அள்ளூர் நன்முல்லை. (பி-ம்) 3.அரும்பனியற்சிரம்.
(ப-ரை.) பூழ் கால் அன்ன - குறும்பூழ்ப் பறவையின் காலைப் போன்ற, செ கால் உழுந்தின் - செவ்விய காலையுடைய உழுந்தினது, ஊழ்ப்படு முதுகாய் - மிக முதிர்ந்த காய்களை, உழை இனம் கவரும் - மான்கூட்டங்கள் தின்னும்பொருட்டுக் கொள்ளும், அருபனி - பொறுத்தற்கரிய பனியையுடைய, அச்சிரம் தீர்க்கும் - முன்பனுக்காலத்தால் உண்டாகும் துன்பத்தைப் போக்கும், மருந்து - பரிகாரம் அவர் மணந்த மார்பே - என்னை மணந்த அவருடைய மார்பேயாகும்; பிறிது இல்லை - வேறு இல்லை.
(முடிபு) அச்சிரந் தீர்க்கும் மருந்து அவர் மணந்த மார்பே; பிறிதில்லை.
(கருத்து) அவர் உடன் இராமையால் இம் முன்பனிப் பருவம் எனக்குத் துன்பம் தருவதாயிற்று.
(வி-ரை.) உழுந்தின் வேர் சிறிது மேலே தெரிந்த அடிக்குப் பூழ்க்கால் உவமை. அச்சிரம் - முன்பனிக்காலம் (பரி. 18:38; சிலப். 14:105);இஃது அற்சிரமெனவும் வழங்கும். உழுந்து பயறு முதலியன முன்பனிப் பருவத்தில் முதிர்வன; "இரும்பனிப் பருவத்த மயிர்க்கா யுழுந்து" (நற். 89:5); "பற்றுவிடு விரலிற் பயறுகா யூழ்ப்ப, அற்சிர நின்றன்றாற் பொழுதே" (அகநா. 339: 4-5). அச்சிரம்: ஆகுபெயர். மருந்து - பரிகாரம்; "மருந்தில் கூற்றம்" (புறநா. 3:12, உரை). அவர்: தலைவர்; நெஞ்சறி சுட்டு. அம்மார்பு மருந்தாதலை முன்னர் அறிந்தேனென்பாள் 'மணந்த மார்பு' என்றாள். மார்பே: ஏகாரம் பிரிநிலை.
ஒப்புமைப் பகுதி 1. நற். 89:5.
3.அரும்பனி யச்சிரம்: (குறுந். 76:6, 82:6, 277:4, 338:5); "கடும் பனியற்சிரம்" (நற். 86:4); "அரும்பனி யளைஇய வற்சிரக் காலை" (ஐங். 470:2).
தலைவரைப் பிரிந்திருப்போர் அச்சிரத்தால் துன்புறல்: (குறுந். 76:6); "காதலர்ப் பிரிந்தோர் கையற நலியும், தண்பனி வடந்தை யச்சிரம்" (ஐங். 223:3-4); "வாடை தூக்கும் வருபனியற்சிரம், நம்மில் புலம்பிற் றம்மூர்த் தமியர், என்னா குவர்கொ லளியர்", "தண்பனி யற்சிரந் தமியோர்க் கரிதென", "அற்சிரத் தூதை தூற்றப், பனியலைக் கலங்கிய நெஞ்சமொடு, வருத்துவ மல்லமோ பிரிந்திசினோர் திறத்தே", "அகன்றுறை மகளி ரணி துறந்து நடுங்க, அற்சிரம் வந்தன்று" (அகநா. 78:10-12, 178:19, 183:13-5, 217:12-3).
4. மருந்து பிறிதில்லை: நற். 80:9, 140:11, 247:9; கலித்.60:21; அகநா. 147:14.
தலைவன் மார்பு தலைவிக்கு இன்பம் பயத்தல்: (குறுந். 73:1, 80:7, 247:6-7, 248:1-2, 339:3-5) "மகிழ்நன் மார்பிற்றுஞ்சி", "மார்பு றப்படுத்தல்" (நற். 20:2, 171:11); "கழனி யூரன் மார்பு, பழன மாகற்க", "ஊரன் மார்பே, பனித்துயில் செய்யு மின்சா யற்றே" (ஐங். 4:5-6, 14:3-4).
(68)