(தலைவனது பிரிவைத் தலைவியிடம் உணர்த்தச் சென்ற தோழியை நோக்கி, "நான் அச்சிரக் காலத்தில் துன்புறும்படி தலைவர் பிரிவாரென்று முன்பே அறிந்தேன்; நீ சொல்வது மிகை" என்று கூறித் தலைவி புலந்தது.)
 76.    
காந்தள வேலி யோங்குமலை நன்னாட்டுச்  
    
செல்ப வென்பவோ கல்வரை மார்பர் 
    
சிலம்பிற் சேம்பி னலங்கல் வள்ளிலை 
    
பெருங்களிற்றுச் செவியின் மானத் தைஇக் 
5
தண்வரல் வாடை தூக்கும் 
    
கடும்பனி யச்சிர நடுங்கஞ ருறவே. 

என்பது பிரிவுணர்த்தச் சென்ற தோழிக்கு அவர் பிரிவு முன்னர் உணர்ந்த தலைமகள் சொல்லியது.

கிள்ளிமங்கலங்கிழார்.

    (பி-ம்) 2.செல்வ, னென்ப வோங்கல்வரை மார்பன், செல்வ வென்பவே, என்பநங்கல்வரை, என்பவோங்கல் வெற்பர்; 4.தைஇய; 5.தூங்கும்; 6.யற்சிரம்.

    (ப-ரை.) தோழி---, சிலம்பில் சேம்பின் அலங்கல் வள் இலை - மலைப் பக்கத்திலுள்ள சேம்பினது அசைதலையுடைய வளவிய இலையை, பெரு களிறு செவியின் மான - பெரிய களிற்றினது செவியை ஒப்பத் தோன்றும்படி, தைஇ - தடவி, தண்வரல் வாடை - தண்ணிய வரவையுடைய வாடைக் காற்று, தூக்கும் - அசைத்தற்குரிய, கடு பனி அச்சிரம் - மிக்க பனியையுடைய அச்சிரக்காலத்தில், நடுங்கு அஞர் உற - நடுங்குதற்குக் காரணமாகிய துன்பத்தை நான் அடையும்படி, கல் வரை மார்பர் - கற்களையுடைய மலையைப் போன்ற மார்பையுடைய தலைவர், காந்தள் வேலி ஓங்கு மலை நல்நாட்டு - காந்தளை வேலியாகவுடைய உயர்ந்த மலை பொருந்திய நல்ல நாட்டிடத்து, செல்ப என்ப - என்னைப் பிரிந்து போவாரென்று கூறுகின்றனர்.

     (முடிபு) அச்சிரக் காலத்தில் அஞருறக் கல்வரை மார்பர் செல்ப வென்ப.

     (கருத்து) தலைவர் பிரிவை முன்னரே உணர்ந்தேன்; அவர் பிரியின் நான் துன்புறுவேன்.

     (வி-ரை.) இயல்பாக வளர்ந்த காந்தளை வேலியாக உடைய மலைநாடு. என்ப வென்றாமையால் தான் முன்னரே அறிந்தமையை விளக்கினாள். சிலம்பிற் சேம்பு: மலைச்சேம்பென்று ஒருவகைச் சேம்பு உண்டு. தூக்கும் - அசைக்கும் (கலி. 84:1, உரை.) கடும்பனி - புதுப் பனியுமாம். அச்சிரம் - முன்பனி.

     ‘தலைவர் செல்வதைத் தடுப்பது நின் கடமையாக இருப்ப, அதைச் செய்யாமல் அயலாரைப் போல அவர் பிரிவை உணர்த்த வந்தது தகுதியன்று’ என்பது தலைவியின் கருத்து; ‘அழுங்குவித்து வந்து கூறற்பாலையாய நீயும் இவ்வளைகள் செய்தனவே செய்தாயெனப் புலந்து கூறியவாறு’ (குறள். 1157, பரிமேல்.) என்பது இக்கருத்தை வலியுறுத்தும். என்பவோ: ஓகாரம் இரக்கக் குறிப்பு; அசைநிலையுமாம். செவியின்மான: உவமவுருபு ஐந்தனுருபோடு வந்தது (குறுந். 9:6.) உறவே: ஏ அசைநிலை.

    ஒப்புமைப் பகுதி 1. காந்தள்வேலி மலைநாடு: குறுந். 245:3-4; “கைம்மலர்க் காந்தள் வேலிக் கணமலை” (சீவக. 208.)

    3. சிலம்பிற் சேம்பு; அகநா. 178:4 3-4. பெரிய இலைக்குக் களிற்றுச் செவியை உவமை கூறுதல் மரபு: குறுந். 246:2; நற்.310:2.

    5. தண்வரல் வாடை: குறுந்.35:5, ஒப்பு.

    6. கடும்பனி யச்சிரம்: குறுந். 68:3, ஒப்பு. 82:6; நற். 86:4; சிலப். 14:102-5. 5-6. வாடையும் பனியும்: “தண்பனி வடந்தை யச்சிரம்” (ஐங். 223:4); “பனிகடி கொண்ட பண்பில் வாடை”, “வடந்தை தூக்கும் வருபனி யற்சிரம்” (அகநா. 235:15, 378:13). 2-6. தலைவன் பிரிவினால் அச்சிரக் காலத்தில் தலைவி துன்புறல்: குறுந். 68:3. ஒப்பு.

(76)