த ஒழுங்காகிய பூங்கொத்துக்களைப் புறப்பட விட்டன; ஆதலின், தடவு நிலை கொன்றை - பரந்த அடியையுடைய கொன்றை மரங்கள், மன்ற - நிச்சயமாக, மடவ - பேதைமையையுடைய.

    (முடிபு) பருவம் வாரா அளவை வம்பமாரியைக் காரென மதித்து இணர் ஊழ்த்த; அதனாற் கொன்றை மடவ.

    (கருத்து) இது கார்ப்பருவம் அன்று; ஆதலின் நீ வருந்தற்க.

    (வி-ரை.) தலைவி, "கார்ப்பருவம் வந்துவிட்டது; மழை பெய்கின்றது; கொன்றையும் பூத்தன; இன்னும் அவர் வந்திலர்" என்று கூறி இரங்கினாளாதலின், 'இது கார் காலமன்று' என்று வற்புறுத்துந் தோழி தலைவிகூற்றை மறுப்பாளாய், " இம்மழை வம்ப மாரி; இதைக்கண்டு அறியாமையால் கொன்றைகள் பூத்தன" என்றாள். இங்ஙனம் பருவத்தைத் தெரிவிக்கும் பொருள்களின் மேல் அறியாமையை ஏற்றிக் கூறும் மரபு, "பெருந்தண் மாரிப் பேதைப் பித்திகத், தரும்பே முன்னு மிகச்சிவந் தனவே", "மடவ வாழி மஞ்ஞை" (குறுந். 94:1-2, 251:1) என்று பின்னும் வந்துள்ள செய்யுட் பகுதிகளால் உணரப்படும். கல்-மலையுமாம். கொன்றையின் மலர்கள் நீண்ட கொத்தாக இருத்தலின், 'கொடியிணர்' என்றாள். கொன்றை கார்காலத்தில் மலர்வது. ஊழ்த்த - செவ்வியழிந்த: குறுந்.110:5; கலி. 27; அகநா. 10:2.

    மதித்தே: ஏகாரம், அசைநிலை.

    (மேற்கோளாட்சி) 5. வம்பு என்னும் உரிச்சொல் நிலையின்மைப் பொருள் குறித்து வந்தது (தொல். உரி. 31, சே. தெய்வச்.59, ந.; இ.வி. 290).

    மு. தலைவிக்குத் தோழி பருவம் அன்றென்றது (தொல் .அகத். 42, இளம்.); பருவமன்றென்று வற்புறுத்தலின் இச்செய்யுள் இருத்தல் நிமித்தமானது (தொல். அகத்.14, ந.); பருவமன்றெனத் தோழி படைத்து மொழிந்தது (தொல் .கற்பு. 9, ந.).

    ஒப்புமைப் பகுதி 3. தடவுநிலை: குறுந். 219:6.

    2. கல்பிறங்கத்தம்: அகநா.7:14, 79:16; சிலப். 16:57; மணி. 13:39; குறுந். 174:4.

    1-4. கொன்றையின் கொடியிணர்: "புழற்காய்க் கொன்றைக் கோடணி கொடியிணர்" (நற். 266:4); "கொன்றை கொடியிணரூழ்ப்ப" (பரி. 8:24).

    5. வம்பமாரி: "வம்பப் பெரும்புயல்" (புறநா. 325:2); "வம்பார் குன்றம்" (தே.திருஞா. திருக்குற்றாலம்). 1-5. கொன்றை கார் காலத்தில் மலர்தல்: குறுந். 21:3-4, ஒப்பு.

 மு. 
"நீரற வறந்த நிரம்பா நீளிடைத்  
  
 துகில்விரித் தன்ன வெயிலவி ருருப்பின் 
  
 அஞ்சுவரப் பனிக்கும் வெஞ்சுர மிறந்தோர்  
  
 தாம்வரத் தெளித்த பருவங் காண்வர  
  
 இதுவோ வென்றிசின் மடந்தை மதியின்று 
  
 மறந்துகடன் முகந்த கமஞ்சூன் மாமழை  
  
 பொறுத்தல் செல்லா திறுத்த வண்பெயல் 
  
 காரென் றயர்ந்த வுள்ளமொடு தேர்வில 
  
 பிடவுங் கொன்றையுங் கோடலும் 
  
 மடவ வாகலின் மலர்ந்தன பலவே"              (நற். 99.)  
(66)