அள்ளூர் நன்முல்லை. (பி-ம்) 3.புதுநூனுழைப்பான்.
(ப-ரை.) தோழி---, கிள்ளை - கிளி, வளை வாய் கொண்ட - வளைந்த அலகினிடத்திலே கொண்ட, வேப்ப ஒள் பழம் - வேம்பினது ஒள்ளிய பழமானது, புது நாண் நுழைப்பான் - புதிய பொற்கம்பியை ஊடு செலுத்தும் பொற்கொல்லனது, நுதிமாண் வள் உகிர் - முனை மாட்சிமைப்பட்ட கூரிய கைந்நகத்திற் கொண்ட, பொலம் கலம் ஒரு காசு ஏய்க்கும் - பொன்னாபரணத்திற்குரிய ஒரு காணை ஒக்கும், நிலம் கரி - நிலம் கரிந்துள்ள, கள்ளியங்காடு - கள்ளியையுடைய பாலை நிலத்தை, இறந்தோர் - கடந்து சென்ற தலைவர், உள்ளார் கொல் - என்னை நினையாரோ?
(முடிபு) தோழி, காடிறந்தோர் உள்ளார்கொல்?
(கருத்து) தலைவர் என்னை மறந்தனர் போலும்!
(வி-ரை.) கிளியின் அலகுக்குக் கைவிரல் நகங்களும், வேப்பம் பழத்திற்கு உருண்டையான பொற்காசும் உவமைகள். காசைப் பற்றுதற்குரிய தகுதியுடையதைப் புலப்படுத்தி, 'நுதிமாண் வள்ளுகிர்' என்றாள். ஒருவகைப் பொற்காசு உருண்டை வடிவமாகவும் இருந்ததென்பது,
| "காசி னன்ன போதீன் கொன்றை" |
| ".... புன்கா லுகாஅய்க் |
| காசினை யன்ன நளிகனி" (குறுந். 148:4, 274:1-2) |
| "பொன்செய் காசி னெண்பழந் தாஅம் |
| குமிழ்" (நற். 274:4-5) |
என்பவற்றாலும் அறியப்படும். பொன்னென்பது செய்யுளிற் பொல மென்றாயிற்று. பொலங்கலமென்றது இங்கே காசு மாலையை. வெம்மையால் நிலங்கரிந்தது.
வேம்பும் கள்ளியும் பாலைநிலக் கருப்பொருள்கள்.
கள்ளியங்காடு: அம், சாரியை. ஓகாரமும் ஏகாரமும் அசைநிலை.
உள்ளார் கொல்லென்றது நினைத்தால் வந்திருப்பரென்னும் நினைவிற்று.
ஒப்புமைப் பகுதி 1. உள்ளார் கொல்லோ தோழி: குறுந். 16:1, ஒப்பு. 1-2. கிளியின் வளைந்த வாய்: "வளைவாய்ச் சிறுகிளி" (குறுந். 141:1); "கிளிவா யொப்பின்" (குறுந். 240:2); "வளைவாய் கிள்ளை" (பெரும் பாண். 300).
3-4. காசை நாணிற் கோத்தல்: "நாண்வழிக் காசு போலவும்" (இறை.2, உரை).
1-5. கள்ளியங் காடிறந்தோர் உள்ளார் கொல்: குறுந். 16:1-6.
(67)